பாடுகளின் வாரம் செவ்வாய்க்கிழமை நிகழ்வு - 5

 படுகளின் வாரம்

செவ்வாய்க்கிழமை நிகழ்வு - 5


ஜீவனை சிநேகிப்பதும், வெறுப்பதும்


(யோவா 12 : 20-26)




கிரேக்கர் 


பண்டிகையில் ஆராதனை செய்யவந்தவர்களில் சில கிரேக்கர் இருந்தார்கள்  (யோவா 12:20). 


பஸ்கா பண்டிகையை ஆசரிப்பதற்காக ஏராளமான ஜனங்கள் எருசலேமுக்கு வந்திருக்கிறார்கள். பண்டிகையில் ஆராதனை செய்ய வந்தவர்களில் சில கிரேக்கரும் இருக்கிறார்கள். அவர்கள் இயேசுகிறிஸ்துவைக் காண விரும்புகிறார்கள். இவர்கள் ஒருவேளை  சிதறிப்போன யூதர்களாக இருக்கலாம். இஸ்ரவேலின் வரலாற்றில் ஏராளமான யூதர்கள் புறஜாதி தேசங்களுக்குச் சிதறிப்போயிருக்கிறார்கள். ஏராளமான புறஜாதி தேசங்கள் கிரேக்கப்பேரரசின் ஆளுகைக்குட்பட்டிருக்கிறது. ஆகையினால் சிதறிப்போன யூதர்களை எருசலேமிலுள்ள யூதர்கள் கிரேக்கர்கள் என்று அழைப்பது வழக்கம். 


இந்தக் கிரேக்கர்கள் ஒருவேளை புறஜாதியாராகவும் இருக்கலாம் என்றும் வேதபண்டிதர்களில் சிலர் கருத்து சொல்லுகிறார்கள். இவர்கள் தேவனுக்குப் பயந்து பக்தியோடு ஜீவிக்கிறவர்கள். கொர்நேலியுவைப் போன்றோர் இப்படிப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள். இவர்களெல்லாம் இஸ்ரவேலின் காணியாட்சிக்கு புறம்பானவர்களாக இருந்தாலும், இஸ்ரவேலின் தேவனை மெய்யாகவே ஆராதனை செய்கிறார்கள். 


இவர்கள் கிரேக்கராக இருக்கிறபடியினால், இவர்கள் விருத்தசேதனம்பண்ணாதவர்களாக இருப்பார்களென்றால் பஸ்காவில் புசிப்பதற்கு இவர்களுக்கு அனுமதி கொடுக்கப்படமாட்டாது.  ஆனாலும் இவர்கள் பண்டிகையில் ஆராதனை செய்ய வரலாம்.  இவர்களைப்போலவே நாமும் ஒரு காலத்தில் இஸ்ரவேலின் காணியாட்சிக்குப் புறம்பானவர்களாக இருந்தோம். தேவாலயத்தின் உட்பிரகாரத்திற்குள் பிரவேசிக்கக்கூடாதவாறு, வாசல்கள் நமக்கு அடைக்கப்பட்டிருந்தது. கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இரட்சிக்கும் கிருபையினால், தேவன் நம்மைத் தம்முடைய பிள்ளைகளாக அங்கீகரித்திருக்கிறார். ஒரு காலத்தில் இஸ்ரவேலின் காணியாட்சிக்கு புறம்பானவர்களாக இருந்த நாம், இப்போது அவருடைய காணியாட்சிக்குள் கூட்டிச் சேர்க்கப்பட்டிருக்கிறோம். 


பண்டிகையில் ஆராதனை செய்ய வந்தவர்களில் சில கிரேக்கர் இருந்தார்கள். இவர்கள் புறஜாதி மார்க்கத்திலிருந்து யூதமார்க்கத்திற்கு மாறியவர்கள்.            இவர்கள் தேவாலயத்திற்கு வரும்போது புறஜாதியாருக்கென்று நியமிக்கப்பட்டிருக்கும் வெளிப்பிரகாரத்தில் கூடிவந்து ஆராதனை செய்வார்கள். அவர்கள் யூதமார்க்கத்திற்கு மாறவில்லையென்றால், பண்டிகையின் போஜனத்தில் பங்குபெற அவர்களுக்கு அனுமதியில்லை.  


இயேசுவைக் காண விரும்புகிறோம்


அவர்கள் க-லேயாநாட்டுப் பெத்சாயிதா ஊரானாகிய பிலப்புவினிடத்தில் வந்து: ஐயா, இயேசுவைக் காண விரும்புகிறோம் என்று அவனைக் கேட்டுக்கொண்டார்கள்  (யோவா 12:21).


பண்டிகையில் ஆராதனை செய்ய வந்திருக்கிற கிரேக்கர்கள் இயேசுகிறிஸ்துவை   மகிமைப்படுத்த விரும்புகிறார்கள். அவரோடு பேசிப்பழகி நெருங்கிய ஐக்கியத்தோடு இருக்க விரும்புகிறார்கள். அதற்காக அவர்கள் இயேசுவைக்காண விரும்புகிறார்கள். இயேசுவைப் பார்க்க வருகிறவர்கள் முறைப்படி வரவேண்டும். இவர்களுக்கு இயேசுவைக் காண வேண்டுமென்று ஆசையிருக்கிறது. தங்களுடைய உள்ளத்தில் ஆசையை வைத்துக்கொண்டு, அவரைப் பார்ப்பதற்கு எந்த முயற்சியும் பண்ணாமல் இவர்கள் சும்மாயிருந்துவிடவில்லை. இயேசுவைப் பார்க்க  தங்களால் என்ன செய்யமுடியுமோ அதை விடாமுயற்சியோடு செய்கிறார்கள். 


பண்டிகையில் ஆராதனைசெய்ய வந்திருக்கிற கிரேக்கர்கள், இயேசுகிறிஸ்துவைக் காண வேண்டும் என்னும் தங்கள் விருப்பத்தை, அவருடைய சீஷர்களில் ஒருவனாகிய பிலிப்புவினிடத்தில் கூறுகிறார்கள். இந்தக் கிரேக்கர்களுக்குப் பிலிப்புவை ஏற்கெனவே தெரியும். பிலிப்புவோடு இவர்களுக்கு பழக்கம் இருக்கிறது. இயேசுகிறிஸ்துவைத் தெரிந்திருக்கிறவர்கள் நமக்கும் அறிமுகமானவர்களாக இருந்தால் அது       நமக்கு ஆசீர்வாதமாக இருக்கும். பிலிப்பு இயேசுகிறிஸ்துவோடு நெருங்கிய ஐக்கியத்திலிருக்கிறான். அவரை உண்மையாகப்  பின்பற்றிச் செல்கிறான். பிலிப்புவின் நல்ல சுபாவத்தைக் கிரேக்கர்கள் பார்த்து, அவன் மூலமாக இயேசுவைக் காணலாம் என்று தீர்மானிக்கிறார்கள். 


இக்காலத்தில்கூட பரலோகத்திலிருக்கிற இயேசுகிறிஸ்துவைக் காணவேண்டுமென்று விரும்புகிறவர்கள், அவரைப்பற்றி அவருடைய ஊழியக்காரர்களிடத்தில் விசாரிக்கவேண்டும். கர்த்தருடைய ஊழியக்காரர்கள் ஜனங்களை அவரிடத்தில் வழிநடத்துவதற்காக இந்த  பூமியில்  பிரதிஷ்டை பண்ணப்பட்டு நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இயேசுகிறிஸ்துவைத் தேடிவரும் ஆத்துமாக்களை அவரிடத்தில் வழிநடத்துவதுதான் ஊழியக்காரர்களின் பிரதான ஊழியம். 


இயேசுகிறிஸ்துவைப்பற்றி அறிந்துகொள்ள, பிலிப்பு கிரேக்கர்களை அவரிடத்தில் அழைத்து வருகிறான். இந்த ஊழியம் அப்போஸ்தல ஊழியத்திற்கு முன்உதாரணமாக இருக்கிறது. அப்போஸ்தலர்கள் புறஜாதியாரிடத்தில் சென்று இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கவேண்டும். இங்கு பிலிப்புவின் மூலமாக புறஜாதியாருக்கு கிறிஸ்துவின்  ஊழியம்   நடைபெறுகிறது. அப்போஸ்தலர்கள் புறஜாதியாரைக் கிறிஸ்துவினிடத்தில் மனந்திரும்பச்செய்வதற்கு ஊழியம் செய்யவேண்டும்.


பண்டிகையில் ஆராதனை செய்ய வந்த கிரேக்கர்கள் பிலிப்புவிடத்தில் வந்து ""ஐயா, இயேசுவைக்காண விரும்புகிறோம்'' என்று கேட்டுக்கொள்கிறார்கள். இவர்களுடைய விண்ணப்பத்தில் ஒரு சில வார்த்தைகள் மாத்திரமே இருக்கிறது. மிகவும் பணிவோடும் மரியாதையோடும் பிலிப்புவிடத்தில் பேசுகிறார்கள். பிலிப்புவை ""ஐயா'' என்று அழைக்கிறார்கள். இது மரியாதையாக அழைக்கும் வார்த்தை. இந்த மதிப்புக்கும் மரியாதைக்கும் பிலிப்பு பாத்திரவானல்ல. அவன் இயேசுகிறிஸ்துவோடு கூடயிருப்பதினால் அவனுக்கும் மரியாதை கிடைக்கிறது.  


கிரேக்கர்கள் தங்கள் நோக்கத்தில் சுறுசுறுப்பாக செயல்படுகிறார்கள். இயேசுவைக் காணவிரும்புகிறோம் என்று சொல்லுகிறார்கள்.  இயேசுவின் முகத்தைப் பார்ப்பதற்காக மாத்திரம் அவர்கள் வரவில்லை. இயேசுகிறிஸ்துவின் முகம் ஒரு காணட்சிப்பொருளல்ல. இயேசுகிறிஸ்துவைப்பற்றி யார் மூலமாகவோ இவர்கள் கேள்விப்பட்டிருக்கிறார்கள். தங்களுடைய வீடுகளில் வந்து அவர்கள் இயேசுகிறிஸ்து செய்த அற்புதத்தைச் சாட்சியாக சொல்லியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட இயேசுகிறிஸ்துவைத் தாங்களும் பார்த்து, அவரோடு பேசவேண்டுமென்று விரும்புகிறார்கள். தாங்கள் பேசினால் மாத்திரம் போதாது என்றும், இயேசுகிறிஸ்துவின் உபதேசத்தையும் கேட்கவேண்டுமென்றும் கிரேக்கர்கள் விரும்புகிறார்கள். இவர்கள் பண்டிகையில் ஆராதனை செய்ய வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு இயேசுகிறிஸ்துவைக் காணும் சிலாக்கியம் கிடைத்திருக்கிறது. 


விசுவாசிகளாகிய நாமும் பரிசுத்த ஆராதனைகளில் பங்குபெற்று கர்த்தரை ஆராதனை செய்யவேண்டும். கிரேக்கர்கள் இயேசுவைக்காணவேண்டுமென்று விரும்பியதுபோல, ஆராதனை வேளையில் நாமும் இயேசுவைக்காணவேண்டுமென்று விரும்பவேண்டும். இயேசுகிறிஸ்து வரும்போது  நாம் அவரைக் காணவில்லையென்றால், நம்முடைய நிலமை பரிதாபமாகயிருக்கும்.


