Saturday, 26 August 2023

சார்லஸ் மீட் || மிஷனரிகளின் வாழ்க்கை வரலாறு ||

 மிஷனரிகளின் வாழ்க்கை வரலாறு


சார்லஸ் மீட்


 (1782-1873)


இங்கிலாந்து தேசத்தில் கிளவ்செஸ்டர் மாநிலத்தில் பிரிஸ்டல் என்னுமிடத்தில் பக்தியாக பெற்றோருக்கு மகனாக 1782 ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் நாள் சார்லஸ் மீட் பிறந்தார்.


இங்கிலாந்து தேசத்தில் Dr. Bogue வாலிபர்கள் மத்தில் மிஷனெரி தரிசனத்தை பகிர்ந்துகொண்டு இருந்தபோது 22 வயது வாலிபனான சார்லஸ் மீட், மிஷனரி பணிக்கு ஆண்டவர் தன்னை அழைப்பது உணர்ந்து டாக்டரிடம் தன்னை ஆண்டவர் இந்தியாவில் ஊழியம் செய்ய அழைப்பது உணர்வதாக கூறினார்.


டாக்டர் போக் சார்லஸை உற்சாகப்படுத்தி காஸ்போர்ட் என்ற இடத்தில் உள்ள வேதாகம கல்லூரியில் சேர்ந்து படிக்க உதவி செய்தார். பயிற்சி முடிந்ததும் 1816 ஆம் ஆண்டில் இங்கிலாந்து திருச்சபையில் குருவானவராக பிரதிஷ்டை செய்யப்பட்டார்.


இந்நிலையில் லண்டன் மிஷனரி சங்கத்தாரால் இந்தியாவில் திருவிதாங்கூர்  சமஸ்தானத்திற்கு நற்செய்திபணி செய்ய அனுப்பப்பட்டு, மருத்துவ வசதி இல்லாததாலும், தட்பவெப்பநிலை சரியாக இல்லாததினாலும் சுகவீனம் ஆகி, இங்கிலாந்துக்கு திரும்பும் ரிங்கல் தொபே யின் ஊழியங்களை தொடர்ந்து நடந்த சார்லஸ் மீட் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் இங்கிலாந்தில்  குருவானவர்  ஹண்ட் என்பவரின் மகளை திருமணம் செய்து 1816 ஆம் ஆண்டு இந்தியாவில் நற்செய்திபணி செய்ய பயணமானார்.


நான்கு மாத கடல் பயணத்திற்கு பின் சென்னை துறைமுகத்திற்கு  வந்த சார்லஸ் மீட் வெயிலின் கொடுமையை தாங்கமுடியாமல் சுகவீனம் ஆனார். ஆகவே சென்னையில் ஒரு ஆண்டு தங்கியிருந்து தமிழ்மொழியை படிப்பதிலும், மிஷனெரிபணி செய்வதிலும் செலவழித்தார். அப்பொழுது அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.


பின்னர் சுகம் பெற்ற சார்லஸ் மீட் ஐயர் தன் மனைவி மற்றும் குழந்தையோடு 1817 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் செல்ல சென்னையிலிருந்து கப்பல் ஏறினார். பிரசவத்திற்கு பின் பலவீனமாக இருந்த திருமதி. மீட் பயணத்தில் அதிக வியாதிப்பட்டு பினாங்க் என்ற இடம் சேரும் பொழுது கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்.


அந்நிய தேசத்தில் மிஷனரிப் பணி செய்ய ஆவலாய் புறப்பட்டு வந்த சார்லஸ் மீட் ஐயருக்கு தாங்கொனா வேதனையாய் இருந்தது. ஆயினும் கிறிஸ்துவுக்குள் ஆறுதல் அடைந்து, கலப்பையில் கை வைத்த பின்பு பின்னிட்டுப் பார்க்காது தன்னை அழைத்தவர் இறுதிவரை நடத்துவார் என்று விசுவாசித்து கைக்குழந்தையுடன் குளச்சல் துறைமுகத்திற்கு கப்பலேறி, தனக்கு குறிக்கப்பட்ட மயிலாடி மிஷனெரி பணி தளத்திற்கு வந்து சேர்ந்தார். 


மயிலாடி பகுதியில் ரிங்கல் தொபே ஐயர் ஏற்படுத்தி இருந்த ஏழு திருச்சபைகளை, வேதமாணிக்கம் உபதேசியார் மிகவும் கண்ணும் கருத்துமாக கட்டிக்காத்து திருச்சபையின் பொறுப்புகளை சார்லஸ் மீட் ஐய்யரிடம் ஒப்படைத்தார்.


இந்தியாவில் தென்கோடியில் இருக்கும் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் உயர் ஜாதி மற்றும் தாழ்ந்த ஜாதி என்ற பிரிவினையால் தாழ்த்தப்பட்ட மக்களை தீண்டத்தகாதவர்களாக அடிமைப்படுத்தி வைத்திருந்தார்கள். தாழ்ந்த சாதி மக்களாக கருதப்பட்ட சாணார், சாம்பவர், ஈழவர், சேரமர், குறவர் இனத்தார்  பொது கிணறுகளிலும், குளங்களிலும், உயர்சாதியானர் வசிக்கும் தெருக்களிலும், இந்து கோயில்களிலும், செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. ஏனெனில் அப்படி செல்வதாக இருந்தால் தீட்டுபட்டுவிடுமாம். இவர்கள் அங்கிருந்த பண்ணையார்களுக்கும் நிலச்சுவான்தாரர்களுக்கும், ஜமீன்தார்களுக்கும் அடிமைகளாகவும், கூலிகளாகவும், வேலை செய்து வந்தார்கள். 


திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் தாழ்த்தப்பட்ட இனபெண்கள் அதிகம் இழிவுபடுத்தப்பட்டார்கள். அங்கிருந்த பெண்கள் மார்பை மறைக்க இரவிக்கை அணிவதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. ஆண்கள் இடுப்புக்கு மேலும் முட்டுக்கு கீழும் ஆடை அணிவதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. தேவைப்பட்டால் வைக்கோல் பிரியை எடுத்து சுற்றிக்கொள்ள வேண்டும்.


திருவிதாங்கூர் சமஸ்தான மக்களுக்கு தலைவரி, தாலி வரி, வலை வரி, செக்கு வரி, ஏணிக்கு வரி, அரிவாளுக்கு வரி, மார்புக்கு வரி, குடுவைக்கு வரி என்று பலவகை வரிகளை செலுத்தும்படி நிர்ப்பந்தப் படுத்தப்பட்டு இருந்தனர். இந்த வரிகளை செலுத்தாவிட்டால் குனிந்து நிற்கச்சொல்லி முதுகின்மேல் பாராங்கல்லை தூக்கிவைத்து வெயிலில் பலமணிநேரம் நிற்க வேண்டியதாயிருக்கும்.


சார்லஸ் மீட் ஐயர், கைக்குழந்தையுடன் ஒவ்வொரு திருச்சபைகளிலும், கிராமங்களிலும் சுவிசேஷ பணியை துவக்கினார். புதிய கிராமங்களில் சுவிசேஷம் அறிவித்து, அங்கு ஆராதனை குழுக்களை ஏற்படுத்தி உபதேசிமார்களை நியமித்தார்.


நாகர்கோவிலில் ரெசிடென்ட் அதிகாரி தங்கும் பங்களாவைவையும், தோட்டத்தையும் மிஷனெரிகள் பணிக்கு என்று இங்கிலாந்து ராணியிடம் தானமாகப் பெற்று, அங்கிருந்து நற்செய்தி பணியையும் கல்விப்பணியையும் செய்துவந்தார்.


நாகர்கோவில் மாவட்ட நீதிமன்றத்தில் கிறிஸ்தவரை நீதிபதியாக நியமித்தால் வழக்குகள் நியாயமாக நடைபெறும் என்று ஆங்கிலேய கர்னல் மன்றோ, சார்லஸ் மீட் ஐயரின்  பெயரை இங்கிலாந்து ராணியிடம் பரிந்துரைத்தார்.  இது நல்லது என்ற கண்ட ராணி, சார்லஸ் மீட் ஐயரை மாவட்ட நீதிபதியாக நியமித்தார்.


