எருசலேம் தேவாலயம் || அறிந்து கொள்வோம் பகுதி - 149 ||

அறிந்து கொள்வோம் 

பகுதி - 149

எருசலேம் தேவாலயம் 


எருசலேம் தேவாலயம் ஒரு பார்வை

1.தேவாலயத்தின் கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகள்

  • பரிசுத்த சேவை:

ஆசாரியர்களும் லேவியர்களும் எந்நேரமும் ஆராதனை, இசை மற்றும் பலி செலுத்துதல் போன்ற பணிகளில் சுழற்சி முறையில் ஈடுபட்டிருந்தனர்.

  • புறஜாதியார் பிரகாரம் :

தேவாலயத்தின் வெளிப்பிரகாரத்தில் யூதரல்லாதவர்கள் வந்து ஜெபிக்க இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த இடத்தில்தான் வியாபாரிகளும் காசுக்காரர்களும் கடைகளை அமைத்திருந்தனர்.

2.வியாபாரம் பெருகியதற்கான காரணங்கள்

  • வசதி தேடுதல்:

தொலைதூரப் பயணத்தின்போது பலி மிருகங்களைக் கொண்டு வருவது சிரமம் என்பதால், தேவாலயத்திலேயே வாங்குவது எளிதாகக் கருதப்பட்டது.

  • சங்கடத்தைத் தவிர்த்தல்:

தாங்கள் கொண்டு வரும் மிருகங்கள் ஆசாரியர்களால் பழுதற்றவை என்று அங்கீகரிக்கப்படுமா என்ற பயம் மக்களிடம் இருந்தது. எனவே, தேவாலய முத்திரை பெற்ற உறுதி அளிக்கப்பட்ட' மிருகங்களை மக்கள் நாடினர்.

  • நாணய மாற்றம்:

விக்கிரக உருவம் பொறிக்கப்பட்ட ரோம நாணயங்களுக்குப் பதிலாக, தேவாலயத்திற்கென இருந்த 'சேக்கல்' (Shekel) நாணயங்களை மக்கள் அதிக விலை கொடுத்து மாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர்.

3.கற்றுக்கொள்ள வேண்டிய ஆவிக்குரிய பாடங்கள்

இயேசு அந்த வியாபாரிகளைத் துரத்தியதன் மூலம் நமக்கு உணர்த்தும் ஆழமான உண்மைகள்: மத்தேயு 21:12-13


1.ஆராதனையில் "வசதி" (Convenience) அல்ல, "தியாகம்" (Sacrifice) அவசியம்

மக்கள் தங்கள் மந்தையிலிருந்து சிறந்ததைத் தேடி, கஷ்டப்பட்டு கொண்டு வருவதற்குப் பதிலாக, தேவாலய வாசலில் 'ரெடிமேடாக' வாங்குவதை விரும்பினர்.

  • தேவன் நம்மிடம் எதிர்பார்ப்பது நம்முடைய பிரயாசத்தையும், தியாகமுள்ள இருதயத்தையுமே தவிர, எளிதாகச் செய்து முடிக்கப்படும் சடங்குகளை அல்ல.

2.பிறர் ஆராதிப்பதற்கு தடையாக இருக்கக்கூடாது

வியாபாரம் நடந்த இடம் 'புறஜாதியார் பிரகாரம்'. அந்நிய தேசத்து மக்கள் அங்கு வந்துதான் தேவனைத் தேட வேண்டும். ஆனால், ஆடு மாடுகளின் சத்தமும், காசுக்காரர்களின் கூச்சலும் அந்த ஜெப சூழலைக் கெடுத்தது.

  • நம்முடைய செயல்கள் அல்லது சபையின் நடைமுறைகள் மற்றவர்கள் தேவனைத் தேடி வருவதைத் தடுக்கும் தடையாக மாறிவிடக்கூடாது.

3.சபை என்பது "ஜெப வீடு", "இலாப வீடு" அல்ல

தேவாலயத்தின் புனிதம் பணத்தாலும் லாப நோக்கத்தாலும் மறைக்கப்பட்டது. நிர்வாகத்தினர் பக்தியை ஒரு வருமான வழியாகக் கருதினர்.

  • ஊழியம் என்பது கொடுப்பதற்கான இடமே தவிர, நம்முடைய சுய லாபத்திற்காகப் பயன்படுத்துவதற்கான இடம் அல்ல. பக்தி ஆதாயத் தொழில் ஆகக் கூடாது (1 தீமோ 6:5).

4.உள்ளான தூய்மை - நமது சரீரம் ஒரு தேவாலயம்

புதிய ஏற்பாட்டின்படி, நம்முடைய சரீரமே பரிசுத்த ஆவியானவர் தங்கும் தேவாலயம் (1 கொரிந்தியர் 6:19).

  • எருசலேம் தேவாலயத்தில் இருந்த அசுத்தங்களை இயேசு துடைத்து எறிந்தது போல, நம்முடைய இருதயத்தில் இருக்கும் உலக ஆசைகள், கசப்பு மற்றும் பாவங்களாகிய வியாபாரங்களை அவர் அகற்ற நாம் அனுமதிக்க வேண்டும்.

5."குர்பான்" - உறவுகளைத் தியாகம் செய்து தேவனை அடைய முடியாது

பெற்றோருக்குச் செய்ய வேண்டிய கடமையைத் தவிர்த்துவிட்டு, தேவாலயத்திற்குக் காணிக்கை கொடுப்பதை இயேசு வன்மையாகக் கண்டித்தார்.

  • சமூகக் கடமைகளையும், குடும்ப உறவுகளையும் புறக்கணித்துவிட்டுச் செய்யப்படும் எந்த ஆராதனையையும் தேவன் ஏற்பதில்லை.


இயேசு தேவாலயத்தைச் சுத்திகரித்தது, சடங்காச்சாரமான பக்தியை அவர் வெறுக்கிறார் என்பதைக் காட்டுகிறது. நம்முடைய ஆராதனை நேர்மையானதாகவும், தியாகம் நிறைந்ததாகவும், பிறருக்கு ஆசீர்வாதமாகவும் இருக்க வேண்டும் என்பதே இந்த வரலாற்றின் சாரம்சம்.






Post a Comment

0 Comments