""பிலிப்பு'' இயேசுகிறிஸ்துவின் பன்னிரெண்டு சீஷர்களில் ஒருவன். இயேசு கிறிஸ்து பிலிப்புவை அழைக்கிறார்.   பிலிப்பு நாத்தான்வேலின் சகோதரன்.              


பிலிப்பு அந்திரேயாவுக்கு அறிவித்தான்


பி-ப்பு வந்து, அதை அந்திரேயாவுக்கு அறிவித்தான்; பின்பு அந்திரேயாவும் பி-ப்புவும் அதை இயேசுவுக்கு அறிவித்தார்கள் (யோவா 12:22).


கிரேக்கர்கள் பிலிப்புவிடம் ""இயேசுவைக் காணவிரும்புகிறோம்'' என்று கேட்டுக்கொள்கிறார்கள். அவர்களுடைய வேண்டுகோளைப் பிலிப்பு இயேசுகிறிஸ்துவின் மற்றொரு சீஷனாகிய அந்திரேயாவிடம் அறிவிக்கிறான். அந்திரேயாவும் கிரேக்கருடைய விண்ணப்பத்தை ஏற்று, இருவருமாகச் சேர்ந்து, கிரேக்கருடைய வேண்டுகோளை இயேசுகிறிஸ்துவுக்கு அறிவிக்கிறார்கள். கர்த்தருடைய ஊழியக்காரர்கள் எப்படி ஊழியம் செய்யவேண்டும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு எடுத்துக்காட்டாக எழுதப்பட்டிருக்கிறது. ஆத்துமாக்களை இயேசுகிறிஸ்துவிடம் வழிநடத்தும்போது, ஊழியக்காரர்கள் ஒருவருக்கொருவர் ஒற்றுமையாக இணைந்து, ஆத்துமாக்களுக்கு உதவிசெய்யவேண்டும். இயேசுகிறிஸ்து ஜனங்களுக்கு உபதேசம்பண்ணிக்கொண்டிருக்கிறபோது, அந்திரேயாவும் பிலிப்புவும், கிரேக்கர்கள் அவரைக்காண விரும்புகிறார்கள் என்னும் செய்தியை அறிவிக்கிறார்கள் (யோவா 12:29).  இயேசுகிறிஸ்து உபதேசம்பண்ணிக்கொண்டிருக்கிற இடத்தில் ஏராளமான ஜனங்கள் அவருடைய உபதேசத்தை  நின்று கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். 


""அந்திரேயா''  இயேசுகிறிஸ்துவின்  பன்னிரெண்டு சீஷர்களில் ஒருவன். மீன்பிடிக்கிறவன், பேதுருவின் சகோதரன். யோவான் ஸ்நானனின் சீஷனாக இருந்தான்.


மனுஷகுமாரன் மகிமைப்படும்படியான வேளை


அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: மனுஷகுமாரன் மகிமைப்படும்படியான வேளை வந்தது  (யோவா 12:23). 


இயேசுகிறிஸ்து மகிமையுள்ளவர். ஏராளமான ஜனங்கள் கிறிஸ்துவைப் பின்பற்றுவதினால் அவருக்கு மகிமை உண்டாகிறது (யோவா 12:23,24). அந்த மகிமையை இயேசுகிறிஸ்து அங்கீகரித்துக்கொள்கிறார். இயேசுகிறிஸ்துவைப்பின்பற்றுகிறவர்களுக்கும் இயேசுகிறிஸ்துவினால் மகிமை உண்டாகும் (யோவா 12:25,26). 


ஆத்துமாக்கள் அறுவடைக்கு ஆயத்தமாகயிருப்பதை இயேசுகிறிஸ்து முன்னறிந்திருக்கிறார். புறஜாதி ஜனங்கள் இயேசுகிறிஸ்துவைத் தங்கள் இரட்சகராக ஏற்றுக்கொண்டு இரட்சிக்கப்படுகிறார்கள். இவர்கள் அறுவடையின் முதற்கனிகளாக இருக்கிறார்கள். கிரேக்கர்கள் தம்மைக் காணவேண்டுமென்று விரும்பி தம்மிடத்தில் வந்திருக்கிறதைப் பார்க்கிற இயேசுகிறஸ்து ""மனுஷகுமாரன் மகிமைப்படும் வேளை வந்தது'' என்று கூறுகிறார். 


இயேசுகிறிஸ்துவின் முடிவு தேவனுடைய சித்தத்தின் பிரகாரமாகவும் திட்டத்தின் பிரகாரமாகவும் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. மீட்பராகிய இயேசுகிறிஸ்து மகிமைப்படவேண்டும் என்பதே தேவனுடைய திட்டம். இயேசுகிறிஸ்து யூதர்களுக்கு மாத்திரம் இரட்சகர் என்று           இந்த உலகத்திற்கு வராமல், அவர் உலக இரட்சகராக வந்திருக்கிறார். யூதருக்கும் புறஜாதியாருக்கும் இயேசுகிறிஸ்து இரட்சகராக இருக்கிறார். இப்போது கிரேக்கர்கள் இயேசுகிறிஸ்துவைத் தேடிக்கொண்டு வருகிறார்கள். இந்தவேளை  இயேசுகிறிஸ்துவுக்கு முக்கியமானதாகத் தெரிகிறது. கிரேக்கர்கள் தம்மைப் பார்க்க வந்திருக்கும் வேளையை, தாம் மகிமைப்படும்படியான வேளை என்று இயேசுகிறிஸ்து அறிவிக்கிறார். 


புறஜாதியார் தம்மிடத்தில் வருவது இயேசுகிறிஸ்துவுக்கு ஆச்சரியமான காரியமல்ல.  ஆனால் இயேசுகிறிஸ்துவோடு கூடயிருக்கிற சிநேகிதர்களுக்கும், அவரை விரோதிக்கிற சத்துருக்களுக்கும், புறஜாதியார் அவரிடத்தில் வருவது ஆச்சரியமாயிருக்கிறது. புறஜாதியாரின் அழைப்பும்,அவர்களுடைய இரட்சிப்பும் மனுஷகுமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் மகிமையில் முக்கியம் இடம்பெற்றிருக்கிறது. யூதர்கள் மாத்திரம் என்று இல்லாமல், புறஜாதியாரும் இரட்சிக்கப்படும்போது, இரட்சிக்கப்பட்டவரின் எண்ணிக்கை திரளாக இருக்கும். அவர்கள் எல்லோருமே மீட்பரை மகிமைப்படுத்துவார்கள். ஏராளமானோர் இயேசுவை மகிமைப்படுத்தும்போது அந்த  மகிமை பெரிதாயிருக்கும். இயேசுகிறிஸ்து அப்படிப்பட்ட வேளையை அறிந்தவராக, மனுஷகுமாரன் மகிமைப்படும்படியான வேளை வந்தது என்று அறிவிக்கிறார். தேவனுடைய திட்டத்தில், இயேசுகிறிஸ்து மகிமைப்படுவதற்கு ஒருவேளை நியமிக்கப்பட்டிருக்கிறது. நியமிக்கப்பட்டிருக்கும்  அந்தவேளை இப்போது வந்திருப்பதாக இயேசுகிறிஸ்து வெளிப்படுத்துகிறார். 


இயேசு கிறிஸ்து பாடுகளை அனுபவிக்கும் வேளை வந்துவிட்டது.  மகிமைப்படும் வேளை யூதருக்கும் புறஜாதியாருக்கும் நடுவில் இருக்கும் திரை அகற்றப்படும்போது வரும். அந்தத் திரை அகற்றப்படும்போது, யூதரும், புறஜாதியாரும் ஒரே சரீரமாக இருப்பார்கள். 


கோதுமை மணி


மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக்கொடுக்கும்  (யோவா 12:24). 


மனுஷகுமாரன் மகிமைப்படவேண்டுமென்றால், அவர் மரிக்கவும் வேண்டுமென்று இயேசுகிறிஸ்து தம்முடைய சிலுவை மரணத்தைப்பற்றி இங்கு வெளிப்படுத்திக் கூறுகிறார். ""மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச்  சொல்லுகிறேன்'' என்று கூறி தம்முடைய வார்த்தையின் நிச்சயத்தை தெளிவுபடுத்துகிறார்.  ""கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும்''. சாகாத கோதுமை மணியினால் ஒரு பிரயோஜனமும் இருக்காது. அது ஒரு பலனும் கொடுக்காது. ஆனால் ""கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து செத்ததேயாகில் மிகுந்த பலனைக்கொடுக்கும்'' என்றும் கூறி, இயேசுகிறிஸ்து தம்முடைய மரணத்தையும், அதன் மூலமாக தாம் மகிமைப்படப்போவதையும்  வெளிப்படுத்திக் கூறுகிறார்.


இயேசுகிறிஸ்து சிலுவையில் மரிக்கவேண்டுமென்பது ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. ƒசிலுவை மரணம் தாழ்மையான மரணமாகும். தாழ்மையின் மூலமாகவே இயேசுகிறிஸ்து மகிமையடைகிறார். சபைக்கு இயேசுகிறிஸ்துவே தலையாகவும் அஸ்திபாரமாகவும் இருக்கிறார். இயேசுகிறிஸ்து பரலோகத்திலிருந்து இந்த பூமிக்கு வரவில்லையென்றால், இந்த பூமியில் வந்து அவர் பாடுகளை அனுபவித்து சிலுவையில் தம்முடைய ஜீவனை ஒப்புக்கொடுக்கவில்லையென்றால், இயேசுகிறிஸ்துவினால்  தம்முடைய சபைக்கு தலையாகவும் வேராகவும் இருக்கமுடியாது. தம்முடைய சிலுவை மரணத்தின் மூலமாகவே   இயேசுகிறிஸ்து நம்முடைய இரட்சிப்பை வாய்க்கப்பண்ணியிருக்கிறார். தம்முடைய ஆத்துமாவை அவர் மரணத்திற்கு ஊற்றியிருப்பதினால்தான் மனுக்குலத்திற்கு இரட்சிப்பு உண்டாயிற்று. 


இயேசுகிறிஸ்து இந்த உலகத்தில் அனுபவித்த பாடுகளை விவரிக்கும்போது, அவர்  நிலத்தில் விழுந்து செத்துப்போன கோதுமை மணியைப்போல இருக்கிறார் என்று கூறலாம். அவர் மகிமையடையும்போது நிலத்தில் விழுகிறார். நிலத்தில் விழுவது மாத்திரமல்ல, அவர் தம்முடைய ஜீவனையே ஒப்புக்கொடுத்து செத்துப்போகிறார். கல்லறையில் இயேசுகிறிஸ்துவின் சரீரம் அடக்கம்பண்ணப்பட்டபோது, நிலத்தில் விதைக்கப்பட்டுள்ள கோதுமை மணியைப்போல இருந்தார். நிலத்தில் விழும் கோதுமை மணியானது துளிர்விட்டு முளைத்து எழும்புவதுபோல, இயேசுகிறிஸ்துவும் கல்லறையிலிருந்து மறுபடியும் உயிரோடு எழும்பியிருக்கிறார். நிலத்தில் ஒரு கோதுமை மணியை விதைத்தால், அது முளைத்து      பயிராகி  கனிகொடுக்கும்போது, அந்தக் கோதுமைச்செடியில் ஏராளமான கோதுமை மணிகள் இருக்கும். நிலத்தில் விழுந்து செத்துப்போன கோதுமை மணியானது முளைத்துப் பலுகிப்பெருகும். 