சுவிசேஷப் பணியில் மத்தியிலும் நீதிபதியாக பணியாற்றுவது மிகுந்த சிரமமாக இருந்தாலும் கிறிஸ்துவுக்குள் மகிமையாகவும், மிகுந்த ஜெபத்துடனும் வழக்குகளுக்கு தீர்ப்பு கூறி மக்களின் பாராட்டை பெற்றார். அதுவரை கிறிஸ்தவர்களை அற்பமாக எண்ணிய உயர்சாதி இனத்தவர்கள், அதுமுதல் கிறிஸ்து மார்க்கத்திற்கு மதிப்புக் கொடுத்து, தங்கள் கிராமத்தில் வந்து கூட்டங்கள் நடத்த அழைப்பு கொடுத்தார்கள்.


சார்ஸ் மீட் ஐயர் வாரத்தில் ஒருநாள் உபதேசியார்களையும் ஆசிரியர்களையும் அழைத்து, வேதாகமத்தை பற்றியும் அடுத்த வாரம் நடத்தவேண்டிய பள்ளி பாடங்களை பற்றியும் பயிற்சி கொடுத்து இறைபணியையும் கல்விப்பணியையும் ஊக்கப்படுத்தினார். இதனால் சுமார் 3000 ஆத்துமாக்கள் கிறிஸ்து மார்க்கத்தில் புதிதாக இணைந்தார்கள்.


திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு இன்னும் அதிக மிஷனெரிகள் தேவை என்பதை உணர்ந்த சார்லஸ் மீட், 1820 ம் ஆண்டு இங்கிலாந்து சென்று அங்கிருந்த திருச்சபைகளில் இந்திய தேசத்திற்கு மிஷனெரிகள் தேவை என்று அறைகூவல் விடுத்தார். பின்னர் தனது மகனுக்கும் தனக்கு ஆதரவாக இருக்க கணவனை இழந்த ஒரு போதகரின் மகளை திருமணம் செய்து புதிதாக 5 மிஷனெரிகளுடன் கொல்லத்திற்கு வந்து சேர்ந்தார்.


மிஷனெரிகள் கிராமம் கிராமமாய் சென்று சுவிசேஷபணி செய்யவும், ஆராதனை நடத்தவும், உபதேசம் செய்யவும் மிகவும் சிரமப்பட்டார்கள். ஏனெனில பிரயாண வசதிகள் மிக குறைவாகவே இருந்தது. குதிரையிலோ அல்லது மாட்டு வண்டியலோ தான் செல்ல வேண்டும். ஆகவே ஒவ்வொரு சபைகளில் இருந்து நற்செய்திபணியில் ஆர்வமுள்ள மாணவர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு கல்வியும் வேத அறிவு புகட்டி உபதேசியார்களாக நியமிக்க வேண்டும் என்று திட்டமிட்டு சார்லஸ் மீட் ஐயர் 1821 இல் நாகர்கோவிலில் வேதாகமக் கல்லூரி ஒன்றை நிறுவினார். இதில் தமிழும் ஆங்கிலமும் வேதாகமும் கற்றுக் கொடுக்கப்பட்டது.


இந்நிலையில் லண்டன் மிஷனெரி சங்கத்தின் மூலம் 1827 இல் நாகர்கோவிலில் 15 சபைகள், 7 உபதேசியார்கள், 1410 விசுவாசிகள், மற்றும் 36 பள்ளிக் கூடங்கள் இருந்தன. அப்படியே நெய்யூர் பகுதியில் 11 சபைகள், 16 உபதேசியார்கள்,  1441 விசுவாசிகள், மற்றும் 20 பள்ளிகள் இருந்தன. இந்த பள்ளிகூடங்களே ஏழைமக்களின் அறிவு கண்களை திறந்தது. இவர்கள் பொருளாதாரத்தில் வளருவதற்கு சார்லஸ் மீட் அச்சு கூடங்களையும், தரை ஓடுகள், கூரை ஓடுகள் தயாரிக்கும் தொழிற்சாலைகளையும் ஏற்படுத்தி கொடுத்தார். 


கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட தாழ்த்தப்பட்ட மக்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆலயத்திற்கு செல்வதால் அன்று வேலைக்கு வர மாட்டோம் என்றும், விக்கிரக கோவிலில் வேலைகளுக்கும் வர முடியாது என்றும் கூறினார்கள். மிஷனெரிகளின் மனைவிமார்கள் அங்கிருந்த பெண்களுக்கு தையல் கலையை கற்றுகொடுத்து வேலைவாப்புகளை உறுவாக்கி அவர்களின் பொருளாதாரத்தை உயர்த்தினார்கள். கிறிஸ்தவ பெண்கள் இரவிக்கை தைப்பதை கற்றுக்கொண்டு மாராப்பு அணிந்து ஆலயத்திற்கு சென்றார்கள். இதற்கு காரணம் கிறிஸ்தவ மிஷனெரிகளும், திருச்சபைகளும் மற்றும் பள்ளிக்கூடங்களும்தான் காரணம் என்று பண்ணையார்கள் நினைத்தார்கள்.


ஆகவே உயர்சாதி பூசாரிகளின் தூண்டுதலின் பேரில் வன்முறையாளர்கள் தென்னை ஓலையினால் கட்டப்பட்டிருந்த  பள்ளிகூடங்களையும், கிறிஸ்தவ ஆலயங்களையும் தீ வைத்து கொளுத்தினார்கள். கிறிஸ்தவ பெண்களின் மேலாடைகள் கிழித்து அவமானப்படுத்தி, மிஷனரிகளையும், உபதேசியார்களையும், ஆசிரியர்களையும் பொது இடங்களில் வைத்து  அடித்து, சித்திரவதை செய்தார்கள். கிறிஸ்தவர்கள் ஆராதனைக்கு வருவதை தடுத்து நிறுத்தி, அவர்களை அடித்து விரட்டி, வேதப் புத்தகங்களை எரித்தார்கள். கிறிஸ்தவர்களின் உடைமைகளை சூரையிட்டும் தீயிலிட்டும் எரித்தார்கள். கிறிஸ்தவர்களுக்கு விரோதமாக பொய்யாக திருட்டு மற்றும் அடிதடி வழக்குகளை புனைந்து சிறையில் அடைத்தார்கள். 


இந்நிலையில் சார்லஸ் மீட் ஐயர் கிறிஸ்தவர்களுக்காக வழக்காடி சிறையிலிருந்தவர்களை விடுவித்தார். இவ்வாறு கிறிஸ்தவர்களுக்கு உதவி செய்து வரும் சார்லஸ் மீட் ஐயரை கொலை செய்ய திட்டம் தீட்டி, ஆயுதமேந்திய 300 பேர் கூடிவந்து  வீட்டை நொறுக்கினார்கள். இதை உதயகிரி கோட்டையில் ஆங்கிலேய கேப்டன் சிபால்ட் அறிந்து, உடனே ஒரு படையை அனுப்பி வன்முறை கும்பலை சிதறடிக்க செய்தார்.


ஒருமுறை தாழக்குடி என்னும் கிராமத்தில் இருந்த பண்ணையார், சாணார் இனத்தை சேர்ந்த ஒரு நிறை மாத கர்ப்பிணியையும், ஒரு காளை மாட்டையும் ஏரில் பூட்டி வயலை உழுதிட கட்டளையிட்டார். அவள் இயன்ற அளவு ஏரை இழுத்தாள். முடியாதபோது விழுந்தாள். விழுந்தவள் மீண்டும் எழும்பாமல் மரித்துப்போனாள். இதைக்கண்டு சார்லஸ் மீட் ஐயர் கொதித்துப்போனார். பெண்களின் உரிமைக்காகவும், தோல் சீலை அணிவதற்கு ஆதரவாகவும் போராட்டம் நடத்தினார். இது 1822 ம் ஆண்டும் 1829 ம் ஆண்டும் கலவரமாக வெடித்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டார்கள். மிஷனெரிகளின் கடும் போராட்டத்தினால் கீழ்சாதி பெண்களும் மேலாடை அல்லது இரவிக்கை அணியலாம் என்று திருவிதாங்கூர் சமஸ்தானம் சட்டத்தை இயற்றியது.


