இயேசுவின் கடைசி ஏழு வார்த்தைகள் 6ம் வார்த்தை- முடிந்தது

 


இயேசுவின் கடைசி ஏழு வார்த்தைகள்



6ம் வார்த்தை- முடிந்தது



இயேசு காடியை வாங்கினபின்பு, முடிந்தது என்று சொல்லி தலையைச் சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார்

 (யோவான் 19:30).




இயேசுகிறிஸ்து மரிப்பதற்கு முன்பாக, அவர் சொன்ன கடைசி வார்த்தை ""முடிந்தது'' என்பதாகும். இயேசு காடியை வாங்கினபின்பு, ""முடிந்தது'' என்று சொல்லி, தலையைச் சாய்த்து,  தம்முடைய ஆவியை ஒப்புக்கொடுக்கிறார். இயேசுகிறிஸ்து ""முடிந்தது'' என்று சொல்லும் வார்த்தை அவருடைய வெற்றியைப் பிரகடனம்செய்கிறது. யுத்தம் முடிந்தது, வெற்றி உண்டாயிற்று என்பதே இந்த வார்த்தையின் பொருளாகும்.



இயேசுகிறிஸ்துவைப் பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும் உபத்திரவப்படுத்தினார்கள். அவர்கள் அவர்மீது விரோதமாகயிருந்தார்கள். அவரைச் சிலுவையில் அறைந்தார்கள். அவர்களுடைய விரோதம் இப்போது முடிந்தது. இயேசுகிறிஸ்து பாடுகளை அனுபவிக்க வேண்டுமென்பது பிதாவின் சித்தம். அதன் பிரகாரமாக இயேசுகிறிஸ்து சிலுவையில் மரிப்பதற்கு தம்முடைய ஜீவனை ஒப்புக்கொடுக்கிறார். இப்போது தேவனுக்குக் கீழ்ப்படிந்து இயேசுகிறிஸ்து பாடுகளை அனுபவிப்பது முடிந்துபோயிற்று. தம்முடைய பாடுகளின் ஆரம்பத்தில் ""பிதாவே உம்முடைய சித்தம் நிறைவேறுவதாக'' என்று சொல்லி ஜெபித்தார். இப்போது அந்தப் பாடுகள் முடிவு பெறுகையில், மிகுந்த சந்தோஷத்தோடு ""முடிந்தது'' என்று கூறுகிறார்.  


இயேசுகிறிஸ்து கல்வாரி சிலுவையில் மரிக்கும்போது, பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனங்களும், அடையாளங்களும் முடிந்தது. அவையெல்லாம் மேசியாவின் பாடுகளைப்பற்றி முன்னறிவித்தது. முன்னறிவிக்கப்பட்டவைகள் இப்போது இயேசுகிறிஸ்துவின் மரணத்தின் மூலமாக முடிவுபெற்றிருக்கிறது. யூதமார்க்கத்தின் சடங்காச்சாரங்களெல்லாம் இயேசுகிறிஸ்துவின் மரணத்தினால் முடிந்துபோயிற்று. இதுவரையிலும் நிழலாகயிருந்தவைகள் முடிந்துபோயிற்று. மெய்யான நிஜம் வந்திருக்கிறது. பாவம் முடிந்து போயிற்று. மீறுதல் முடிந்துபோயிற்று. உலகத்தின் பாவங்களைச் சுமந்து தீர்ப்பதற்காக தேவ ஆட்டுக்குட்டியானவராகிய இயேசுகிறிஸ்து பலியாக செலுத்தப்பட்டிருக்கிறார். பலிசெலுத்துவது முடிந்துபோயிற்று. 



கல்வாரி சிலுவையில் இயேசுகிறிஸ்து அனுபவித்த பாடுகள் முடிந்தது. தமக்கு முன்பாக  நியமிக்கப்பட்டிருக்கும் சந்தோஷத்திற்குள் இயேசுகிறிஸ்து இப்போது பிரவேசிக்கிறார்.  நாம் ஒருவேளை இயேசுகிறிஸ்துவுக்காகப் பாடுகளை அனுபவிக்கலாம். நமக்கு வேதனைகள் வரலாம். இவற்றிற்கு மத்தியில், நம்முடைய பாடுகளெல்லாம் கொஞ்சகாலம் மாத்திரமே இருக்கும். அதன்பின்பு இந்தப் பாடுகள் முடிந்துபோகும் என்று தியானம்செய்து நம்மை ஆறுதல்படுத்த வேண்டும். 