இந்தக் கோதுமை மணியைப்போலவே, கிறிஸ்துவிற்குள் மரிக்கிற  விசுவாசிகளாகிய நம்முடைய ஊழியத்தின் மூலமாக, ஏராளமான விசுவாசிகள் இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொள்வார்கள். ஆத்துமாக்கள் இரட்சிக்கப்படுவதற்கு இயேசுகிறிஸ்துவின் சிலுவை மரணமே மூலகாரணமாயிற்று. இயேசுகிறிஸ்துவைப் பின்பற்றுகிற விசுவாசிகளாகிய நாம், நிலத்தில் விழுந்து செத்துப்போய் முளைக்கும் கோதுமை மணியைப்போல பலன் தரவேண்டும். 


இயேசு கிறிஸ்து தம்மை ஒரு கோதுமை மணிக்கு ஒப்பிட்டுக் கூறுகிறார். அவருடைய மரணம் கோதுமை மணி விதைக்கப்படுவதற்கு ஒப்பாயிருக்கிறது. விதை நிலத்திற்குள் இருப்பதுபோன்று, இயேசு கிறிஸ்துவையும் அடக்கம் பண்ணினார்கள். விதைக்கப்பட்ட விதை முளைத்து எழும்பும். அதுபோல இயேசு கிறிஸ்துவும் உயிர்த்தெழுந்தார். முளைக்கும் விதை பயிராகி, பலன் தரும். அதுபோலவே, உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்து தம்முடைய பிள்ளைகளுக்கு நித்திய ஜீவனைத் தருகிறார். இயேசு கிறிஸ்து மகிமையடைந்திருக்கிறார். மிகுந்த பலனைத் தருகிறார். இயேசு கிறிஸ்துவை மகிமைப்படுத்தாத சபை மகிமையான சபையாக இருக்க முடியாது.  


இயேசுகிறிஸ்துவின் மரணமும், உயிர்த்தெழுதலும் விளக்கப்பட்டுள்ள விதம்


    1. தேவை - அவருடைய மரணம் 

    2. காரணம் - நிலத்தில் விழுந்தது.

    3. இடம் - நிலத்திற்குள் 

    4. தற்போதுள்ள நிலைமை - செத்திருக்கிறது.

    5. சுயநலமின்மை - தனித்திருக்கவில்லை.

    6. உயிர்த்தெழுதல் - கொடுக்கிறது

    7. நோக்கம் - மிகுந்த பலன், உலகத்தின் மீட்பு 

    8. ஆச்சரியம் - மரணமும், உயிர்த்தெழுதலும் ஆச்சரியமான காரியம்.


நாம் விதையை நிலத்தில் விதைக்கிறோம். அந்த விதை முளைத்து, அதிகமாகப் பலன் தரும் என்று நம்புகிறோம். அதுவும் பலன் தருகிறது. அதன் பலனைப் புசிக்கிறோம். ஆனாலும், இந்தக் காரியங்களெல்லாம் எப்படி நடைபெறுகிறது என்று நமக்குத் தெரியவில்லை. இது நமக்கு இரகசியமாகவே இருக்கிறது. பூமி, காற்று, தண்ணீர், சூரியஒளி ஆகியவையெல்லாம் சேர்ந்து, ஒரு புதிய ஜீவனை எப்படி உண்டுபண்ணுகிறது என்று நமக்குப் புரியவில்லை. ஆனாலும், நமது கண்களுக்கு முன்பாகவே விதைக்கப்படும் விதை முளைக்கிறது. இந்தக் காரியம் நமக்குப் புரியவில்லையென்றாலும், நாம் இதை விசுவாசிக்கிறோம். அதுபோலவே, தேவனுடைய கிரியைகளும் நமக்கு ஆச்சரியமாகவும், இரகசியமாகவும் உள்ளது. இயேசு கிறிஸ்து மரித்தார். அடக்கம்பண்ணப்பட்டார். மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார். திரளான ஜனங்களுக்கு நித்திய ஜீவனைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். இந்தச் சத்தியம் நமக்கு ஆச்சரியமானதாகவும், புரியாத இரகசியமானதாகவும் இருக்கின்ற போதிலும் இதை நாம் விசுவாசிக்க வேண்டும்.


தன் ஜீவனை சிநேகிக்கிறவன்


தன் ஜீவனைச் சிநேகிக்கிறவன் அதை இழந்துபோவான்; இந்த உலகத்தில் தன் ஜீவனை வெறுக்கிறவனோ அதை நித்திய ஜீவகாலமாய்க் காத்துக்கொள்ளுவான் (யோவா 12:25). 


நாம் இந்த உலகத்திற்கு ஒத்தவேஷம் தரிக்கக்கூடாது. தன்னுடைய ஜீவனை சிநேகிக்கிறவன் அதை இழந்துபோவான் என்றும், இந்த உலகத்தில்  தன் ஜீவனை வெறுக்கிறவன் அதை நித்திய ஜீவகாலமாய் காத்துக்கொள்வான் என்றும் இயேசுகிறிஸ்து கூறுகிறார். இந்த உலகத்தின்மீது பற்றுவைக்காமல், மறுஉலகமான பரலோகத்தின்மீதே நாம் வாஞ்சையாயிருக்கவேண்டும் என்பது இயேசுகிறிஸ்துவின் அடிப்படை உபதேசம்.


இந்த உலகத்தில் ஜீவிக்கிற ஜனங்களில் ஏராளமானோர் தங்களுடைய உலகப்பிரகாரமான ஜீவனை நேசிக்கிறார்கள்.  இதன் விளைவாகத் தங்கள் ஜீவனையே இழந்துபோகிறார்கள். தங்களுடைய உலகப்பிரகாரமான ஜீவனை அதிகமாக நேசிப்பதினால், தங்களுக்கு வாக்குப்பண்ணப்பட்டிருக்கும் நித்திய ஜீவனை இவர்கள் இழந்துபோகிறார்கள். மாம்சப்பிரகாரமான ஜீவனை அதிகமாக நேசிக்கிறவர்களுக்கு, அவர்களுடைய ஆயுசுகாலம் குறைந்துபோகிறது. தாங்கள் எந்த ஜீவனை அதிகமாக நேசிக்கிறார்களோ, அந்த ஜீவன் அவர்களைவிட்டு விரைவாக நீங்கிப்போகிறது. ஆகையினால் நம்முடைய மாம்ச ஜீவனை அதிகமாய் நேசிப்பதற்குப் பதிலாக, ஆவிக்குரிய நித்திய ஜீவனை அதிகமாய் நேசிக்கவேண்டும். 


நம்முடைய சரீரப்பிரகாரமான ஜீவனில் அதிகமாக ஆசைவைத்து, இயேசுகிறிஸ்துவை மறுதலிக்கிறவர்கள் தங்கள் ஜீவனை இழந்துபோவார்கள். இவர்கள் இழந்துபோவது இந்த பூமிக்குரிய ஜீவனல்ல. இது மறுஉலகத்திற்குரிய நித்திய ஜீவன்.  உலகப்பிரகாரமான ஆசைகளுக்காக இவர்கள் பரலோகத்தின் சந்தோஷத்தை இழந்துபோய்விடுகிறார்கள். மாம்ச ஜீவனை நேசித்து, உலகத்தின் எல்லா இச்சைகளையும் அனுபவித்து, இது தான் வாழ்வின் ஆசீர்வாதம் என்று நினைக்கிறவர்களுக்கு, ஆசீர்வாதத்திற்குப் பதிலாக சாபமே வரும். 


இயேசுகிறிஸ்து தம்முடைய ஜீவனையே நமக்காக ஒப்புக்கொடுத்திருக்கிறார். தம்முடைய சொந்த இரத்தத்தைக் கிரயமாகச் செலுத்தி நம்முடைய ஆத்தும இரட்சிப்பைக் கிரயத்திற்குப் பெற்று, அதை நமக்கு இலவசமாகக் கொடுக்கிறார். அப்பேர்ப்பட்ட இரட்சிப்பைக்குறித்து நாம் கவலையில்லாமல் இருக்கக்கூடாது. மாம்ச ஜீவனை     நேசிப்பதற்குப் பதிலாக, ஆவிக்குரிய ஜீவனை நேசிக்கவேண்டும். இந்த உலகத்தை நேசிப்பதற்குப் பதிலாகப் பரலோகத்தை நேசிக்கவேண்டும். 


தேவனுடைய பரிசுத்தத்தை முன்னிட்டு, தங்களுடைய மாம்சப்பிரகாரமான ஜீவனை இந்த உலகத்தில் வெறுக்கிறவர்களுக்கு ஆவிக்குரிய ஆசீர்வாதம் உண்டு. தங்களுடைய ஆத்தும ஜீவனைப் பாதுகாத்துக்கொள்வதற்காக,  தங்கள் மாம்சப்பிரகாரமான ஜீவனை வெறுக்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள்.  இயேசுகிறிஸ்துவின் சீஷர்களாக இருக்க வேண்டுமென்றால், நாம் இந்த உலகத்தில் நம்முடைய ஜீவனை வெறுக்கவேண்டும். ""இந்த  உலகத்தில் நம்முடைய ஜீவன்'' என்னும் வாக்கியத்திற்கு ""இந்த உலகத்திலுள்ள மாம்சப்பிரகாரமான ஆசைகளும் இச்சைகளும்'' என்று பொருள். உலகத்தின் ஆசையும் மாம்சத்தின் இச்சையும் மாயையானது என்பதை  நாம் அறிந்து, அவற்றை வெறுத்து, விட்டுவிலகி வரவேண்டும். இயேசுகிறிஸ்துவின் ஊழியத்தைச் செய்வதற்கு மாம்சப்பிரகாரமான இச்சைகள் தடையாக இருக்கக்கூடாது. கிறிஸ்துவின் ஊழியமும் உலகத்தின் ஊழியமும் நமக்குள்ளே  போட்டிபோட்டுக்கொண்டு இருக்கக்கூடாது. இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்ய ஒருவனாலும் கூடாது. 


தேவனுடைய பரிசுத்தத்தை நாம் பெற்றுக்கொள்ளும்போது, நம்முடைய மாம்சத்தின் இச்சைகளிலிருந்து நமக்கு வெற்றி கிடைக்கும். இது நம்முடைய சுயபலத்தினால் கிடைக்கிற வெற்றியல்ல. தேவனுடைய பரிசுத்தத்தின் வல்லமையினால் கிடைக்கிற வெற்றியாகும். இது பரிசுத்தத்தின் ரகசியமாக இருக்கிறது. மனுஷன் தன் சுயமுயற்சியினால் ஒருபோதும் பரிசுத்தமடைவதில்லை.  தேவன் நம்முடைய பரிசுத்தத்தை விரும்புகிறார். இந்த சத்தியத்தை புரிந்துகொள்வதே சிறந்த ஞானம்.   நாம் தேவனுடைய பரிசுத்தத்தின் மேல் பிரியமாயிருக்கும்போது, பாவத்தைக்குறித்து நமக்குள் வெறுப்பு உண்டாகும். கிறிஸ்துவை நேசிக்கிறவர்கள் பாவத்தை வெறுப்பார்கள். றிஸ்துவைப் பின்பற்றவேண்டுமென்று விரும்புகிறவர்கள் இந்த உலகத்தில் தங்கள் ஜீவனை வெறுப்பார்கள். 