இந்த உபத்திரவத்திற்கு பிறகு, சார்லஸ் மீட் ஐயர் நெய்யூரில் தங்கியிருந்து மிஷனெரி பணி செய்து வந்தார். நெய்யூரில் 1831 ஆண்டு ஆலயம் கட்டப்பட்டது. அங்கு மாணவர்கள் தங்கி படிப்பதற்கு பள்ளிக்கூடமும் விடுதியும் நிறுவப்பட்டது.


இந்நிலையில் சார்லஸ் மீட் ஐயருடைய 3 குமாரர்கள் 1832, 1836, 1838 ம் ஆண்டுகளில் சீதோஷனநிலை சரீயில்லாத காரணத்தினால் ஒன்றன்பின் ஒன்றாக மரித்தார்கள். இது தாங்கமுடியாத துக்கத்தை கொடுத்தாலும் மிஷனெரிபணியை தொடர்ந்து ஊக்கமாக செய்துவந்தார்.


சார்லஸ் மீட் ஐயரின் வேண்டுகோளுக்கு ஏற்ப லண்டன் மிஷனெரி சங்கம்  1339 ம் ஆண்டு  மருத்துவ மிஷனெரி டாக்டர் ராம்சே என்பவரை அனுப்பி வைத்தார்கள்.  ஆகவே நெய்யூரில் மருத்துவமனை அமைக்கப்பட்டு, வியாதியஸ்தர்களுக்கும் சுவிசேஷம் அறிவிக்கப்பட்டது. இன்னும் அநேக மருத்துவ உதவியாளர்களை உறுவாக்க பயிற்சியும் தொடங்கப்பட்டது.  1840 ஆம் வருடத்தில் 1867 கிறிஸ்தவர்களும், நூறு உபதேசியார்களும்,  2703 பள்ளி மாணவர்களும், பதினெட்டு வேதாகம கல்லூரி மாணவர்களும் இருந்தார்கள்.


சார்லஸ் மீட் தனது இறுதி நாட்களில் ஏழை, தாய், தந்தை இழந்த பிள்ளைகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் அநாதை பள்ளிகளுக்கும்,  அச்சு கூடங்களுக்கு  பொறுப்பாக திருவனந்தபுரத்தில் பணிபுரிந்தார். 1873 ஆம் ஆண்டு, ஜனவரி 13 ம் நாள் சார்லஸ் மீட் தனது 87 ம் வயதில் கர்த்தருக்குள் நித்திரையடைந்தார். இன்று தென் திருவித்தாங்கூர் மிஷனின் தந்தை என்று சார்லஸ் மீட் அழைக்கப்படுகிறார். இவருடைய புகழ்பெற்ற வாசகம்: இந்திய கிறிஸ்தவர்களோடு மரிப்பேன் அல்லது அவர்களோடு உயிரோடு இருப்பேன்.


1818 ஆம் ஆண்டு குளச்சல் துறைமுகத்தில் கையில் குழந்தையுடன் வந்திரங்கிய சார்லஸ் மீட் ஐயர் தமது 35 வருட மிஷனெரிபணி மூலம் ஆயிரக்கணக்கான ஆத்துமாக்களை நாகர்கோவிலில் சம்பாதித்தார்.  இன்று உலகம் முழுவதிலும் இந்த ஆத்மாக்கள் மிஷனெரிகளாக, சுவிசேஷகர்களாக, போதகர்களாக, வேதாகம பண்டிதர்களாக புறப்பட்டு சென்று கிறிஸ்துவின் வருகைக்கு அநேக ஆத்துமாக்களை ஆதாயம் படுத்தி வருகிறார்கள்.


இந்த மிஷனெரி சரித்திரத்தை வாசிக்கின்ற  உங்கள் பிள்ளைகளை நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இராஜ்யத்தை கட்டும் இந்த கனமான ஊழியத்தை செய்ய ஒரு கல்வி மிஷனெரியாக, சமுதாய முன்னேற்ற மிஷனெரியாக, மருத்துவ மிஷனெரியாக, சுவிசேஷ மிஷனெரியாக இயேசு கிறிஸ்துவுக்கு சேவை செய்ய அற்பணிப்பீர்களா? ஊக்கப்படுத்துவீர்களா? தேவ இராஜ்யம் உங்கள் மூலமாய் தேவை நிறைந்த இந்திய தேசத்தில் கட்டப்படுவதாக.




(நன்றி:- Gamaliel Bible College..)


Monday, 21 August 2023

சபைக்கான ஜெப குறிப்புகள் || ஜெபம் ||

 சபைக்கான 

 ஜெப குறிப்புகள்


 "ஜெபத்திலே உறுதியாய் தரித்திருங்கள்". (ரோமர் 12:12)


1.கர்த்தர் திரளான ஜனங்களை, மெய்யான தேவனை அறியாத ஜனங்களை, இரட்சித்து தமது மந்தையில் சேர்க்கும்படியாய் ஜெபிப்போம். ( சங் 2:8 )

2.விடமுடியாத தீய பழக்கங்களில் அகப்பட்டவர்களை கர்த்தர் சபைக்கு அழைத்து வந்து அவர்களை விடுதலை செய்யும்படியாய் ஜெபிப்போம். ( யோ 8:38 )

3.தேவபிள்ளைகள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்து நிற்க திராணியுள்ளவர்களாகும்படி ஜெபிப்போம். ( எபே 6:11 )

4.தேவபிள்ளைகள் யாவரும் சமாதானமும் ஒருமனமும் உள்ளவர்களாயிருக்க ஜெபிப்போம். ( எபே 4:3 )

5.பரிசுத்த வாழ்வைக்குறித்த வைராக்கியம் விசுவாசிகளுக்குள் காணப்பட ஜெபிப்போம்.( 1 தெச 4:3,7)

6.விசுவாசிகள் வீட்டில் தேவனை அறியாதவர்களை கர்த்தர் இரட்சிக்கும்படியாக ஜெபிப்போம்.

 ( அப் 16:31)

7.விசுவாசிகள் யாவர் வீட்டிலும் குடும்ப ஜெபம் நடைபெற ஜெபிப்போம். 

( யோசு 24:15 )

8.கடன் பிரச்சினைகளில் உள்ள தேவ பிள்ளைகளை கர்த்தர் விடுதலையாக்கி ஆசீர்வதிக்கும்படியாய் ஜெபிப்போம்.

 ( உபா 28:12 )

9.தேவ பிள்ளைகள் யாவரும் எப்பொழுதும் நல்ல சரீர ஆரோக்கியத்தோடு இருக்க ஜெபிப்போம்.( யாத் 15:26 )

10.கிறிஸ்துவின் சிந்தை ஒவ்வொரு தேவப்பிள்ளைகளுக்கும் காணப்படும்படியாக ஜெபிப்போம். ( பிலி 2:5 )

11.தேவபிள்ளைகள் கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருக்க ஜெபிப்போம். ( பிலி 4:4 )

12.விசுவாசிகள் காலத்தை வீணடிக்காமல் ஜாக்கிரதையோடு செலவிட ஜெபிப்போம். ( எபே 5:16 )

13.ஆகாத சம்பாஷணைகள் விசுவாசிகளுக்குள் காணப்படாதபடி ஜெபிப்போம். ( I கொரி 15:33 )

14.விசுவாசிகள் ஞாயிறு ஆராதனைகளை தவற விடாமல் கர்த்தரை ஆராதிப்பதில் வைராக்கியம் காண்பிக்க ஜெபிப்போம்.

எபி :10:25 )

15.ஒவ்வொரு விசுவாசிகளும் ஆத்தும ஆதாயம் செய்கிறவர்களாயிருக்க ஜெபிப்போம். ( கொரி 9:16 )

16.விசுவாசிகள் தங்கள் ஜெப வாழ்க்கையையும் வேத தியானிப்பையும் சரியாய் காத்துக் கொள்ள ஜெபிப்போம்.