இயேசுகிறிஸ்துவின் மனுஷ ஜீவன் முடிந்துபோயிற்று. அவர் தம்முடைய சரீரத்தில்  மரணமடைகிறார். இயேசுகிறிஸ்துவின் சரீரத்திற்கு மரணம் வந்ததுபோலவே நமக்கும் மரணம் வரும். இயேசுகிறிஸ்துவின்  உலகப்பிரகாரமான ஜீவன் முடிந்ததுபோலவே நம்முடைய ஜீவனும் முடிந்துபோகும். மனுஷருடைய மீட்புக்கு செய்யவேண்டிய   மீட்பின் கிரியைகள் அனைத்தும் செய்து முடிந்தது.  மனுஷருடைய இரட்சிப்பு பூரணமாயிற்று.


இயேசுகிறிஸ்துவின் சிலுவை மரணம் சாத்தானுடைய வல்லமைக்கு தோல்வியை உண்டாக்கிற்று. தேவனுடைய கிருபையின் ஊற்றானது. இப்போது திறக்கப்பட்டிருக்கிறது. இதிலிருந்து கர்த்தருடைய ஆசீர்வாதத்தின் ஊற்றுத்தண்ணீர் எப்போதும் பொங்கி வழியும்.  இயேசுகிறிஸ்துவின் சிலுவை மரணத்தினால்  தேவனுடைய ரகசியம் முடிந்தது. மறைபொருள் வெளியரங்கமாயிற்று. நமக்குள் நற்கிரியையை ஆரம்பித்து வைக்கிற தேவன் அதை நிறைவேற்றுவதற்கு வல்லவராகயிருக்கிறார். 


இயேசுகிறிஸ்து சிலுவையில் மரிக்கும்போது, அவர் தம்முடைய தலையைச் சாய்த்து, தம்முடைய ஆவியை ஒப்புக்கொடுக்கிறார். இயேசுகிறிஸ்துவின் ஜீவனை அவரிடத்திலிருந்து யாரும் பலவந்தமாகப் பறித்துக்கொள்ளவில்லை. அவர் தாமே தம்முடைய ஜீவனை தாமாகவே ஒப்புக்கொடுக்கிறார். ""பிதாவே உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புக்கொடுக்கிறேன்'' என்று இயேசுகிறிஸ்து ஜெபம்பண்ணினார். தாம் ஜெபம்பண்ணிய வண்ணமாக, இயேசுகிறிஸ்து இப்போது தம்முடைய ஆவியை ஒப்புக்கொடுக்கிறார். மனுக்குலத்தை மீட்கும் மீட்பின் கிரயமாக, இயேசுகிறிஸ்து தம்முடைய ஆவியைப் பிதாவின் கரத்தில் ஒப்புக்கொடுக்கிறார். 


இயேசுகிறிஸ்து தம்முடைய ஆவியை ஒப்புக்கொடுக்கும்போது, தம்முடைய தலையைச் சாய்க்கிறார். சிலுவையில் அறையப்படுகிறவர்கள்  பொதுவாக வேதனையைத் தாங்கமுடியாமல், மூச்சுவிடுவதற்காக தங்களுடைய தலைகளை  மேலே உயர்த்துவார்கள். மூச்சு நின்ற பின்பு  அந்தத் தலை தானாகவே கீழே சாய்ந்துவிடும்.  ஆனால் இயேசுகிறிஸ்துவோ தம்முடைய மூச்சு நிற்பதற்கு முன்பாகவே, தம்முடைய தலையைச் சாய்க்கிறார். அதன் பின்பே தம்முடைய ஆவியை ஒப்புக்கொடுக்கிறார். இயேசுகிறிஸ்துவின் சரீர மரணம் அவருடைய சித்தத்தின் பிரகாரமாகவே நடைபெறுகிறது. 



இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்ததினால் முடிவுபெற்ற காரியங்கள்




    1. கிறிஸ்துவின் பாடுகளைப் பற்றிக் கூறியிருக்கும் எல்லா வேத வாக்கியங்களும் நிறைவு பெறுகிறது.   (சங் 22; ஏசா 53)  


    2. சாத்தானின் தோல்வி (யோவான் 12:31-32)  

        

    3. யூதருக்கும் புறஜாதியாருக்கும் நடுவேயுள்ள திரை கிழிந்து போகிறது. (எபே 2:14-18)


    4. தேவனிடம் யாருடைய துணையும் இல்லாமல், நாமே செல்லும் சிலாக்கியம் கிடைக்கிறது.  (எபே 2:18-19) 


    5. மரணத்தின் ஆட்சி அகற்றப்படுகிறது. (ரோமர் 5:12-21)


    6. பாவத்தின் வல்லமை அகற்றப்படுகிறது. (ரோமர் 6:1-23) 


    7. மரணபரியந்தம், கீழ்ப்படிதல், நேசித்தல் என்பது நடைமுறையில் விளக்கப்படுகிறது.   (பிலி 2:8)


    8. கிறிஸ்துவின் பரிபூரணம்  (எபி  2:10)


    9. எல்லாப் பாவங்களுக்கும் இரட்சிப்பு (மத் 26:28)


    10. தேவனுக்கும், மனுஷனுக்கும் இடையே சமாதானம் உண்டாகிறது              (கொலோ 1:20-22)


    11. எல்லோருக்கும் பாவத்தின் கிரயமாகிய மரணம் செலுத்தப்படுகிறது.                    (2கொரி 5:14-21)


    12. மனுஷரைச் சாத்தான் கட்டியிருக்கும் கட்டுக்கள் அவிழ்க்கப்படுகிறது. மனுஷர் பாவத்திலிருந்தும், சாத்தானிடமிருந்தும் விடுவிக்கப்படுகிறார்கள்.                    (1கொரி  6:19-20)


    13. தேவனுடைய பூரண நீதி திருப்தியாக விளங்குகிறது.  

 (ஆதி 2:17)


    14. எல்லோருக்கும் சரீர சுகமாகுதல் உண்டாகிறது.  

 (மத் 8:17) 


    15. பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகமும், அவருடைய பூரண வல்லமையும் விசுவாசிகளுக்குக் கொடுக்கப்படுகிறது.   

(கலா 3:13-14)   

             

    16. பழைய உடன்படிக்கை ஒழிந்துபோகிறது. புதிய உடன்படிக்கை முத்திரைப் போடப்படுகிறது.  

(கொலோ 2:14-17)


 இயேசு கிறிஸ்து தலையைச் சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார். இயேசு கிறிஸ்து இதுவரையிலும் தமது தலையை நேராக வைத்திருந்தார். தமது ஜீவனைத் தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தார். இப்போது, தேவனுடைய சித்தத்தின் பிரகாரம் தமது ஆவியை ஒப்புக்கொடுக்கிறார்.              



இயேசு கிறிஸ்து தமது ஆவியை ஒப்புக்கொடுத்தார். சிலுவையில் இயேசு கிறிஸ்துவின் சரீரம் தொங்கிக் கொண்டிருக்கிறது. அவருடைய சரீரத்தை விட்டு, இயேசு கிறிஸ்துவின் ஆவியும், ஆத்துமாவும் பிரசங்கம் பண்ணுவதற்காக பாதாளத்திற்குச் சென்றது. நீதிமான்களுடைய ஆவிகளை விடுதலைபண்ணுவதற்காக இயேசு கிறிஸ்து பாதாளத்திற்குச் சென்றார்.  மரித்த சரீரத்தை அடக்கம்பண்ணும்போது அதன் ஆவியும் சேர்ந்தே அடக்கம் பண்ணப்படுவதில்லை.   ஆவியும், ஆத்துமாவும் மரிப்பதில்லை.  ஒரு நபர் மரிக்கும்போது அவருடைய சரீரத்தை விட்டு, ஆவியும், ஆத்துமாவும் வெளியேறும். உயிர்த்தெழும்போது அந்த ஆவியும், ஆத்துமாவும் அவற்றின் சரீரத்தோடு மறுபடியும் ஒன்றுசேரும்




Post a Comment

0 Comments