நம்முடைய ஜீவனை வெறுத்து அதை இழந்துபோனால், தேவன் அதை நமக்குத் திரும்பத் தருவார். தேவன் திரும்பக் கொடுப்பது சாதாரணமான ஆசீர்வாதமாக இராது. இந்த உலகத்தில் தன் ஜீவனை வெறுக்கிறவன் எவனோ அவன் அதை நித்திய ஜீவகாலமாய் காத்துக்கொள்வான். இந்த உலகத்தில் நாம் நம்முடைய மாம்சப்பிரகாரமான ஜீவனை வெறுத்து ஜீவிக்கும்போது, நீதிமான்கள் உயிர்த்தெழும்போது நாமும் உயிர்த்தெழுவோம். நம்முடைய ஜீவனை நித்திய ஜீவகாலமாய் காத்துக்கொள்வோம். மாம்ச ஜீவனை இழந்தவர்கள் நித்திய ஜீவனைப்பெற்றுக்கொள்வார்கள். 


வேதாகமத்தில் இரண்டு விதமான சிநேகத்தைக் குறித்து நாம் வாசிக்கிறோம். ஒன்று நம்மை நாமே சிநேகிப்பது. அல்லது மற்ற மனுஷரையோ,  உலகப்பொருளையோ சிநேகிப்பது. இதற்கான கிரேக்க வார்த்தை ""பிலேயோ'' மற்றொரு சிநேகம் தேவனிடத்தில் சிநேகமாக இருப்பது. இதற்கான கிரேக்க வார்த்தை ""அகாபோ''  யோவான் 11:3,36 ஆகிய வசனங்களில் பிலேயோ சிநேகமே கூறப்பட்டிருக்கிறது. கிறிஸ்து லாசருவினிடத்தில் பிலேயோ சிநேகத்தைக் காண்பித்தார்.  யோவான் 11:5 ஆவது வசனத்தில் பிலேயோ சிநேகம் கூறப்படவில்லை. ஏனெனில் அங்கு லாசருவின் சகோதரிகளைப் பற்றியும் கூறப்பட்டிருக்கிறது.


ஊழியஞ்செய்கிறவன்


ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்கிறவனானால் என்னைப் பின்பற்றக்கடவன், நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான்; ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்தால் அவனைப் பிதாவானவர் கனம்பண்ணுவார்  (யோவா 12:26). 


  இயேசுகிறிஸ்துவுக்கு ஊழியஞ்செய்ய விரும்புகிறவர்கள்    அவரைப் பின்பற்றுகிறவர்களாக இருக்கவேண்டும். இயேசுகிறிஸ்து எங்கேயிருக்கிறாரோ அங்கே அவருடைய ஊழியக்காரர்களும் இருக்கவேண்டும். இந்த வாக்கியம் விசுவாசிகளுடைய கடமைகளைக் குறிப்பதாக சிலரும், விசுவாசிகளுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் வாக்குத்தத்தத்தைக் குறிப்பதாகச் சிலரும் வியாக்கியானம் பண்ணுகிறார்கள். இயேசுகிறிஸ்து எங்கேயிருக்கிறாரோ அங்கே அவரைப் பின்பற்றுகிறவர்கள் அவரோடுகூட அவருடைய சந்தோஷத்தில் நிலைத்திருப்பார்கள். இந்த வாக்கியத்தைச் சொல்லிவிட்டு, இயேசுகிறிஸ்து தம்முடைய ஊழியக்காரர்களுக்கு நியமிக்கப்பட்டிருக்கும் ஆசீர்வாதத்தையும் விவரிக்கிறார். ""ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்தால் பிதாவானவர் அவனைக்கனம்பண்ணுவார்'' என்றும் வெளிப்படுத்துகிறார். 


கிரேக்கர்கள் இயேசுகிறிஸ்துவைக் காணவேண்டுமென்று வாஞ்சையாயிருக்கிறார்கள் (யோவா 12:21). இயேசுகிறிஸ்துவைக் கண்டால் மாத்திரம் போதாது, அவருக்கு நாம் ஊழியம் செய்யவும் வேண்டும் என்று இயேசுகிறிஸ்து கிரேக்கருக்கும் நமக்கும் தம்முடைய தெய்வீகத் திட்டத்தை வெளிப்படுத்திக் கூறுகிறார். ஒரு எஜமானிடத்தில் வேலை பார்க்கிறவன் தன் வேலையிலும் கவனமாக இருப்பான், தன் கூலியிலும் கவனமாக இருப்பான்.  எஜமான் தனக்கு இரண்டையுமே நிர்ணயம்பண்ணித்தரவேண்டும் என்று எதிர்பார்ப்பான். நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து நமக்கு நல்ல எஜமானாக இருந்து, நம்முடைய வேலையையும்அதற்குரிய கூலியையும் நிர்ணயம்பண்ணுகிறார். இயேசுகிறிஸ்துவுக்கு ஊழியம் செய்யவேண்டுமென்பது நமது எஜமான்    நமக்குக் கொடுக்கும் வேலை. நாம் இவ்வாறு ஊழியம் செய்தால் பிதாவானவர் நம்மைக் கனம்பண்ணுவார் என்பதும், இயேசுகிறிஸ்து இருக்கிற இடத்தில் நாமும் அவருடைய சந்தோஷத்தில் அவரோடு கூடயிருப்போம் என்பதும் நமக்குக் கொடுக்கப்படும் கூலி. 


இயேசுகிறிஸ்து தம்முடைய ஊழியக்காரர்களிடமிருந்து எதிர்பார்க்கிற வேலைகள் இங்கு விவரிக்கப்பட்டிருக்கிறது. தங்களுடைய எஜமான் எங்கெல்லாம் போகிறாரென்று அவருடைய ஊழியக்காரர் கவனமாக இருக்கவேண்டும். இயேசுகிறிஸ்து எங்கேயிருக்கிறாரோ அங்கே அவருடைய ஊழியக்காரரும் இருக்கவேண்டும். இயேசுகிறிஸ்துவைப் பின்பற்றுகிற விசுவாசிகளாகிய நாம், அவர் நமக்குச் சொல்லுகிற யாவற்றையும் செய்யவேண்டும்.  அதே வேளையில் அவர் நடக்கிற பிரகாரம் நாம் நடக்கவும் வேண்டும்.  அவர் எங்கே நம்மை வழிநடத்துகிறாரோ அங்கே நாம் போகவேண்டும். அவர் எந்தப் பாதையின் வழியாக நம்மை அழைத்துச் செல்லுகிறாரோ அந்தப் பாதையின் வழியாகவும் நாம் போகவேண்டும். 


தமக்கு ஊழியம் செய்கிறவர்களைக் குறித்து இயேசுகிறிஸ்து சொல்லும்போது ""ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்கிறவனானால் அவன் என்னைப் பின்பற்றக்கடவன். நான் எங்கேயிருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான்'' என்று சொல்லுகிறார். இயேசுகிறிஸ்து எங்கேயிருக்கிறாரோ அங்கே அவருடைய ஊழியக்காரர்களும் அவருக்கு ஊழியம்செய்ய ஆயத்தமாகயிருக்கவேண்டும். இயேசுகிறிஸ்துவின் சபை எங்கேயிருக்கிறதோ அங்கே கிறிஸ்து இருக்கிறார். இயேசுகிறிஸ்து எங்கேயிருக்கிறாரோ அங்கே அவருடைய ஊழியக்காரர்களும் இருக்கவேண்டும். ஊழியக்காரர்கள் தங்கள் எஜமானாகிய இயேசுகிறிஸ்துவுக்கு முன்பாக நின்று, அவர் கொடுக்கும் கட்டளைகளைப் பெற்றுக்கொள்ளவேண்டும். 


 தமக்கு ஊழியம்செய்கிறவர்களுக்கு இயேசுகிறிஸ்து இரண்டுவிதமாகக் கூலிகொடுக்கிறார். அவையாவன: 1. அவர் எங்கே இருக்கிறாரோ  அங்கே அவருடைய ஊழியக்காரர்களும் இருப்பார்கள்.  2. இயேசுகிறிஸ்துவுக்கு ஊழியம் செய்கிறவர்களை பிதாவானவர் கனம்பண்ணுவார். 


இயேசுகிறிஸ்து இருக்கிற இடத்தில் சந்தோஷம் இருக்கும். இயேசுகிறிஸ்துவுக்கு ஊழியம் செய்கிறவர்கள், அவரோடுகூட அவர் இருக்கிற இடத்தில் இருக்கும்போது, அது அவர்களுக்கு பரலோகம் போல இருக்கும்.  கர்த்தருடைய ஊழியக்காரர்கள் இந்த உலகத்தில் அவருக்கு ஊழியம் செய்தாலும், பரலோகத்தின் சந்தோஷத்தை இந்த உலகத்திலேயே அனுபவிப்பார்கள். தாம் எங்கேயிருப்போம் என்பது இயேசுவுக்கு பிரத்தியட்சமாகத் தெரிந்திருக்கிறது. அங்கே அவர் போவதற்கான வேளை நெருங்கிக்கொண்டிருக்கிறது. தம்முடைய பாடுகளுக்காகவும், தம்முடைய ஊழியங்களுக்காகவும் இயேசுகிறிஸ்து சந்தோஷத்தையும் மகிமையையும் பெற்றுக்கொள்ளப்போகிறார். இதே சந்தோஷமும் மகிமையும் இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரர்களுக்கும் வாக்குப்பண்ணப்பட்டிருக்கிறது. இயேசுவுக்கு ஊழியம் செய்கிறவர்கள் அவரைப் பின்பற்றிச்செல்லவேண்டும். முடிவு வரையிலும் பின்பற்றவேண்டும். ஊழியத்தைப் பாதியிலேயே விட்டுவிட்டு ஓடிவிடக்கூடாது. முடிவு வரையிலும் நிலைத்திருக்கிறவனே இரட்சிக்கப்படுவான். முடிவு வரையிலும் அவரைப் பின்பற்றுகிறவனே, அவர் எங்கேயிருக்கிறாரோ அங்கே அவனும் இருப்பான். பிதாவானவர் அங்கு அவனைக் கனம்பண்ணுவார். 


இயேசுகிறிஸ்துவுக்கு ஊழியம் செய்கிறவர்களைப் பிதாவானவர் கனம்பண்ணுவார். கர்த்தருடைய ஊழியக்காரர்களுக்கு இந்தப் பூமியில் பலவேதனைகளும், இழப்புக்களும் உண்டாகலாம். இயேசுகிறிஸ்து நம்மைச் சந்திக்கவில்லையென்றால் நாம் ஒன்றுமில்லாதவர்களாகவும் பிரயோஜனமில்லாதவர்களாகவும் இருப்போம். அப்பிரயோஜனமான ஊழியக்காரர்களாகிய நம்மைப் பிதாவானவர் கனம்பண்ணுவது நமக்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரிய ஆசீர்வாதமாகும்.  பிதாவானவர் நம்மைக் கனம்பண்ணும்போது அது மெய்யான கனமாக இருக்கும். அந்தக் கனம் நிலைத்திருக்கும். உன்னதமானதாக இருக்கும். அது தேவனிடத்திலிருந்து வந்திருக்கும் கனமாக இருக்கும். கிறிஸ்துவுக்காக யாரெல்லாம் ஊழியம் செய்கிறார்களோ அவர்கள் எல்லோரையும் தேவன் கனம்பண்ணுவார். இந்த பூமியில் நாம் இயேசுகிறிஸ்துவுக்காக மனத்தாழ்மையோடு ஊழியம் செய்யும்போது, பிதாவானவர் நம்மை  வரப்போகிற உலகத்தில் உயர்த்துவார். ஏற்றவேளையில் தேவனுடைய ஆசீர்வாதங்களை நாம் பெற்றுக்கொள்வோம்.