 (1 பேதுரு 4:7, யோ 5:39 )

17.நல்ல வேலையில்லாத தேவ பிள்ளைகளுக்கு கர்த்தர் நிரந்தர வேலை கொடுக்க ஜெபிப்போம். 

( III யோ 2 )

18.திருமணத்திற்காக காத்திருக்கும் கர்த்தருடைய பிள்ளைகளுக்கு கர்த்தர் ஏற்ற துணையை கொடுக்க ஜெபிப்போம்.( ஆதி 2:18 )

19.சபையிலே கர்த்தர் கொடுக்கும் தம்முடைய வார்த்தைகளுக்கு கீழ்ப்படியகூடிய பெலனை கர்த்தர் விசுவாசிகள் யாவருக்கும் கொடுக்க ஜெபிப்போம். ( யாக் 1:22 )

20.விசுவாசிகள் ஒருவரும் ஆவிக்குரிய வாழ்க்கையில் பின்வாங்காமல் கர்த்தருக்குள் உறுதியாக நிலைத்திருக்க ஜெபிப்போம். ( யூதா 24 )

21.விசுவாசிகளின் வீடுகளில் அநேக வீட்டுகூட்டங்கள் ஆரம்பிக்கப்பட ஜெபிப்போம். ( மாற்கு 2:1-12)

22.விசுவாசிகள் யாவரும் ஆராதனைக்கு சரியான நேரத்திற்கு வரும்படி ஜெபிப்போம்.( எபே 5:16 )

23.ஒவ்வொரு விசுவாசிகளும் அதிகாலையில் கர்த்தரைத் தேடுகிறவர்களாக காணப்பட ஜெபிப்போம். (நீதி 8:17)

24.தேவ பிள்ளைகளின் கைகளின் பிரயசாங்களையெல்லாம் கர்த்தர் ஆசிர்வதிக்கும்படி ஜெபிப்போம்.

 ( ஆதி 26:12 )

25.ஒவ்வொரு தேவ பிள்ளைகளும் பரிசுத்த ஆவியானவரால் நடத்தப்படும்படி ஜெபிப்போம்.

 ( ரோமர் 8:14 )

26.கர்த்தருடைய சத்தத்திற்கு முற்றும் கீழ்படியக்கூடிய இருதயம் தேவ பிள்ளைகளுக்கு எப்பொழுதும் காணப்படும்படி ஜெபிப்போம்.

 ( அப் 9:6 )

27.அற்புதங்களை பெறுகிற ஒவ்வொரு அவிசுவாசிகளும், இரட்சிக்கப்பட்டு விசுவாசிகளாகி சபையில் சேர்க்கப்பட ஜெபிப்போம். ( மாற்கு 10: 46-52 )




Thursday, 17 August 2023

தாவீது சுந்தரானந்தம் || மிஷனரிகளின் வாழ்க்கை வரலாறு ||

 மிஷனரிகளின் 

வாழ்க்கை வரலாறு


உயர்திரு. தாவீது சுந்தரானந்தம் 

(1771-1806)

(முதல் கிறித்தவ கிராமத்தைச் உருவாக்கியவர்)

தாவீது சுந்தரானந்தம் என்பவருடைய இயற்பெயர் சின்னமுத்து. இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் சாத்தான் குளம் மற்றும் முதலூர்க்கு இடையே உள்ள காலன்குடி என்ற கிராமத்தில் 1771 ம் ஆண்டு பிறந்தார்.இவருடைய பெற்றோர் பனை மரம் ஏறும் சாணார் குலத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் கருப்பட்டி வியாபாரம் செய்து வந்தார்கள்.

இளமை பருவம்:-

சின்னமுத்து சிறுவனாய் இருக்கும்போது ஏற்பட்ட வைசூரி நோயினால் இவருடைய பெற்றோர்கள் மரித்துப்போனார்கள். ஆகவே சின்னமுத்தும் அவர் சகோதரியும் விஜயராமபுரத்தில் இருந்த இவர்களுடைய தாய்மாமா வீட்டில் இருந்து வளர்ந்து வந்தார்கள்.சின்னமுத்து இளம் வயதிலேயே மிகவும் புத்திகூர்மை மிக்கவராய் இருந்தார். பல காரியங்களை கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டினார். கைநாட்டு வைத்தியம், ஜோதிடம், சிலம்பம் ஆடுதல் போன்றவற்றை கற்றுக்கொண்டார்.சின்னமுத்துவின் 17 ம் வயதாக இருக்கும்போது இவருடைய செயல்பாடுகளை அத்தைக்கு பிடிக்கவில்லை. ஒருமுறை இவருடைய அத்தை கொடுத்த வேலையை செய்ய தவறியதற்க்காக தயிர் கடையும் மத்தால் விரட்டி விரட்டி அடித்ததினால் அவமானத்தையும் வருத்தத்தையும் தாங்க முடியாமல் விஜயராமபுரம் கிராமத்தைவிட்டு வெளியேறி சாத்தான்குளம் வரை நடந்துசென்று அங்கிருந்து இராஜபாளையத்திற்கு கருப்புகட்டி ஏற்றி சென்று கொண்டிருந்த மாட்டு வண்டியில் பிரயாணப்பட்டு, பின்னர் அங்கிருத்து தஞ்சாவூருக்கு சென்றார்.

இரட்சிப்பின் அனுபவம்:-

தஞ்சாவூர் சென்றடைந்த சின்னமுத்து அங்கு ஒரு கடையில் வேலையாளாக சேர்ந்தார். அப்பொழுது ஒரு நாளில் தெருக்களில் நின்று நற்செய்திபணி செய்துகொண்டிருந்த குருவானவர் கிறிஸ்டியான் பிரடெரிக் சுவாட்ஸ் ஐயர் அவர்களின் நற்செய்தி பணியினால் கவரப்பட்டார். ஆகவே அவரிடம் நல்ல தொடர்பு ஏற்பட்டது. சுவாட்ஸ் ஐயர் மூலம் இயேசு கிறிஸ்துவைப்பற்றி கேள்விப்பட்டு பின்னர் இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு 1790 ம் ஆண்டு தாவீது சுந்தரானந்தம் என்று ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டார். இவர்தான் திருநெல்வேலி பகுதியில் சாணார் குலத்தை சேர்ந்த முதல் கிறிஸ்தவர் ஆவார்.பின்னர் தாவீது சுந்தரானந்தம் விசுவாசத்தில் பலப்பட்டு கிறிஸ்துவுக்கு நல்ல போர் சேவகனாய் செயல்பட தன்னை அற்பணித்தார். சுவாட்ஸ் ஐயர் தான் செல்லும் இடமெல்லாம் தாவீது சுந்தரானந்தத்தை அழைத்து செல்வார். இந்நிலையில் திருநெல்வேலி பகுதியில் குளோரிந்தா அம்மையார் நற்செய்திபணி மூலமாக அநேகர் இயேசுவை ஏற்றுக்கொண்டார்கள்.

கிறிஸ்தவர்களை விசுவாசத்தில் பலப்படுத்த ஒரு உபதேசியாரை திருநெல்வேலிக்கு அனுப்பி வைக்குமாறு குளோரிந்தா அம்மையார் தஞ்சாவூரில் நற்செய்திபணி செய்து கொண்டிருந்த சுவாட்ஸ் ஐயருக்கு கடிதம் எழுதினார்கள்.ஆகவே சுவாட்ஸ் ஐயர் அவர்கள் 1796 ம் ஆண்டு திருநெல்வேலி பகுதிக்கு உபதேசியார் திரு. கற்பகம் சத்தியநாதன் அவர்களோடு, தாவீது சுந்தரானந்தத்தையும் பாளையங்கோட்டைக்கு அனுப்பி வைத்தார்கள்.

