நசரேயர், ரேகாபியர் -ஒரு ஆய்வு

நசரேயர், ரேகாபியர்

                   


ஒரு ஆய்வு


யோசுவாவின் தலைமைத்துவத்தின் மூலம் கானானுக்குள் புகுந்த இஸ்ரவேலர்கள் யோசுவாவின் காலத்துக்குப் பின்பு கானானிய வழிபாடுகளுடன் தங்களை இணைத்து கொண்டு, தேவனாகிய கர்த்தரை விட்டு விலகி, பாகாலை சேவிக்கவும் அல்லது இப்படி கூட சொல்லாம் அவர்கள் கர்த்தரை போலவே பாகாலையும் சேவிக்க ஆரம்பித்தனர். இப்படி அந்த கானானிய வழிபாட்டு முறைகளை பின்பற்றினார்கள்.குறிப்பாக அவர்கள் வழிபாட்டு முறையில் திராட்சை ரசம் குடித்தல், நடனமாடுதல், வேசித்தனம் பண்ணுதல் ஆகிய சீர்கேடுகள் அதிகமாகக் காணப்பட்டன. 

இவை அனைத்துமே நாடோடிகளாயிருந்து கானானுக்குள் வந்த இஸ்ரவேல்களுக்கு முற்றிலும் புதியதாய் இருந்தது  பலர் அவற்றை ஆவலுடன் ஏற்றுக் கொண்டனர்.


ஆனால், மிக விரைவில் வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட தேவனாகிய கர்த்தருடைய மார்க்கத்தின் தனிச்சிறப்பை உணர்ந்த ஒரு சில பரிசுத்தவான்கள் (இஸ்ரவேலர்கள்) இயற்கையை அடிப்படையாகக் கொண்ட அந்த கானானியர்களின்  வழிபாட்டு முறைகள் ஒழுக்க சீர்கேடுகள், அனைத்தும் தங்களின்  ஆவிக்குரிய வாழ்வையும்,பரிசுத்தத்தை எவ்வளவாய் பாதிக்கிறது என்பதை உணர்ந்து அதை வெறுக்கவும் ஒதுக்கவும் தொடங்கினார்கள்.

தங்களுக்கு முற்றிலும் புதிதாக காணப்படும் அவர்களின் ஆராதனை முறைகளை வெறுத்து, விசேஷித்த பொருத்தனைகளைச் செய்து தங்களை அந்த கானானிய கலாச்சாரத்திலிருந்து விலக்கிக் காத்துக் கொண்டனர்.

இப்படி காத்துக் கொண்டவர்களை தான்  நசரேயர், ரேகாபியர், என்று அழைத்தார்கள்.

இது மட்டும் அல்ல  அவர்களின் தோற்றங்களும் மற்றவர்களைப் பார்க்கிலும் சற்று விந்தையாக இருந்தது.


நசரேயர்


நசரேயர் என்ற எபிரேயச் சொல் “பிரதிஷ்டை செய்யப்பட்டவர்” என்றும் “ஒப்புக்கொடுக்கப்பட்டவர்” என்றும் “பிரத்தியேகப்படுத்தப்பட்டவர்” என்றும் பொருள்படும்.


நசரேயப் பொருத்தனை செய்து கொண்ட ஒருவன் தன்னைக் கர்த்தருக்காகப் பிரத்தியேக படுத்திக் கொண்ட அல்லது பிறரால் பிரத்தியேகப்படுத்தப்பட்ட ஒருவனாவான். 


எண்: 6:2,6-8  

“நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்ல வேண்டியது என்னவென்றால்: புருசனாகிலும் ஸ்திரீயாகிலும் கர்த்தருக்கென்று விரதம் பண்ணிக்கொண்டவர்களாயிருக்கும்படி நசரேய விரதமாகிய ஒரு விசேஷித்த பொருத்தனையை பண்ணினால்,” “அவன் கர்த்தருக்கென்று விரதங்காக்கும் நாளெல்லாம் யாதொரு பிரேதத்தண்டையில் போகக்கூடாது. அவன் தன் தேவனுக்கென்று செய்த நசரேய விரதம் அவன் தலைமேல் இருக்கிறபடியால், மரணமடைந்த தன் தகப்பனாலாகிலும் தாயினாலாகிலும் சகோதரனாலாகிலும் சகோதரியினாலாகிலும் தன்னைத் தீட்டுப்படுத்தலாகாது. அவன் நசரேயனாயிருக்கும் நாளெல்லாம் கர்த்தருக்குப் பரிசுத்தமாய் இருப்பான்”


நியா: 13:5,7 

 “நீ கர்ப்பந்தரித்து, ஒரு குமாரனைப் பெறுவாய்; அவன் தலையின்மேல் சவரகன் கத்தி படலாகாது; அந்தப் பிள்ளை பிறந்தது முதல் தேவனுக்கென்று நசரேயனாயிருப்பான்;


 “அவர் என்னை நோக்கி: நீ கர்ப்பந்தரித்து, ஒரு குமாரனைப் பெறுவாய்; ஆதலால் நீ திராட்சரசமும் மதுபானமும் குடியாமலும், தீட்டானது ஒன்றும் புசியாமலும் இரு; அந்தப் பிள்ளை பிறந்தது முதல் தன் மரணநாள் மட்டும் தேவனுக்கென்று நசரேயனாயிருப்பான் என்று சொன்னார்.