இயேசுகிறிஸ்துவைக் காணவேண்டுமென்று விரும்பி  வந்திருக்கிற கிரேக்கர்கள், இயேசுவின் உபதேசத்தைத் தங்கள் காதுகளால் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். இயேசு கிறிஸ்துவின் வார்த்தை அவர்களுடைய இருதயத்தை நிரப்பிற்று. அவர்களுக்குப் புதிய சிந்தையையும், புதிய ஆலோசனையையும், புதிய ஊழியத்தையும் கொடுத்திருக்கிறது. இயேசுகிறிஸ்துவைக் காணவந்தவர்கள் இப்போது பரலோகத்தையும், பரலோகத்தின் தேவனையும், பிதாவானவர் தங்களை மகிமைப்படுத்தப்போவதையும் தங்கள் விசுவாசத்தினால் காண்கிறார்கள். இயேசுவின் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து அவருடைய அடிச்சுவடுகளை பின்பற்றி நடக்கிறார்கள். 


இயேசுவின் மரணம் யோவா 12 : 27-36


என் ஆத்துமா கலங்குகிறது


இப்பொழுது என் ஆத்துமா கலங்குகிறது, நான் என்ன சொல்லுவேன். பிதாவே, இந்த வேளையினின்று என்னை இரட்சியும் என்று சொல்வேனோ; ஆகிலும், இதற்காகவே இந்த வேளைக்குள் வந்தேன்            (யோவா 12:27).


இயேசுகிறிஸ்துவின் ஆத்துமா கலங்குகிறது. இயேசுகிறிஸ்துவுக்கு இப்போது  அவருடைய ஆத்துமா  கலங்குகிற காலமாகயிருக்கிறது.  இந்த சமயத்தில் கிறிஸ்துவானவர் பிதாவிடத்தில் ஜெபம்பண்ணுகிறார். திரளான ஜனங்கள் இயேசுகிறிஸ்துவை வரவேற்பதற்காக கூடிவந்திருக்கிறார்கள். கிரேக்கரும் அவரைப் பார்ப்பதற்கு வந்திருக்கிறார்கள். இயேசுகிறிஸ்துவின் நாமம் அதிகமாய் பிரஸ்தாமாகியிருக்கிறது. அவருக்கு அதிக கனமும் மகிமையும் உண்டாயிருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ""என் ஆத்துமா சந்தோஷமாயிருக்கிறது'' என்று ஜெபம்பண்ணுவதுதான் வழக்கம். ஆனால் இயேசுகிறிஸ்துவோ ""என் ஆத்துமா கலங்குகிறது'' என்று கூறி ஜெபிக்கிறார்.  


இயேசுகிறிஸ்துவின் வாயிலிருந்து இப்படிப்பட்ட வார்த்தை வருவது எல்லோருக்கும் ஆச்சரியமாக இருந்திருக்கும். சந்தோஷமான சூழ்நிலைகளுக்கு மத்தியில், இயேசுவோ ""ஆத்துமா கலங்குகிறது'' என்று கூறுகிறார். சில சமயங்களில் ஆத்துமாவுக்கு அதிக சந்தோஷம் உண்டாகும்போது, அதைத் தொடர்ந்து கலக்கமும் உண்டாகலாம். இயேசுகிறிஸ்துவின் பாடுகள்  சமீபமாக வந்து கொண்டேயிருக்கிறது. ஒருவேளை தாம் அனுபவிக்கப்போகும் பாடுகளை நினைத்து இயேசுகிறிஸ்துவின் ஆத்துமா கலங்க ஆரம்பித்திருக்கலாம். முதன்முறையாக இயேசுகிறிஸ்து தம்முடைய ஆத்துமா கலங்குவதாக இங்கு கூறுகிறார்.


நம்முடைய ஆத்துமாவின் பாவம் இயேசுகிறிஸ்துவின் ஆத்துமாவைக் கலங்கச் செய்கிறது. நம்முடைய ஆத்துமாக்களிலுள்ள கலக்கங்களை நீக்கவேண்டும் என்பதற்காக இயேசுகிறிஸ்துவின் ஆத்துமா கலங்குகிறது.  இந்தக் கலக்கம் அவருடைய ஆத்துமாவில் நிரந்தரமாகத் தங்கியிருக்காது. சிறிதுகாலம் மட்டுமே அவருடைய ஆத்துமாவில் கலக்கம் இருக்கும். இயேசுகிறிஸ்துவைப் போலவே, நமக்கும் கலக்கங்கள் வரலாம். இந்தக் கலக்கங்கள் நம்மிடத்தில் நிரந்தரமாகத் தங்கியிருப்பதில்லை. சிறிதுகாலம் மாத்திரமே  நமக்கு கலக்கம் அனுமதிக்கப்பட்டிருக்கிறது.  இயேசுகிறிஸ்து நம்முடைய துக்கத்தை சந்தோஷமாக மாற்றுவார். நம்முடைய கலக்கம் நம்மைவிட்டு நீங்கிப்போகும். நமக்குள் தெய்வீக ஆறுதல் உண்டாகும். 


இயேசுகிறிஸ்துவின் ஆத்துமா கலங்கும்போது ""நான் என்ன சொல்லுவேன்'' என்று பிதாவினிடத்தில் ஜெபம்பண்ணுகிறார்.  தமக்கு என்ன சொல்லுவது என்று தெரியாததுபோல இயேசுகிறிஸ்துவின் வார்த்தை வெளிப்படுகிறது. ஜெபம்பண்ணும்போது எந்த வார்த்தைகளைச் சொல்லி ஜெபிக்கவேண்டும் என்று தமக்குத் தெரியாததுபோல இயேசுகிறிஸ்து ஜெபிக்கிறார். 


இயேசுகிறிஸ்துவின் ஆத்துமாவில் ஒரு போராட்டம் உண்டாயிருக்கிறது. தமக்கு நியமிக்கப்பட்டிருக்கும் தெய்வீக ஊழியத்தைப்பற்றியும், இந்த ஊழியத்தை நிறைவேற்றுவதற்கு அவர் அனுபவிக்கவேண்டிய பாடுகளைப்பற்றியும், இந்தப் பாடுகளை அனுபவிக்கும்போது தமக்கு உண்டாகக்கூடிய சரீர வேதனைகளைப்பற்றியும் இயேசுகிறிஸ்து நினைத்துப் பார்த்து தம்முடைய ஆத்துமாவில் கலங்குகிறார். இயேசுகிறிஸ்துவின் ஊழியமும் அவர் அனுபவிக்கவேண்டிய வேதனை நிறைந்த பாடுகளும் இப்போது அவருடைய ஆத்துமாவில் போராடிக்கொண்டிருக்கிறது. இந்தப் போராட்டத்தின் மத்தியில், தாம் என்ன வார்த்தைகளைச் சொல்லி தம்முடைய பிதாவிடத்தில் ஜெபிக்கவேண்டும் என்பது, தமக்குத் தெரியாததுபோல, ""நான் என்ன சொல்லுவேன்'' என்று கேட்கிறார். 


இயேசுகிறிஸ்துவின் ஆத்துமா கலங்கிக்கொண்டிருக்கும்போது ""பிதாவே இந்த வேளையினின்று என்னை இரட்சியும் என்று சொல்வேனோ'' என்று கேட்கிறார். இயேசுகிறிஸ்து தம்முடைய ஜெபத்தில் இந்த வார்த்தைகளைப் பயன்படுத்துவதினால், தமக்கு வரப்போகும் பாடுகளிலிருந்து தம்மை விலக்கிக் காத்துக்கொள்ளுமாறு ஜெபிப்பதுபோல தெரிகிறது. இயேசுகிறிஸ்துவின் கள்ளம் கபடமில்லாத சுபாவம் அவருடைய ஜெபவார்த்தைகளாக வெளிப்படுகிறது. பிதாவிடத்தில் அவர் ஒன்றையும் மறைப்பதில்லை.  தம்முடைய சரீரத்தின் உணர்வுகள் எப்படியிருக்கிறதோ அதை அப்படியே, சிறிதும்  மறைக்காமல், பிதாவிடம் ஜெபிக்கிறார். ""பிதாவே இந்த வேளையினின்று என்னை இரட்சியும்'' என்று இயேசுகிறிஸ்து கள்ளம் கபடமில்லாமல், ஒரு சிறு பிள்ளையைப்போல பிதாவினிடத்தில் விண்ணப்பம்பண்ணுகிறார்.


தமக்கு நியமிக்கப்பட்டிருக்கும் எல்லா பாடுகளையும் இயேசுகிறிஸ்து தாமே மனப்பூர்வமாக முன்வந்து தம்மீது சுமந்துகொள்கிறார்.    ஆனாலும் இந்தப் பாடுகளிலிருந்து தம்மை இரட்சிக்குமாறு விண்ணப்பம்பண்ணுகிறார். தாம் பாடுகளை அனுபவிப்பது தேவனுடைய சித்தம் என்பதும், அதற்குத் தாம் கீழ்ப்படிய வேண்டுமென்பதும் இயேசுகிறிஸ்துவுக்குத் தெரியும். ஆனாலும் இந்தப் பாடுகள் தம்மை நெருங்கி வரும்போது, இவற்றிலிருந்து தம்மை இரட்சித்துக்கொள்ளுமாறு, இயேசுகிறிஸ்து இந்தப் பாடுகளுக்கு விரோதமாக ஜெபிக்கிறார். 


இயேசுகிறிஸ்து பாடுகளை அனுபவிக்கும் வேளையைப்பற்றி இரண்டு சத்தியங்கள் உள்ளன. அவையாவன: 1. அந்த வேளை நியமிக்கப்பட்டிருக்கிறது. 2. அந்த வேளை மிகவும் சிறிய வேளையாக இருக்கும். ஒரு மணி நேரம் விரைவில் கடந்துபோவதுபோல, இயேசுகிறிஸ்துவின் பாடுகளும் விரைவில் கடந்துபோகும். இயேசுகிறிஸ்து பாடுகளை அனுபவிக்கும்போது, தமக்கு முன்பாக நியமிக்கப்பட்டிருக்கும் சந்தோஷத்தை அவரால் நோக்கிப் பார்க்கமுடியும். நமக்கு பாடுகள் உண்டாகும்போது, அந்தப் பாடுகளை நாம் பொறுமையோடு சகித்துக்கொள்ளவும்,  தேவனுடைய சித்தத்திற்கு நாம் பூரணமாக கீழ்ப்படியவும், கிறிஸ்துவானவர் நம்மைப் பலப்படுத்தவும்வேண்டுமென்று ஜெபிக்கவேண்டும்.  