சொந்த ஊரில் சாட்சி:-

இந்நிலையில் 1796 ம் ஆண்டு பாளையங்கோட்டையில் குளோரிந்தா அம்மையாரின் தலைமையில் நற்செய்திபணி செய்து கொண்டிருந்த தாவீது சுந்தரானந்தம் தான் வளர்ந்த விஜயராமபுரத்திற்கு உறவினர்களை காண வந்தார்.தாவீது சுந்தரானந்தம் நாகரிகமான ஆடை அணிந்து கம்பீரமாக நடந்து சென்றதை கண்ட அவரது உறவினர்கள் இவரை ஒரு அரசாங்க அதிகாரி என்று நினைத்தனர். அப்போது மரித்து விட்டார் என்று கருதப்பட்டு வந்த நிலையில் தாவீது சுந்தரானந்தம் என்ற சின்னமுத்து வீடு திரும்பியது கண்டு அவருடைய உற்றார் உறவினர்கள் யாவரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்கள். தாவீது தன்னுடைய விவரத்தை சொன்னவுடன் அவருடைய மாமாவும் அத்தையும் அளவு கடந்த மகிழ்ச்சியுடன் இவரை கட்டி தழுவிக்கொண்டார்கள். 

தாவீது சுந்தரானந்தம் அவருடைய சொந்தக்காரர்களுக்கெல்லாம் கிறிஸ்துவின் நற்செய்திபணியை அறிவித்தார். இதனால் விஜயராம புரத்தில் இவருடைய நான்கு சொந்தகார குடும்பத்தினரை சேர்ந்த 18 பேர்கள் பதனீர் காலம் முடிந்த பின்னர் ஞானஸ்நானம் பெற்றார்கள். ஆகவே இவர்கள் ஆண்டவரை ஆராதிக்க பனை ஓலையினால் கூரை செய்யப்பட்ட ஆலயம் கட்டப்பட்டது. விஜயராம புரத்தில் குளோரிந்தா அம்மையார் மூலம் ஒரு பள்ளிக்கூடமும் ஆரம்பிக்கப்பட்டது. விஜயராம புரத்திலிருந்து தான் கிறிஸ்தவ சமயம் திருநெல்வேலி சாணார் இன மக்கள் மத்தியில் பரவியது.

தாவீது சுந்தரானந்தம் அவர்கள் சாத்தான் குளத்தை சுற்றியுள்ள கிராமங்களில் நற்செய்திபணி செய்ய ஆரம்பித்தார். இதனால் பலர் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார்கள். இதனால் 1797 ம் ஆண்டு அக்டோபர் மாதம் சண்முகபுரத்தை சேர்ந்த 40 பேருக்கு ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டது. ஆகவே அவர்கள் ஆண்டவரை ஆராதிப்பதற்கு சண்முக புரத்தில் பனை ஓலை மூலமாக கூரை அமைத்து ஆலயம் ஏற்படுத்தப்பட்டது. 

கிபி 18 ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தாழ்த்தப்பட்ட ஜாதியாய் கருதப்பட்ட சாணார் குலத்திலிருந்து நற்செய்திபணியை பறைசாற்ற கடவுளால் தெரிந்துகொள்ளப்பட்ட தாவீது சுந்தரானந்தம் சாத்தான் குளம் பகுதியில் உபதேசியாராக சுவாட்ஸ் ஐயர் மூலம் நியமிக்கப்பட்டார். இவர்தான் சாணார் குல மக்களின் முதல் உபதேசியாரும் ஆவார். 

தாவீது சுந்தரானந்தன் உபதேசியார் திருநெல்வேலியின் தென் கிழக்கு பகுதியான சாத்தான் குளம், திசையன்விளை, உவரி, குலசேகர பட்டினம், தென்திருப்பேரை, ஆழ்வார் திருநகரி ஆகிய இடங்களில் நற்செய்திபணி அறிவித்தார். இதன் விளைவாக அநேகர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார்கள். அங்கும் சிறிய ஆலயங்கள் கட்டப்பட்டன.

இந்நிலையில் தாவீது சுந்தரானந்தம் அவர்களின் நற்செய்தி பணியினால் சாணார் குலத்திலிருந்து அநேகர் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார்கள்.இவை எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த இந்துமத பூசாரிகள் தங்கள் கடும் எதிப்பை வெளிப்படுத்தினார்கள். ஆகவே விஜயராமபுரம், சண்முக புரம், சந்திர ராயர் புரம், சாமி தோப்பு, தட்டார் மடம் போன்ற பல கிராமங்களில் ஏற்படுத்தப்பட்ட ஆலயங்களை தீயிலிட்டு கொளுத்தினார்கள். கிறிஸ்தவர்கள் மேலும் கிராமங்களில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டார்கள். கிறிஸ்தவர்கள் அவமானப்படுத்தப்பட்டார்கள். கிறிஸ்தவர்களின் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டது. அநேகர் கிறிஸ்தவர்களுக்கு விவசாய வேலைகள், பனை ஏறும் வேலைகள், கருப்புகட்டி வியாபாரங்கள் செய்வது எல்லாம் மறுக்கப்பட்டது. கிறிஸ்தவர்களின் உயிருக்கும், உடைமைகளுக்கும் உத்திரவாதம் இல்லாமற் போயிற்று. இந்நிலையில் கிறிஸ்தவர்கள் உபத்திரவங்களில் இருந்து ஒதுங்கி இருந்து நிம்மதியாய் வாழ விரும்பினார்கள்.

இந்நிலையில் கிறிஸ்தவர்கள் பாதுகாப்பாய் இருக்க ஒரு ஆங்கிலேய இராணுவ அதிகாரி எவரெஸ்ட் என்பவரின் பண உதவியினால் சாத்தான் குளம் அருகே அடையல் கிராமத்தின் அருகே தரிசு நிலமாக இருந்த நிலத்தை வாங்கி, அங்கு கிறிஸ்தவர் குடியேற்றப்பட்டார்கள். அவர்களுக்கு என்று ஒரு சிறிய ஜெப ஆலயமும் கட்டப்பட்டது. அங்கே ஒரு கிணறும் தோண்டப்பட்டது.

முதலூர்  உதயம்:-

1799 ம் ஆண்டு கிறிஸ்தவர்கள் விஜயராம புரம் மற்றும் சண்முக புரத்தை விட்டு வெளியேறி சுமார் 28 குடும்பங்கள் வீடுகளை கட்டி குடியேறினார்கள். இது முற்றிலும் கிறிஸ்தவர்கள் அடங்கிய முதல் ஊர் என்பதினால் தாவீது சுந்தரானந்தம் அவர்களின் விருப்பப்படி முதலூர் என்று பெயரிடப்பட்டது. இது கிறிஸ்தவர்களுக்கு ஒரு அடைக்கலப்பட்டணமாக இருந்தது.

1800 ல் முதலூரில் கிறிஸ்தவர்களின் மக்கள் தொகை 200 ஆக உயர்ந்தது. தாவீது சுந்தரானந்தம் முதலூரின் உபதேசியாராக இருந்து நற்செய்திபணி செய்து வந்தார். அவருடைய சொல்லும், செயலும், ஜனங்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் சாணார் குல மக்கள் அநேகர் மந்தை மந்தையாக கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார்கள். 

1801-ஆண்டு பாஞ்சாலங்குறிச்சியில் ஆங்கிலேய படை வீரர்களுக்கும் கட்டப்பொம்மன் படைவீரர்களுக்கும் இடையே நடைபெற்ற சண்டையில், இந்துமத பூசாரிகளின் தூண்டுதலின்படி கட்டப்பொம்மன் படை வீரர்கள் முதலூர் கிறிஸ்தவர்களை தாக்கி அவர்கள் வீடுகளை தீக்கிரையாக்கினார்கள். அநேகர் கொல்லப்பட்டார்கள். முதலூர் ஆலயமும் தீக்கிரையானது. இவற்றையெல்லாம் கிறிஸ்தவர்கள் சகித்துக்கொண்டார்கள்.

இந்நிலையில் இந்துமத பூசாரிகள் பொது மக்கள் மீது கொடுத்த கெடுபிடிகள், நெருக்கடிகள், அநியாய வரி விதிப்புகள், கூலி கொடுக்காமல் வேலை வாங்குதல், கொடுமைகள், வேதனைகள் மத்தியில் பலர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார்கள்.