1சாமு: 1:11


 “சேனைகளின் கர்த்தாவே, தேவரீர் உம்முடைய அடியாளின் சிறுமையைக் கண்ணோக்கிப் பார்த்து, உம்முடைய அடியாளை மறவாமல் நினைந்தருளி, உமது அடியாளுக்கு ஒரு ஆண் பிள்ளையைக் கொடுத்தால், அவன் உயிரோடிருக்கும் சகல நாளும் நான் அவனைக் கர்த்தருக்கு ஒப்புக் கொடுப்பேன்; அவன் தலையின் மேல் சவரகன் கத்தி படுவதில்லை என்று ஒரு பொருத்தனை பண்ணினாள்”.


இந்தப் பொருத்தனைகளெல்லாம் தேவனாகிய கர்த்தருக்குள் ஒருவன் உத்தமமாக இருப்பதைக் காட்டுவதற்காகச் செய்யப்படும் ஒன்றாகும்' இது ஒருவருடைய ஆயுட்காலம் முழுவதும் செயல்பட வேண்டிய ஒன்று.சிம்சோன், சாமுவேல் இவர்களெல்லாம் ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்வதற்காக தங்களை ஒப்படைத்தவர்கள்.



நசரேயன் மூன்று காரியங்களில் தன் பொருத்தனைகளை காத்துக் கொள்ள வேண்டும்:


1.திராட்சைச் செடியிலிருந்து கிடைக்கும் எதையும் சாப்பிடக்கூடாது; மதுபானம் அருந்தக் கூடாது

2.பொருத்தனை நாட்களில் முடி சிரைக்க படக் கூடாது

3.மரித்தோர் உடலுடன், பெற்றோர் உடலாக இருந்தாலும் சரி, எந்தவித தொடர்பும் கொள்ளக்கூடாது


இவை யாவற்றையும் முற்கால நசரேயர் பின்பற்றினார்களா? என்பது நமக்கு தெரியாது.ஆனால் சிம்சோன் இவற்றை அனுசரிக்க வில்லை என்பது நமக்குத் தெரிந்த ஒன்று.  


லேவி: 21:11


“பிரேதம் கிடக்கும் இடத்தில் போகாமலும், தன் தகப்பனுக்காகவும் தன் தாய்க்காகவும் தன்னைத் தீட்டுப்படுத்திக் கொள்ளாமலும்,” மரித்தோருடன் தொடர்பு கொள்ளக்கூடாது என்பது இதற்கு முன் கூறப்படவில்லை. இந்த விஷயத்தில் நசரேயரும், பிரதான ஆசாரியனும் ஒரே விதிமுறைக்குட்பட்டனர் என அறியலாம்.

மயிர் கத்தரிக்கக்கூடாது என்பது முன்பு சொல்லப்பட்ட  ஒரு நியதி. ஆனால் முற்காலங்களில் நசரேயன் ஆயுள் முழுவதும் மயிரை வளர்க்க வேண்டும் என்று சொல்லப்பட்டது. ஆனால், பின் நாட்களில் பொருத்தனை முடிந்ததும் மயிரை வெட்டி காணிக்கையாகப் படைக்க வேண்டும் என்று சொல்லப்பட்டது. 


எண்: 6:18 


 “அப்பொழுது நசரேயன் ஆசரிப்புக்கூடாரவாசலிலே, பொருத்தனை செய்யப்பட்ட தன் தலையைச் சிரைத்து, பொருத்தனை செய்யப்பட்ட தன் தலைமயிரை எடுத்து, சமாதானபலியின் கீழ் எரிகிற அக்கினியில் போடக்கடவன்”.


இரத்தத்தை போலவே மயிரும் மனிதனுடைய உயிரை அவனுடைய மகிமையைக் குறிப்பிட்டு நின்றது. இப்படியாக சிம்சோனின் மயிரில் அவன் பலம் அடங்கியிருந்தது.


நசரேயர்கள், திராட்சைரசம் பருகாதிருப்பதன் மூலம் கானானிய விவசாய வேளாண் கலாச்சாரத்திற்கு நேரான தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.



ரேகாபியர்


இராஜாக்களின் காலத்தில் ரேகாபியர் என்னும் ஒரு பிரிவினர் தேவனாகிய கர்த்தரின்மேல் பக்தி வைராக்கியமுள்ள  கூட்டமாய் எழுந்தனர் என வேதத்தில் காண்கிறோம். 