தம்முடைய பாடுகளை நினைத்து ""இந்த வேளையினின்று    என்னை இரட்சியும் என்று சொல்வேனோ'' என்று கூறும்போது, இயேசுகிறிஸ்துவுக்கு இந்தப் பாடுகளைக்குறித்த  பிதாவின் சித்தம் மிகவும் தெளிவாகத் தெரிந்திருக்கிறது. ""ஆகிலும் இதற்காகவே  இந்த வேளைக்குள் வந்தேன்'' என்று கூறி ஜெபித்து, தாம் பாடுகளை அனுபவிக்க வேண்டியதற்காகவே, இந்த பூமிக்கு வந்திருப்பதை இயேசுகிறிஸ்து உறுதிபண்ணுகிறார். இயேசுகிறிஸ்துவின் ஜெபத்தில் அவருடைய கள்ளம் கபடமில்லாத சுபாவம் வார்த்தைகளாக முதலாவது வெளிப்படுகிறது. அதன்பின்பு தேவனுடைய ஞானமும் அன்பும் வெளிப்படுகிறது. தம்முடைய உள்ளத்தில், தாம்  அனுபவிக்கப்போகும் பாடுகளைக்குறித்து, பல்வேறு விதமான எண்ணங்கள் இயேசுகிறிஸ்துவின் இருதயத்தில் உண்டானபோதிலும், அவர் தம்முடைய சிந்தையைப் பிதாவின் சித்தத்திற்கு பூரணமாக ஒப்புக்கொடுக்கிறார். ""இதற்காகவே இந்த வேளைக்குள் வந்தேன்'' என்று தாம் பிதாவின் சித்தத்தைச் செய்வதற்கு ஆயத்தமாகயிருப்பதை  இயேசுகிறிஸ்து மறுபடியும் உறுதிபண்ணுகிறார்.   


இந்தப் பாடுகளை நினைத்து இயேசுகிறிஸ்துவினால் அமைதியாக இருக்கவும் முடியவில்லை. இந்தப் பாடுகளிலிருந்து பிதாவும்  குமாரனை இரட்சிக்கவில்லை. பிதாவின் சித்தம் இயேசுகிறிஸ்துவுக்குத் தெளிவாகத் தெரிகிறது.  தாம் பிதாவின் சித்தத்திற்குக் கீழ்ப்படிவதை நினைத்து இயேசுகிறிஸ்து தம்மைத்தாமே ஆறுதல்படுத்திக்கொள்கிறார். தமக்கு நியமிக்கப்பட்டிருக்கும் பாடுகள் வழியாகக் கடந்துசெல்ல தம்மை ஒப்புக்கொடுக்கிறார். நம்முடைய ஆவிக்குரிய ஜீவியத்தில்கூட இப்படிப்பட்ட பிரச்சனை மிகுந்த, பாடுகள் நிறைந்த இருளான வேளை வரலாம். நம்முடைய சுயசித்தமும் தேவனுடைய சித்தமும் நமக்குள் போராடிக்கொண்டிருக்கலாம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் நம்முடைய சுயசித்தத்தைத் தேவனிடத்தில் தெரியப்படுதினாலும்,  அவருடைய தெய்வீக சித்தத்திற்கு நாம் கீழ்ப்படியவேண்டும்.  அவருடைய சித்தம் நிறைவேற நம்மை ஒப்புக்கொடுக்கவேண்டும். 


வானத்திலிருந்து சத்தம்


பிதாவே, உமது நாமத்தை மகிமைப்படுத்தும் என்றார். அப்பொழுது: மகிமைப்படுத்தினேன், இன்னமும் மகிமைப்படுத்துவேன் என்கிற சத்தம் வானத்தி-ருந்து உண்டாயிற்று (யோவா 12:28).


தமக்குப் பாடுகள் நெருங்கிக்கொண்டிருந்தாலும் இயேசுகிறிஸ்து பிதாவின் நாமத்தை மகிமைப்படுத்த வேண்டுமென்று விரும்புகிறார். ""பிதாவே உமது நாமத்தை மகிமைப்படுத்தும்'' என்று ஜெபிக்கிறார். இயேசுகிறிஸ்துவின் இந்த வாக்கியம் ""பிதாவே உமது சித்தம் செய்யப்படுவதாக'' என்று அறிக்கை செய்வதுபோல இருக்கிறது. பிதாவின் மகிமையே தேவனுடைய சித்தமாக இருக்கிறது.   இயேசுகிறிஸ்து பாடுகளை அனுபவிக்க தம்மை ஒப்புக்கொடுப்பது, அவர் தேவனுடைய சித்தத்திற்குக் கீழ்ப்படிவது மாத்திரமல்ல. தம்முடைய பாடுகள் பிதாவின் நாமத்தை மகிமைப்படுத்தும் என்பதையும் அறிந்து, இயேசுகிறிஸ்து தமக்கு நியமிக்கப்பட்டிருக்கும் பாடுகளுக்குத் தம்மை ஒப்புக்கொடுக்கிறார். 


""பிதாவே உமது நாமத்தை மகிமைப்படுத்தும்'' என்று இயேசுகிறிஸ்து கூறுகிற வார்த்தைகளை நாம் ஜெபத்தோடு தியானிக்கவேண்டும். தம்முடைய பாடுகளையும், பிதாவின் சித்தத்தையும், பிதாவின் மகிமையையும் இயேசுகிறிஸ்து இங்கு இணைக்கிறார். இயேசுகிறிஸ்துவின் வார்த்தை நிச்சயமாகவும் உறுதியாகவும் இருக்கிறது. நமக்காக அவரே பலியானார். நம்முடைய பாவங்களை மன்னிப்பதற்கு நம்மை மீட்பதற்கு அவரே மீட்பின் கிரயமானார். நம்முடைய பாவங்களுக்கு தேவனுடைய சித்தத்தின் பிரகாரம் நிறைவேற்றவேண்டிய எல்லா காரியங்களையும் இயேசுகிறிஸ்து பூரணமாக செய்து முடித்திருக்கிறார்.


தேவனுடைய நாமம் மகிமைப்படுவதற்காக இயேசுகிறிஸ்து எதையெல்லாம் செய்யவேண்டுமோ அதையெல்லாம் செய்து முடித்திருக்கிறார். இயேசுகிறிஸ்து செய்தது எதையும் அவருடைய பெருமையில் செய்யவில்லை.  தாம் செய்தது அனைத்தையும் அவர் தமது தாழ்மையில் செய்து முடித்திருக்கிறார். பிதாவின் நாமத்தை மகிமைப்படுத்துவதற்காக, தாம் செய்திருக்கும் தாழ்மையான காரியங்களை, பிதாவானவர் அங்கீகரித்து, அவர் தமது நாமத்தை மகிமைப்படுத்த வேண்டுமென்று இயேசுகிறிஸ்து விண்ணப்பம்பண்ணுகிறார். பிதாவின் நாமத்தை மகிமைப்படுத்துவதற்கு செய்ய வேண்டிய காரியம் இன்னும் ஏதாவது இருக்குமென்றால், அதையும் தாம் செய்வதற்கு ஆயத்தமாக இருப்பதாகவும், அந்தக் காரியங்களைத் தம்முடைய கணக்கில் வைத்துக்கொள்ளுமாறும் இயேசுகிறிஸ்து விண்ணப்பம்பண்ணுகிறார். இயேசுகிறிஸ்துவின் மூலமாகப் பிதாவின் மகிமை ஒருபோதும் குறைந்துபோவதில்லை. ஆனாலும் பிதாவின் நாமம் மகிமைப்படுவதற்கு என்னென்ன செய்யவேண்டுமோ அவையெல்லாவற்றையும் இயேசுகிறிஸ்து செய்து நிறைவேற்றுகிறார். 


இயேசுகிறிஸ்துவின் ஜெபத்திற்குப் பிதாவானவர் செவிகொடுத்து, அவருக்குப் பிரதியுத்தரம் கூறுகிறார். வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று. அந்த சத்தமே பிதாவின் பிரதியுத்தரமாயிற்று. ""பிதாவே உமது நாமத்தை மகிமைப்படுத்தும்'' என்று இயேசுகிறிஸ்து விண்ணப்பம்பண்ணுகிறார். அதற்குப்பிதாவானவர் ""மகிமைப்படுத்தினேன், இன்னமும் மகிமைப்படுத்துவேன்'' என்று பிரத்தியுத்தரம் கூறுகிறார்.  


இயேசுகிறிஸ்துவின் ஜீவியத்தில் தேவனுடைய நாமம் மகிமைப்படுகிறது. இயேசுகிறிஸ்துவின் உபதேசத்தின் மூலமாகவும், அவர் செய்த அற்புதங்கள் மூலமாகவும், அவர் செய்த நன்மைகள் மூலமாகவும், அவருடைய பரிசுத்தத்தின் மூலமாகவும் பிதாவின் நாமம் மகிமைப்படுகிறது. இதுவரையிலும் பிதாவின் நாமம் மகிமையடைந்ததைவிட, இனிமேல் இயேசுகிறிஸ்துவின் பாடுகளினாலும், அவருடைய மரணத்தினாலும், பிதாவின் நாமம் மேலும்     மகிமைப்படுத்தப்படும்.     பிதாவின் ஞானமும் வல்லமையும், அவருடைய நீதியும் பரிசுத்தமும், அவருடைய சத்தியமும் நன்மையும்  இயேசுகிறிஸ்துவின் பாடுகள், மரணம் ஆகியவற்றின் மூலமாக இன்னும் மகிமைப்படுத்தப்படும். 


பிதாவானவர் இயேசுகிறிஸ்துவின் வார்த்தையிலும் கிரியையிலும் பிரியமாகவும் திருப்தியாகவும் இருக்கிறபடியினால், ""மகிமைப்படுத்தினேன், இன்னும் மகிமைப்படுத்துவேன்'' என்று அறிவிக்கிறார். தம்முடைய நாமத்தை மகிமைப்படுத்துவதற்காகத் தேவனானவர் இயேசுகிறிஸ்துவின் மூலமாக அற்புதமான காரியங்களைச் செய்து நிறைவேற்றியிருக்கிறார்.  இன்னும் செய்யப்போகிறார். பிதாவின் வார்த்தை, இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கிற பிள்ளைகளுக்கு உற்சாகத்தை தரும். ஏனெனில்  பிதாவின் நாம மகிமைக்காக, குமாரனானவர் இன்னும் அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்யப்போகிறார். அவற்றின் மூலமாக தம்முடைய வசனங்களை  நமக்கு உறுதிபண்ணப்போகிறார். தேவனுடைய நாமம் எப்போதும் மகிமையுள்ளதாகவே இருக்கும்.  


இடிமுழக்கம் உண்டாயிற்று


அங்கே நின்றுகொண்டிருந்து, அதைக் கேட்ட ஜனங்கள்: இடிமுழக்கமுண்டாயிற்று என்றார்கள். வேறு சிலர்: தேவதூதன் அவருடனே பேசினான் என்றார்கள்  (யோவா 12:29). 


வானத்திலிருந்து சத்தம் உண்டானபோது, அங்கு கூடியிருக்கிற திரளான ஜனங்கள் அந்தச் சத்தத்தைக் கேட்கிறார்கள். அவர்களுக்கு அந்தச் சத்தம் ஆச்சரியமாக இருக்கிறது. ஒரு சிலர் ""இடிமுழக்கம் உண்டாயிற்று'' என்று கூறுகிறார்கள். வேறு சிலர் ""தேவதூதன் அவருடனே பேசினான்'' என்று கூறுகிறார்கள். மெய்யாகவே வானத்திலிருந்து சத்தம் உண்டாயிற்று என்பதை எல்லோருமே அங்கீகரிக்கிறார்கள். இயேசுகிறிஸ்துவின் தெய்வீக ஊழியத்திற்கு இந்தச் சத்தம் சாட்சியாயிருக்கிறது. ஆனால் அவர்களோ பிதாவானவர் குமாரனுடைய ஜெபத்திற்கு இந்தச் சத்தத்தின் மூலமாக பதில்கொடுத்திருக்கிறார் என்று நினைப்பதற்குப் பதிலாக, அதை இடிமுழக்கம் என்றும், தேவதூதனுடைய பேச்சு என்றும் தவறாகச் சிந்திக்கிறார்கள். எப்படிப்பட்ட அற்புதங்கள் நடந்தாலும், ஜனங்கள் விநோதமாகச் சிந்திக்கிறார்கள். இயேசுவைக் கிறிஸ்து என்று  விசுவாசிக்காமற் போவதற்கு, என்னவெல்லாம் செய்யவேண்டுமோ அவையெல்லாவற்றையும் செய்கிறார்கள். இவர்கள்மீதும் இயேசுகிறிஸ்து கிருபையாகயிருக்கிறார். 