1802 ம் ஆண்டு ஏப்ரல் முதல் 1803 ம் ஆண்டு ஜுன் மாதத்திற்கு இடையே 70 கிராமங்களை சேர்ந்த 5382 பேர் குருவானவர் கற்பகம் சத்தியநாதன் மூலம் ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டார்கள். இதில் 66 தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்களும் அடங்குவார்கள். இக்கால கட்டத்தில் சாணார் இன மக்கள் மத்தியில் மாபெரும் எழுப்புதல் உண்யிற்று. இதில் தாவீது சுந்தரானந்தத்தின் பங்கும் செயல்பாடும் அதிகமாக இருந்தது. திருச்சபை வளர்ந்து பெருகியது.

1802 ம் ஆண்டு முதல் கிறிஸ்தவர்களின் பாதுகாப்புக்கு என்று அநேக அடைக்கல பட்டணங்கள் உறுவாக்கப்பட்டது. இவற்றில் முக்கியமானது சாயர்புரம், நாசரேத், சமாரியா, பெத்லகேம், எருசலேம், கடாட்சபுரம், அன்பின் நகரம், கிறிஸ்தியான் நகரம், சுவிஷேச புரம் போன்ற பல கிறிஸ்தவ குடியேற்ற கிராமங்கள் உறுவாக்கப்பட்டன. 

இந்துமத பூசாரிகள் கிறிஸ்தவர்களை எந்த அளவு ஒடுக்கினார்களோ அந்த அளவு கிறிஸ்தவர்கள் பெருகினார்கள். ஆயினும் இந்துமத பூசாரிகள் கிறிஸ்தவர்களின் அடைக்கல பட்டணங்களுக்குள் புகுந்து 1803 ம் ஆண்டு மே மாதம் 22 ம் நாள் முதலூர் உட்பட பல கிறிஸ்தவ கிராமங்களில் கட்டப்பட்டிருந்த ஆலயங்களை தீக்கொளுத்தி, கிறிஸ்தவர்களின் வீடுகளை தீக்கிறையாக்கப்பட்டது. பல கிராமங்கள் சூறையாடப்பட்டது. பல இன்னல்கள் மத்தியிலும் கிறிஸ்தவர்கள் பின்வாங்காமல் விசுவாசத்தில் உறுதியாய் நின்றார்கள். அவர்களை தாவீது சுந்தரானந்தம் தைரியப்படுத்தினார். ஆயினும் கிறிஸ்தவர்களுக்கு நேரிட்ட துன்பம் அதிகமானது.

தாவீது சுந்தரானந்தத்தால் அநீதியை தொடர்ந்து பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ஆகவே கிறிஸ்தவர்களை பாதுகாக்கவும், தற்காத்துக்கொள்ளவும் "தடிகம்புகாரர்" 'கிறிஸ்தவ இளைஞர் குழு' என்ற அமைப்பை ஏற்படுத்திக் கொண்டு அவர்களுக்கு தற்காப்பு கலையான சிலம்பம் கற்றுக்கொடுத்தார். இதில் பாதிக்கப்பட்ட கிராமங்களில் இருந்த அநேக இளைஞர்கள் சேர்ந்து கொண்டார்கள். இவர்கள் எங்கெங்கெல்லாம் கிறிஸ்தவர்கள் இந்துமத பூசாரிகள் மூலம் தாக்கப்பட்டார்களே அங்கு தடிகம்புகாரர் கிறிஸ்தவ இளைஞர் குழு விரைந்து சென்று கிறிஸ்தவர்களுக்கு பாதுகாப்பு கொடுத்து விட்டு திரும்பினார்கள். தாவீது சுந்தரனாரின் இத்தகைய செயலால் கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் சில காலம் குறைந்தது. தாவீது சுந்தரானந்தம் அவர்களின் இந்த நடவடிக்கைககள் கிறிஸ்தவ அன்பை வெளிக்காட்டாத படியினால், இந்த செயல்பாடுகள் கிறிஸ்தவ மிஷனெரிகளுக்குள் மிகவும் விமர்சனத்திற்குள்ளானது. இவருடைய செயல்பாடுகள் கிறிஸ்தவர்களின் தற்பாதுகாப்புக்கு தேவையாகத்தான் இருந்தது.தாவீது சுந்தரானந்தத்தின் துணிச்சல், மக்களிடம் அவர் காட்டிய பரிவு, மனித நேயம் மற்றும் கிறிஸ்தவர்களின் உரிமைகளை நிலைநாட்ட எடுத்த முயர்ச்சிகள் அநேகர் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதற்கு காரணமாயும் இருந்தது. முதலூரின் சுற்றுபுரத்தில் இருந்த இந்துமத பூசாரிகள் இந்த தடிகம்புக்காரர் கிறிஸ்தவ இளைஞர் குழுவிற்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்பினார்கள். ஆகவே அவர்கள் தாவீது சுந்தரானந்தத்தை கொலை செய்வதற்கு சதி திட்டம் தீட்டினார்கள். இந்நிலையில் பெத்லகேம் என்ற கிராமத்தில் நடைபெற இருந்த பண்டிகைக்கு சென்றார். அப்பொழுது சிலர் தந்திரக்காரர்களின் நயவஞ்சகமாக சூழ்ச்சியினால், தாவீது சுந்தரனந்தம் அவர்கள் உண்ணும் உணவில் விஷம் வைத்து கொடுக்கப்பட்டது. இதை அறியாமல் உணவு உட்கொண்ட தாவீது சுந்தரானந்தம், 1806 ம் ஆண்டு பெத்லகேம் என்ற கிராமத்தில் 36 ம் வயதில் அகால மரணமடைந்தார். தாவீது சுந்தரானந்தம் ஜாதிக்கொடுமை, பொறாமை மற்றும் சமய சகிப்பின்மை ஆகிய கொடுமைகளுக்கு பலியானார்.

தாவீது சுந்தரானந்தம் அவர்கள் தான் திருநெல்வேலி கிறிஸ்தவத்தில் சாணார் குலத்தில் இருந்து கிறிஸ்துவுக்காய் வைராக்கியமாய் எழுந்த முதல் கிறிஸ்தவர் மற்றும் முதல் உபதேசியார் ஆவார். இதைப்போல திருநெல்வேலி கிறிஸ்தவத்தின் முதல் இரத்த சாட்சியும் இவரே. அப்படியே திருநெல்வேலி கிறிஸ்தவத்தில், கிறிஸ்தவ இளைஞர் சேனையை ஏற்படுத்தியவரும் இவரே.

தாவீது சுந்தரானந்தம் அவர்கள் "முதலூரின் தந்தை" என்றுஅழைக்கப்படுகின்றார். இவருடைய நற்செய்தி பணியை நினைவுகூறும் படி தூத்துகுடி நாசரேத் திருமன்றத்தில் தாவீது சுந்தரானந்தம் சபை மன்றம் உறுவாக்கப்பட்டு 70 திருச்சபைகளுக்கு பொறுப்பாக இருந்து இன்றும் அவருடை நினைவுகளை தாங்கி இவருடைய நற்செய்திபணியை தொடர்ந்து வருகின்றது.இன்றைக்கு தாவீது சுந்தரானந்தம் போல துடிப்பான இளைஞர்கள் மற்றும் யுவதிகள் கிறிஸ்துவின் நற்செய்திப்பணி செய்ய தேவைபடுகின்றார்கள்.

 இளைஞர்களே!...யுவதிகளே!...


கிறிஸ்துவுக்காக உன்னை அற்பணிப்பாயா???......



Sunday, 13 August 2023

அல்லேலூயா || அறிந்து கொள்வோம் || பகுதி -108 ||

அறிந்து கொள்வோம்

பகுதி -108


"அல்லேலூயா"

*அல்லேலூயா* - (ALLELUIA, HALLELUJAH)“என்றால் என்ன பொருள்?