ஆகாப் வீட்டாரால் ஏற்பட்ட பாகால் வழிபாட்டை அழிப்பதற்கு யெகூவுக்கு துணையாயிருந்தது யோனதாப் இவன்  ரேகாப்பின் மகன்.  இந்த ரேகாப் 2 சாமு 4:2 ன் படி சவுலின் குமாரனுக்கு படை தலைவன் என்கிறார்கள்.

(2 இராஜா: 10:15-27).


கேனிய இனத்தவர்


இவர்கள் கேனிய இனத்தவர்களாக இருந்தார்கள் (1 நாளா. 2:55). 

தெற்கு பாலஸ்தீனத்துக்கும் சீனாய் மலைத் தொடருக்கும் இடைப்பட்ட பகுதியில் இவர்கள் குடியிருந்தார்கள். இவர்களில் பெரும்பாலானோர் கொல்லர்களாக இருந்தார்கள்.

அந்தக் காலத்தில் கொல்லர் வேலை தெரிந்தவர்கள் அதிகமாக இல்லை.


இஸ்ரவேலரின் வனாந்தரப் பயணத்தில் அவர்களுக்கு உதவியாக இருந்த இவர்கள் அவர்களோடு வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தில் குடியேறினார்கள்.


இஸ்ரவேலரை ஒடுக்கிய சிசெராவைக் கொன்றுபோட்ட யாகேல் கேனியனாகிய ஏபேரின் மனைவியாவாள் (நியா. 4:17).


இராஜாக்களின் காலத்தில் இவர்கள் பெரும்பாலும் பட்டணங்களில் குடியிருந்தார்கள் (1 சாமு. 30:29). 

சவுல் கேனியருக்குத் தயவுகாட்டினான் (1 சாமு. 15:6).


இவர்கள் தங்கள் தனித்துவத்தைக் காத்துக் கொள்ளும் எளிய மக்களாக இருந்தார்கள்.இப்போதும் சாக்கடல் பகுதியில் ரேகாபியரின் பழக்கங்களைப் பின்பற்றும் நாடோடி இனத்தவரைக் நாம் காண முடிகிறது.


இக்கூட்டத்தை பற்றி நமக்கு கிடைக்கும் அதிகமான விவரமெல்லாம் 

எரே: 35 ஆம் அதிகாரத்தில் இருக்கிறது. நேபுகாத்நேச்சார் படையெடுப்பின்போது இவர்கள் எருசலேமில் அடைக்கலம் புகுந்தார்கள்.


எரே: 35:11 

 “ஆனாலும், பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் இந்தத் தேசத்தில் வந்தபோது, நாம் கல்தேயருடைய இராணுவத்துக்கும் சீரியருடைய இராணுவத்துக்கும் தப்பும்படி எருசலேமுக்குப் போவோம் வாருங்கள் என்று சொன்னோம்; அப்படியே எருசலேமில் தங்கியிருக்கிறோம் என்றார்கள்”.


ரேகாபியர்கள் மற்ற வேளைகளில் வனாந்தரங்களில் நாடோடிக் கலாச்சாரத்தை பின்பற்றி வாழ்ந்து வந்தனர் என்பதை நம் அறிந்து கொள்ள முடிகிறது.

இவர்கள் வாழ்க்கை ஒழுங்கை ரேகாபின் குமாரன் யோனதாப் வகுத்தான் என்றும், இவ்வொழுங்கின்படி இம்மக்கள் வீடுகளைக் கட்டாமலும், விதை விதையாமலும், கூடாரங்களில் பரதேசிகளாய் வாழ்ந்து வந்தவரென்றும், இவர்கள் திராட்சரசம் குடிப்பதில்லை என்றும் நம் அறிந்து கொள்ள முடிகிறது. 

(எரே: 35:6-10). எரேமியாவின் காலமளவும் அக்கூட்டத்தார் இந்த ஒழுங்குகளை தவறாது கைக்கொண்டு வாழ்ந்தனர்.


நசரேயர் மற்றும் தீர்க்கதரிசிகள் உடன் சேர்ந்து இந்த ரேகாபியர் கூட்டத்தாரும் இஸ்ரவேல் மார்க்கத்துடன் அல்லது யூத மதத்திற்குள் முழுவதுமாக கானானிய கலாச்சாரம் கலந்து விடாதபடி அதனைக் பாதுகாத்தனர் என்று கூறலாம். 

அது மட்டுமல்ல… இஸ்ரவேல் மார்க்கம் வேரூன்றி நிலைத்திருக்கிறது என்றால் அதற்கு இந்த நசரேயர்களும், ரேகாபியருமே முக்கிய காரணம் எனலாம்.



Post a Comment

0 Comments