 ஜனங்கள் ஒரு சத்தத்தைக் கேட்டார்கள். அந்த சத்தத்திலுள்ள வார்த்தைகளை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. இடிமுழக்கம் போன்ற ஒரு தொனியைக் கேட்டார்கள். பவுலுக்கு உண்டான கிறிஸ்துவின் சத்தம்போன்றுள்ளது. ""இந்தச் சத்தம் என்னிமித்தம் உண்டாகாமல் உங்கள் நிமித்தமே உண்டாயிற்று'' என்று இயேசு கிறிஸ்து புறஜாதியாரிடம் கூறுகிறார். புறஜாதியார் இயேசு கிறிஸ்துவிடம் வந்திருக்கிறார்கள். இயேசு கிறிஸ்துவில் அவர்கள் வைத்திருக்கும் விசுவாசத்தை உறுதிபண்ணுவதற்காகவே இந்த சத்தம் உண்டாயிற்று.


உங்கள் நிமித்தமே உண்டாயிற்று


 இயேசு அவர்களை நோக்கி: இந்தச் சத்தம் என்னிமித்தம் உண்டாகாமல் உங்கள் நிமித்தமே உண்டாயிற்று  (யோவா 12:30).


இயேசுகிறிஸ்து வானத்திலிருந்து உண்டான சத்தத்தைத் தம்முடைய செவிகளினால் கேட்கிறார். அவருக்கு இந்தச் சத்தத்தின் பொருளும், இந்தச் சத்தம் உண்டானதற்கான காரணமும் தெரிந்திருக்கிறது. இதைச் சரியாகப்புரிந்துகொள்ளாத ஜனங்களிடம் இயேசுகிறிஸ்து ""இந்தச் சத்தம் என்னிமித்தம் உண்டாகாமல், உங்கள் நிமித்தமே உண்டாயிற்று'' என்று கூறுகிறார். வானத்திலிருந்து உண்டான சத்தத்தைக் கேட்கிறவர்கள், ""பிதாவானவர் இயேசுகிறிஸ்துவை வானத்திலிருந்து அனுப்பினவர்'' என்று விசுவாசிக்கவேண்டும்.  அதற்காகவே இந்தச் சத்தம் உண்டாயிற்று. 


கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைப்பற்றி வானத்திலிருந்து உண்டான சத்தம், நமக்காகவே உண்டாயிற்று. இயேசுகிறிஸ்துவின் சமூகத்தில் நாம் ஆறுதலடையவேண்டும், அவரை விசுவாசிக்கவேண்டும், அவர் கொடுக்கிற இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ளவேண்டும். இதற்காவே இந்தச் சத்தம் உண்டாயிற்று. இயேசுகிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்களுக்குப் பாடுகளும் வேதனைகளும் உண்டாகலாம். நமக்குப் பாடுகள் மத்தியில் ஆறுதல் உண்டு.  இயேசுகிறிஸ்து பிதாவினால் எப்படி ஆறுதல்படுத்தப்பட்டாரோ  அப்படியே நமக்கும் ஆறுதல் உண்டாகும். 


நியாயத்தீர்ப்பு


இப்பொழுதே இந்த உலகத்துக்கு நியாயத்தீர்ப்பு உண்டாகிறது; இப்பொழுதே இந்த உலகத்தின்           அதிபதி புறம்பாகத் தள்ளப்படுவான் (யோவா 12:31). 


""மகிமைப்படுத்தினேன், இன்னமும் மகிமைப்படுத்துவேன்'' என்கிற சத்தம் வானத்திலிருந்து உண்டாயிற்று. பிதாவானவர் இந்த வாக்கியத்தைக் கூறுவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. அவையாவன: 1. இயேசுகிறிஸ்துவின் மரணத்தின் மூலமாக சாத்தான் தோற்றுப்போவான் 2. இயேசுகிறிஸ்துவின் மரணத்தின் மூலமாக ஆத்துமாக்கள் இரட்சிக்கப்படும். இந்த ஆத்துமாக்கள் சாத்தானுடைய  பிடியிலிருந்து   விடுவிக்கப்படும். 


இயேசுகிறிஸ்துவினுடைய மரணத்தின் மூலமாக சாத்தான் தோற்றுப்போய்விடுகிறான். இந்த உலகத்திற்கு இப்பொழுது நியாயத்தீர்ப்பு உண்டாயிருப்பதாக இயேசுகிறிஸ்து அறிவிக்கிறார். இந்த நியாயத்தீர்ப்பைப்பற்றி இயேசுகிறிஸ்து அறிவிக்கும்போது, ஆவிக்குரிய யுத்தத்தில் தேவனுடைய வல்லமைக்குக் கிடைத்த தெய்வீக வெற்றியைப் பிரகடனப்படுத்துவதுபோல அறிவிக்கிறார். இயேசுகிறிஸ்துவின் மூலமாக அநுக்கிரக வருஷம் இப்போது உண்டாயிருக்கிறது. 


மனுக்குலத்தின் பாவங்களுக்காக இயேசுகிறிஸ்து சிலுவையில் மரித்து அவர்களுக்கு இரட்சிப்பை வாய்க்கப்பண்ணவேண்டுமென்பது தேவனுடைய ஆதீனத்தில் ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருக்கிறது.  அந்த இரட்சிப்பின் வருஷம் இப்போது வந்திருக்கிறது. தமக்கு நியமிக்கப்பட்டிருக்கும் தேவனுடைய ஊழியத்தை இயேசுகிறிஸ்து நிறைவேற்றப்போகும் காலம் நெருங்கி வந்திருக்கிறது. இது ஒரு ஆவிக்குரிய யுத்தம். இந்த யுத்தத்தில் சாத்தானும் அவனுடைய அந்தகார சக்திகளும் தேவனுக்கு விரோதமாக யுத்தம்பண்ணுகின்றன. இந்த யுத்தத்தில் சாத்தானும் அவனுடைய சேனையும் தோற்று ஓடிப்போவார்கள். தேவனுக்கு ஜெயமும் மகிமையும் உண்டாகும். 


இயேசுகிறிஸ்து இந்த உலகத்திற்கு உண்டாகப்போகிற நியாயத்தீர்ப்பைப்பற்றிக் குறிப்பிடும்போது, அதில் மூன்று காரியங்கள் இடம்பெற்றிருக்கின்றன. அவையாவன: 1. இந்த உலகத்திற்கு இப்பொழுதே நியாயத்தீர்ப்பு உண்டாயிருக்கிறது. 2. இந்த நியாயத்தீர்ப்பின் மூலமாக இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்கள் நீதிமான்களாக நியாயந்தீர்க்கப்படுவார்கள். யூதர்கள் மாத்திரம் என்று இல்லாமல் புறஜாதியாரும் நீதிமான்களாக  தீர்க்கப்படுவார்கள்.          3. சாத்தானுடைய அந்தகார  வல்லமைகள் இந்த நியாயத்தீர்ப்பின் மூலமாக அதம்பண்ணப்படும். 


இயேசுகிறிஸ்து இந்த உலகத்திற்கு உண்டாகப்போகும் நியாயத்தீர்ப்பைப்பற்றிக் கூறும்போது ""அது இப்பொழுதே உண்டாயிருக்கிறது'' என்று கூறுகிறார். இந்த வாக்கியம் மருத்துவ உலகத்தில் பயன்படுத்தப்படும் வாக்கியத்தைப்போல உள்ளது.  அதன் பிரகாரம் இந்த உலகம் ஒரு முக்கியமான காலகட்டத்திற்கு வந்திருக்கிறது. இந்த உலகத்திலுள்ள வியாதிகளுக்கும் வேதனைகளுக்கும் சிகிச்சை நடைபெறப்போகிறது. சிகிச்சையின் முடிவில்  வியாதி குணமடைந்து ஜீவன் உண்டாகலாம். அல்லது வியாதி முற்றிப்போய் ஜீவனேபோய்விடலாம். இதுபோன்ற சூழ்நிலையிருப்பதினால், உலகத்திற்கு நியாயத்தீர்ப்பு உண்டாவது மனுக்குலத்தை வெகுவாகப் பாதிக்கும். நியாயத்தீர்ப்பு இந்த உலகத்திற்குள் ஏற்கெனவே பிரவேசித்திருக்கிறது. 


இயேசுகிறிஸ்துவின் மரணமே இந்த உலகத்திற்கு நியாயத்தீர்ப்பு ஆகும். முதலாவதாக  இந்த உலகத்தில் உள்ள கேடுகளெல்லாம் இயேசுவின் மரணத்தினால் வெளியரங்கமாகும்.  நன்மையிலிருந்து தீமை வேறு பிரிக்கப்படும்.  பரிசுத்தத்திலிருந்து பாவம் விலக்கி வைக்கப்படும். மனுஷருடைய சுபாவங்களெல்லாம்  வெளியரங்கமாகத் தெரியும். ஒளிவுமறைவு எதுவும் இருக்காது.


இந்த உலகம் நியாயந்தீர்க்கப்படும்போது, இயேசுகிறிஸ்துவின் சிலுவை மரணத்தின் அடிப்படையில், இந்த உலகத்திலுள்ள மனுஷர் எல்லோரும் நியாயந்தீர்க்கப்படுவார்கள். இயேசுகிறிஸ்துவின் சிலுவையின்மீது அவர்களுக்கு எப்படி தொடர்பு இருக்கிறது என்பதை அடிப்படையாக வைத்து மனுஷருடைய சுபாவங்கள்  நியாயந்தீர்க்கப்படும். இயேசுகிறிஸ்துவின் மரணத்தைக்குறித்து ஜனங்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை ஆதரமாக வைத்தே  அவர்கள் நியாயம் விசாரிக்கப்படுவார்கள். 


இந்த உலகம் துன்மார்க்கமாக இருக்கிறது. தேவனோ நீதியுள்ளவராக இருக்கிறார். இயேசுகிறிஸ்துவின் சிலுவைமரணம் பரிசுத்தமான தேவனுக்கும் அசுத்தமான உலகத்திற்கும் நடுவிலே நடைபெறுகிறது. இயேசுகிறிஸ்துவினுடைய மரணத்தின் மூலமாக, இந்த உலகம் நியாயந்தீர்க்கப்படும்போது, யூதர்கள் மட்டுமல்லாமல் புறஜாதியாரும் நியாயந்தீர்க்கப்படுவார்கள். இயேசுகிறிஸ்துவின்  மரணத்தை தங்களுடைய இரட்சிப்புக்காகப் பயன்படுத்திக்கொள்கிறவர்கள் நீதிமான்களாக தீர்க்கப்படுவார்கள். மற்றவர்கள் யூதர்களாகயிருந்தாலும், புறஜாதியாராகயிருந்தாலும் அவர்கள் அநீதியுள்ளவர்களாகவும் ஆக்கினைக்குட்பட்டவர்களாகவும் நியாயந்தீர்க்கப்படுவார்கள். இயேசுகிறிஸ்துவின்  சிலுவை மரணத்தின் மூலமாக, ஜனங்கள் நியாயந்தீர்க்கப்படும்போது, இயேசுகிறிஸ்துவை தேவனுடைய குமாரனாகவும், தங்களுடைய ஆத்தும இரட்சகராகவும் விசுவாசித்து ஏற்றுக்கொள்கிறவர்கள் நீதிமான்களாக்கப்படுவார்கள்.