அல்லேலூயா” என்னும் கிரேக்க வார்த்தைக்கு - 'alleelouia - "கர்த்தரை ஸ்தோத்திரி” praise the Lord" என்று பொருள். இதன் எபிரெய வார்த்தை halal - என்பதாகும். 

சந்தோஷம், ஸ்தோத்திரம், துதித்தல் ஆகியவற்றை வெளிப்படுத்துவதற்கு அல்லேலூயா என்னும் வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. 

சங் 104:35; 16:19; 147:1- ஆகிய வசனங்களில் "கர்த்தரை ஸ்தோத்திரி” என்று பொருள்படும் அல்லேலூயா என்னும் எபிரெய வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

வெற்றுக் கூச்சலாக சொல்லப்படும் அல்லேலூயா-வால் எந்தப் பயனும் இல்லை. ஆனால், உள்ளத்தின் ஆழத்தில் இருந்து வரும் அல்லேலூயா, தேவனுக்கு நன்றியையும், துதியையும் கொண்டு சொல்கிறது…





 Notes taken from Bro sasikumar


கானானியர்(ன்) || அறிந்து கொள்வோம் || பகுதி 107 ||

அறிந்து கொள்வோம்

பகுதி 107

கானானியர்(ன்)

(CANAANITES) என்னும் எபிரெய பெயருக்கு “வைராக்கியம்/பொறாமை” "zealous" என்று பொருள்.பாலஸ்தீன தேசத்தை இஸ்ரவேல் புத்திரர் சுதந்தரிப்பதற்கு முன்பாக அங்கு கானானியர்கள் குடியிருந்தார்கள்.கி.மு. 2000-ஆவது வருஷத்திற்கு முன்பாகவே கானானியரும், எமோரியரும் கானான் தேசத்தில் குடியிருந்தார்கள்.இந்த தேசத்தில்நடைபெற்ற தொல்பொருள் ஆய்வுகள் அவர்களுடைய அக்காலத்து நாகரீகத்தை விளக்குகிறது.

பழங்காலத்து கானான் தேசத்தில் ஆத்சோர், மெகித்தோ, பெத்ஷான், எரிகோ, எபூஸ், தெபீர், லாகீஸ், ஆராத் ஆகிய இடங்களில் தொல்பொருள் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இத்துடன் கானான் தேசத்தின் வடக்குப் பகுதியிலுள்ள பிப்லோஸ், உகாரித் ஆகிய இடங்களிலும் தொல்பொருள் ஆய்வுகள் நடைபெற்றுவருகின்றன. இவை மத்தியதரைக்கடல் பகுதியில் அமைந்துள்ளது. கி.மு. 2100-முதல் கி.மு 1550 வரையிலும் கானானியரின் நாகரிகம் சிறந்து விளங்கிற்று. விவசாயம் பண்ணுவதில் கானானியர்கள் சிறந்தவர்கள். தங்களுடைய மொழியை ஆப்பெழுத்துக்களால் எழுதினார்கள். அவர்களுடைய தேசத்தில் அரணிப்பான

பட்டணங்கள் இருந்தன. சில பட்டணங்கள் மாநிலங்களாகவும் இருந்தன. அந்தப் பட்டணங்களுக்கென்று இராஜாக்களும் சேனைகளும் தனித்தனியாக இருந்தார்கள்.யோசுவா யோர்தான் நதியைக் கடந்து கானான் தேசத்தின் மீது யுத்தம் பண்ணி, கானான் தேசத்தை சுதந்தரித்த பின்பு கானானியரின் வரலாறு முடிவுபெற்றது. 

இஸ்ரவேல் புத்திரர்கள் தேவனுடைய உடன்படிக்கையின் ஜனங்கள். கானானியர்கள் இஸ்ரவேல் ஜனங்களின் வாழ்வில் பல நன்மையான காரியங்களையும் பல தீமையான காரியங்களையும்

செய்திருக்கிறார்கள்.பழைய ஏற்பாட்டுக் காலத்தில் கானானியரின் மார்க்கம் மிகவும் முக்கியமானதாகும். அவர்கள் பல தெய்வங்களை வழிபட்டார்கள். பல பண்டிகைகளையும் ஆசரித்தார்கள்.

அவர்களுடைய மார்க்கத்தில் பல பூஜாசாரிகளும் இருந்தார்கள். பல்வேறு இடங்களில் அவர்களுடைய விக்கிரகாரதனை நடைபெற்று வந்தது. தங்கள் தெய்வங்களுக்கு பெரிய கோவில்களை கட்டினார்கள்.


பழைய ஏற்பாட்டில் பாகால் (எண் 22:41) பாகால்கள் (ஓசி 2.13,17) பாகால் பேயோர் (எண் 25:35) ஆகியவற்றைப் பற்றி குறிப்பிடப்பட்டிருக்கிறது. இவற்றுடன் அசேரா

(1இராஜா 18.19) அஸ்தோரேத் (1இராஜா 11:5,33) அஸ்தோரேத்துக்கள் (நியா 2:13)

ஆகியவற்றைப் பற்றியும் பழைய ஏற்பாடு குறிப்பிடுகிறது.

அவர்களது விக்கிரக ஆராதனையும், பலிகளும், அவர்களை வெறுக்க, இஸ்ரவேலர்களுக்கு காரணமாக அமைந்தது.வேதாகம ஆசிரியர்கள் கானானியரின் தெய்வங்களை கடிந்து கூறியிருக்கிறார்கள். வேதாகமத்தில் கூறப்பட்டிருக்கும் (கானானிய தெய்வங்கள் தவிர மேலும் அநேக தெய்வங்களின் பெயர்கள் உகாரீத் எனும் இலக்கியங்களில் காணப்படுகிறது.)

யோசுவா கானான் தேசத்தை சுதந்தரித்தபோது, கானான் தேசத்திலிருந்த கானானியர்கள் அனைவரையும் அவர் அந்த தேசத்திலிருந்து துரத்தி விடவில்லை.

கானானியரில் பலர் அந்த தேசத்திலேயே தொடர்ந்து குடியிருந்தார்கள். அவர்களுடைய

விக்கிரகாரதனை இஸ்ரவேல் புத்திரருக்கு ஒரு சோதனையாக இருந்தது. ஆகையினால்

யோசுவா இஸ்ரவேல் ஜனத்தாரிடம் இவ்வாறு கூறுகிறார். “அப்படியானால், இப்பொழுதும் உங்கள் நடுவே இருக்கிற அந்நியதேவர்களை அகற்றிவிட்டு, உங்கள் இருதயத்தை இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு நேராகத் திருப்புங்கள்” (யோசு 24:23).

புதிய ஏற்பாட்டில் ஒரு கானானிய ஸ்திரீ ஆண்டவராகிய இயேசுவை தேடி வருவதை பார்க்க முடியும். முதலாவது ஆண்டவர் இயேசு கிறிஸ்து அந்த ஸ்திரீயை புறக்கணிப்பது போல தோன்றினாலும், அந்த ஸ்திரீயின், பெரிய விசுவாசத்தை வெளிப்படுத்தும்படி காரியங்கள் நடந்தன. அற்புதம் நடந்தது!

இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: *ஸ்திரீயே, உன் விசுவாசம் பெரியது; நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது என்றார். அந்நேரமே அவள் மகள் ஆரோக்கியமானாள். (மத்தேயு 15:28)


"தன்னை நாடி வரும் ஒருவரையும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து புறம்பே தள்ளுவதில்லை!!!


Notes taken from Sasi Kumar 




Wednesday, 24 May 2023

சேஷ்டபுத்திரபாகம் || அறிந்து கொள்வோம் || பகுதி - 106 ||

அறிந்து கொள்வோம்

பகுதி - 106


சேஷ்டபுத்திரபாகம்


பரிசுத்த வேதாகமத்தில் சேஷ்டபுத்திரபாகத்தின் ஆசீர்வாதங்களைப்பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. 

அதன் விவரம் வருமாறு:

1.குடும்ப சுதந்தரவீதம். (ஆதி 25:5)

2.குடும்ப தலைமை ஸ்தானம்.(ஆதி 24:65; ஆதி 25:5; ஆதி 27:29,37)

3.தகப்பனின் ஆசீர்வாதம் .(ஆதி 27:4, 27-38).

4.குடும்பத்தலைவரும், ஆசாரியரும் (ஆதி 26:25; ஆதி 35:3-7)

5.குடும்ப நிலங்கள் எல்லாவற்றிலும் விசேஷித்த சுதந்தரம் (ஆதி 25:5-6; ஆதி 27:28,37; ஆதி 28:4; ஆதி 35:12)

6.சந்ததி பலுகிப்பெருகுதல். (ஆதி 13:16; ஆதி 15:5; ஆதி 17:2,5; ஆதி 22:17; ஆதி 26:4,24; ஆதி 28:3,14; ஆதி 32:12; ஆதி 35:11)

7.விசேஷித்த பராமரிப்பு (ஆதி 12:2-3; ஆதி 26:3-4,24; ஆதி 27:28;ஆதி 28:15)

8.தனிப்பட்ட ஆசீர்வாதங்கள்.(ஆதி 12:2; ஆதி 22:17; ஆதி 26:3)

9.பெரிய பெயர் (ஆதி 12:2; ஆதி 27:28-29,37)

10.எல்லா தேசங்களுக்கும் ஆசீர்வாதம். (ஆதி 12:2-3; ஆதி 18:18; ஆதி 22:18; ஆதி 26:4; ஆதி 28:14)

11. நித்திய சுதந்தரம்(ஆதி 13:15; ஆதி 17:7-8)

12. ஆபிரகாமின் உடன்படிக்கையில் விசேஷித்த நபர். (ஆதி 17:7,19; ஆதி 26:3-4; ஆதி 28:4,13-15) 

13.மேசியாவின் "தகப்பன்" (ஆதி 12:3; ஆதி 21:12; ஆதி 22:17; ஆதி 26:5; ஆதி 28:14; ரோமர் 9:7;)

14.பல தேசங்களுக்குத் தகப்பன். (ஆதி 17:5; ஆதி 18:18; ஆதி 35:11)

15.ராஜாக்களுக்கு தகப்பன். (ஆதி 17:6; ஆதி 35:11)

16.நித்திய இயற்கையான சந்ததி (ஆதி) 17:7-8,19; 2சாமு 7; ஏசா 9:6-7;ஏசா 59:21; லூக்கா 1:31-32)

17.விசேஷித்த தேவனாக யெகோவாவைப் பெற்றிருப்பது. (ஆதி 17:7-8; ஆதி 28:15; ஆதி 32:9,12)

18.விரோதிகள்மீது அதிகாரம். (ஆதி 22:17; ஆதி 27:29)

19.தேசங்களின்மீது தலைமை (ஆதி 27:29)

20.பொருளாதார ஆசீர்வாதங்கள்.(ஆதி 12:7; ஆதி 13:15; ஆதி 15:18; ஆதி 26:3-4; ஆதி 27:28-29,37; ஆதி 28:13; ஆதி 35:12)

21.ஆபிரகாமின் ஆவிக்குரிய ஆசீர்வாதம் விசுவாசத்தினால் நீதிமானாக்கப்படுதல். (ஆதி) 28:4; ரோமர் 4; கலா 3:14)

22.விரோதிகள்மீது சாபம். (ஆதி 12:3; ஆதி 27:29)


🔯மூத்தவனுக்குச் சேஷ்டபுத்திரபாகத்து ஆசீர்வாதங்கள் கொடுக்கப்படுவதினால் அவனுடைய மற்ற சகோதரர்கள் அவன்மீது பொறாமைபடுவதற்கு வாய்ப்புள்ளது. 

🔯மூத்தவனுக்கு இரட்டிப்பான சுதந்தரவீதம் கிடைக்கும். (உபா 21:15-17).

 🔯சேஷ்டபுத்திர பாகத்தை விற்றுப்போடலாம். (ஆதி 25:29-34; ஆதி 27:36; எபி 12:16; ரோமர் 9:12-13)

 🔯மூத்தவனுடைய பாவத்தின்நிமித்தமாக சேஷ்டபுத்திரபாகம் மாற்றப்படும். (1நாளா 5:1-2) அல்லது தேவன் அதை நிறுத்தி வைப்பார். (ஆதி 25:23; ஆதி 48:15-20; 1இராஜா 2:15; 1நாளா 26:10).

ஆனால் ஏசாவோ, “”இந்தச் சேஷ்ட புத்திரபாகம் எனக்கு என்னத்திற்கு"(ஆதி 25:32) என்று சொல்லிவிடுகிறான்.



Sunday, 23 April 2023

அறிந்து கொள்வோம் || பகுதி - 105 || வேதத்தில் இரண்டு (2) ||

அறிந்து கொள்வோம்

பகுதி - 105


வேதத்தில் இரண்டு (2)

----------------------------------------------

1)2 பேர் ஜெபம் பண்ண ஆலயம் சென்றார்கள்- லூக்கா 18:10.

2)விதவை 2 காசு காணிக்கை போட்டாள் - மாற் 12:42.

3)2 மீன் 5 அப்பம் - மத்தேயு 6:41.

4) 2 எஜமானுக்கு ஊழியம் செய்ய முடியாது - மத்தேயு 6:24.

5)2 பேர் ஒருமனப்பட்டு ஜெபித்தால் அது கேட்கப்படும் -மத்தேயு 18:19.

6)சேவல் 2 தரம் கூவும் முன்னே நீ 3 தரம் மறுதலிப்பாய்.- மாற்கு 14:72

7)2 கள்ளர்கள் அவரோடு சிலுவையில் அறையப்பட்டார்கள்- மத்தேயு 27:38.

8)2 தாலந்து ஒருவனுக்கு கொடுக்கப்பட்டது-மத்தேயு 25:15.

9)2 பேர் வயலில் இருப்பார்கள். ஒருவன் ஏற்றுக் கொள்ளபடுவான், ஒருவன் கைவிடப்படுவான்-     மத்தேயு 24:40


10)2 ஸ்திரிகள் எந்திரம் அறைப்பார்கள். ஒருத்தி ஏற்றுக் கொள்ளபடுவாள், ஒருத்தி கைவிடப்படுவாள்- மத்தேயு 24:41

11) ஒரே படுக்கையில் படுத்திருக்கிற 2 பேரில் ஒருவன் ஏற்றுக் கொள்ளபடுவான், மற்றவன் கைவிடப்படுவான் - லூக்கா 17:34

12) 2 பேர் இயேசுவின் நாமத்தில் கூடியிருக்கும் இடத்தில் கர்த்தர் இருப்பார்- மத்தேயு 18:20.

13) ஒரு காசுக்கு 2 அடைக்கலான் குருவிகள் - மத்தேயு 10:29

14) 2 அங்கிகளையுடையவன் இல்லாதவனுக்கு கொடுக்ககடவன்- லூக்கா 3:11

15) 2 காசுக்கு 5 அடைக்கலான் குருவிகள்- லூக்கா 12:6

16)ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம் வர பலவந்தம் பண்ணினால் அவனோடு 2 மைல் தூரம் போ - மத்தேயு 5:41

17)வாரத்தில் 2 தரம் உபவாசிக்கிறேன் என்று பெருமையோடு பரிசேயன் ஜெபித்தான்- லூக்கா 18:12

18) இயேசுவின் சரீரம் வைக்கபட்டிருந்த இடத்தில் 2 தூதர்கள் தலைமாட்டில் ஒருவனும், கால்மாட்டில் ஒருவனும் உட்காரந்திருப்பதை மரியாள் கண்டாள்.யோவான் 20:12.




காட்ஜில்லா எல் நினோ (Godzilla El Niño) // விழிப்புணர்வு பதிவு

ஒரு விழிப்புணர்வு பதிவு    காட்ஜில்லா எல் நினோ (Godzilla El Niño)   காட்ஜில்லா எல் நினோ (Godzilla El Niño) என்பது உலகையே அச்சுறுத்தும் ஒரு ...