இயேசுகிறிஸ்துவின் மரணத்தினால் இந்த உலகம் நியாயந்தீர்க்கப்படும்போது, அந்தகார வல்லமைகளெல்லாம் ஆக்கினைக்குட்படுத்தப்படும். இந்த உலகத்தின் அதிபதி நியாயந்தீர்க்கப்படுவான் (யோவா 16:11). சாத்தானுடைய உலகம் அந்தகார உலகமாகயிருக்கும். இதில் அந்தகாரத்தின் வல்லமைகள் ஆளுகை செய்யும். சாத்தானும் அவருடைய தூதர்களும், அவனுடைய ஆளுகையும் ஆக்கினைக்குட்படுத்தப்படும்.  இந்த உலகத்தை இயேசுகிறிஸ்துவே நியாயந்தீர்க்கப்போகிறவர். உலகத்தை நியாயத்தீர்க்கும் பொறுப்பு சாத்தானிடம் ஒப்புக்கொடுக்கப்படவில்லை. சாத்தான் நியாந்தீர்க்கப்படுவான். ஆக்கினைக்குட்படுத்தப்படுவான். இந்த உலகத்தின் அதிபதியாகிய சாத்தான் புறம்பாகத் தள்ளப்படுவான். சாத்தான் உலகத்து மனுஷர்களை இப்பிரபஞ்சத்தின் காரியங்களினால் ஆளுகைசெய்கிறான். ஆகையினால் இவன்  உலகத்தின் அதிபதி என்று அழைக்கப்படுகிறான். 


இயேசுகிறிஸ்து கல்வாரி சிலுவையில் மரிப்பதன் மூலமாக, உலகத்தின் அதிபதி புறம்பாக தள்ளப்படுவான். அவன் எப்போதுமே தள்ளப்பட்டவன்தான். தம்முடைய மரணத்தின் மூலமாக இயேசுகிறிஸ்து இந்த உலகத்தையும்  உலகத்திலுள்ள மனுஷரையும் தேவனோடு ஒப்புரவாக்குகிறார். மரணத்தின் வல்லமையை முறித்துப்போடுகிறார். சாத்தான் அழிக்கிறவனாக இருக்கிறான். இயேசு அவனை நியாந்தீர்த்து அவனைப் புறம்பே தள்ளிப்போடுகிறார். இயேசுகிறிஸ்து  தம்முடைய சிலுவை உபதேசத்தின் மூலமாக இந்த உலகத்தைத் தேவனிடத்திற்கு வழிநடத்துகிறார். பாவத்தின் வல்லமையை முறித்துப்போடுகிறார். சாத்தான் வஞ்சிக்கிறவனாக அவனை நியாயந்தீர்த்து, இருக்கிறான். இயேசு அவனை அவியாத அக்கினிக்கடலிலே தள்ளிவிடுகிறார்.   சாத்தான்மீது தாம்  பெற்றுள்ள வெற்றியை இயேசுகிறிஸ்து இங்கு நிச்சயமான வார்த்தைகளினாலும், உறுதியான வார்த்தைகளினாலும் வெளிப்படுத்துகிறார். இயேசுகிறிஸ்து தம்முடைய மரணத்திற்குத் தம்மை ஒப்புக்கொடுக்கும்போதே, சாத்தான்மீது அவர் வெற்றிபெற்றுவிடுகிறார். 


இன்னவிதமான மரணம்


நான் பூமியி-ருந்து உயர்த்தப்பட்டிருக்கும்போது, எல்லாரையும் என்னிடத்தில் இழுத்துக்கொள்ளுவேன் என்றார்.  தாம் இன்னவிதமான மரணமாய் மரிக்கப்போகிறாரென்பதைக் குறிக்கும்படி இப்படிச் சொன்னார்  (யோவா 12:32,33).  


""பிதாவே உமது நாமத்தை மகிமைப்படுத்தும்'' என்று இயேசுகிறிஸ்து ஜெபம்பண்ணியபோது, ""மகிமைப்படுத்தினேன், இன்னமும் மகிமைப்படுத்துவேன்'' என்கிற சத்தம்  வானத்திலிருந்து உண்டாயிற்று. பிதாவாகிய தேவன் தம்முடைய நாமத்தை மகிமைப்படுத்துகிறார். தேவனுடைய நாமம் இரண்டுவிதங்களில் மகிமைப்படுகிறது. அவையாவன: 1. இயேசுகிறிஸ்துவின் மரணத்தின் மூலமாக சாத்தான் ஜெயிக்கப்படுவான். 2. இயேசுகிறிஸ்துவின் மரணத்தின்•மூலமாக ஆத்துமாக்கள் இரட்சிக்கப்படும். சாத்தான் புறம்பே தள்ளப்படுவான். 


இயேசுகிறிஸ்து பூமியிலிருந்து உயர்த்தப்பட்டிருக்கும்போது எல்லோரையும் தம்மிடத்தில் இழுத்துக்கொள்வார். யூதர்களை மாத்திரம் என்று மட்டுப்படுத்தாமல், புறஜாதியாரையும் தம்மிடத்தில் இழுத்துக்கொள்வார். ஓர்ஆத்துமா இரட்சிக்கப்படும்போது இயேசுகிறிஸ்து தாமே எல்லாவற்றிற்கும் எல்லாமுமாக இருக்கிறார். கிறிஸ்து தாமே ஆத்துமாக்களைத் தம்மிடத்தில் இழுத்துக்கொள்கிறவர். பலவந்தத்தினால் அவர் யாரையும் இழுத்துக்கொள்வதில்லை. இயேசுகிறிஸ்து யாரையும் தம்மிடத்தில் வருமாறு  கட்டாயப்படுத்துவதில்லை. அவர் மனுஷருடைய ஆத்துமாவில் கிரியை நடப்பிப்பார். அப்போது ஆத்துமாக்களெல்லாம் இயேசுகிறிஸ்துவிடத்தில் வரவேண்டுமென்று விருப்பமாயிருக்கும். 


நாம் எல்லோருமே இயேசுகிறிஸ்துவிடத்தில் இழுக்கப்பட்டிருக்கிறோம். இதுவரையிலும் இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்காதவர்களும், இயேசுகிறிஸ்துவின் நாமத்தைக்குறித்து வெட்கப்பட்டவர்களும் இப்போது அவரிடத்தில் இழுக்கப்படுகிறார்கள். அவரை நேசிக்கிறார்கள்.  அவரிடத்தில் விசுவாசம் வைக்கிறார்கள். அவருடைய கரங்களினால் அவருடைய சித்தத்தைச் செய்வதற்கு ஜனங்களெல்லோரும் இழுக்கப்படுகிறார்கள். 


ஜனங்கள் எல்லோரையும் தம்மிடத்தில் இழுத்துக்கொள்வதற்கு இயேசுகிறிஸ்து மிகவும்  முக்கியமான உபாயத்தைக் கடைப்பிடிக்கிறார். இயேசுகிறிஸ்து பூமியிலிருந்து உயர்த்தப்படுவதே அவருடைய திட்டமும், வழியும், உபாயமும் ஆகும். தாம் இன்னவித மரணமாய் மரிக்கப்போவதைக் குறிக்கும்படிக்கு இயேசுகிறிஸ்து இப்படிச் சொல்லுகிறார். இயேசுகிறிஸ்துவின் மரணம் சிலுவை மரணம். இதுவே ""பூமியிலிருந்து உயர்த்தப்படுவது'' என்று அழைக்கப்படுகிறது. இயேசுகிறிஸ்துவை முதலாவதாக ஆணிகளினால் சிலுவையில் அறைகிறார்கள்.  அதன்பின்பு இயேசுகிறிஸ்துவோடு அந்த சிலுவை மரம் உயர்த்தப்படுகிறது. ""உயர்த்தப்படுதல்'' என்னும் வார்த்தைக்கு ""மரியாதையோடும் கனத்தோடும் முன்னேறி வருதல்'' என்று பொருள்.


""நான் பூமியிலிருந்து உயர்த்தப்பட்டிருக்கும்போது'' என்று இயேசுகிறிஸ்து கூறும்போது, அவர் தம்முடைய பாடுகளை மகிமையாகவே நோக்கிப் பார்க்கிறார். இயேசுகிறிஸ்துவின் சிலுவைப்பாடுகள் அவருக்கு மகிமையில் முன்னேறிப்போவது போலவே இருக்கிறது. தாம் உயர்த்தப்படுவதாக இயேசுகிறிஸ்து நினைக்கிறார். பூமியிலிருந்து இயேசுகிறிஸ்து உயர்த்தப்பட்டிருக்கும்போது அவர் எல்லா மனுஷரையும் தம்மிடத்தில் இழுத்துக்கொள்கிறார். இந்தச் சம்பவம் இயேசுகிறிஸ்துவின் சிலுவை மரணத்திற்குப் பின்பு நடைபெறும் சம்பவமாகும். சபையின் வளர்ச்சி இயேசுகிறிஸ்துவின் மரணத்திற்குப் பின்பே வேகமாக அதிகரிக்கிறது. இயேசுகிறிஸ்துவின் சிலுவை மரணத்தின் விளைவினால், அவர் பூமியிலிருந்து உயர்த்தப்பட்ட பின்பு, சபைக்கு விரைவான வளர்ச்சி உண்டாயிற்று. 


இயேசுகிறிஸ்துவின் சிலுவை ஒரு சிலருக்கு இடறுகிறதற்கு ஏதுவான தடைக்கல்லாக இருந்தாலும், மற்றவர்களுக்கு உயர முன்னேறிச்செல்வதற்குப் படிக்கற்களாக இருக்கிறது. ""நான் பூமியிலிருந்து உயர்த்தப்பட்டிருக்கும்போது'' என்று இயேசுகிறிஸ்து கூறும் வாக்கியமானது, வனாந்தரத்தில் வெண்கல சர்ப்பம் உயர்த்தப்பட்டதற்கு அடையாளம் என்று சிலர் கூறுகிறார்கள். வனாந்தரத்தில் சர்ப்பத்தினால்  கடிக்கப்பட்டவர்கள் எல்லோரையும் வெண்கல சர்ப்பம் தன் பக்கமாக இழுத்துக்கொண்டதற்கு இது அடையாளம் என்று இதற்கு  வியாக்கியானம் கூறுகிறார்கள். 


இயேசுகிறிஸ்து தம்மிடத்தில் எல்லாரையும் இழுத்துக்கொள்கிறார். இயேசுகிறிஸ்துவின் மந்தை பெரிதாயிருக்கும். எல்லா    தேசங்களிலும் இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷம் பிரசங்கம்பண்ணப்படும்போது  ஏராளமான ஜனங்கள் இரட்சிக்கப்பட்டு தேவனுடைய ராஜ்யத்தில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். ""சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்தில் உயர்த்தப்பட்டதுபோல, மனுஷகுமாரனும் தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு உயர்த்தப்படவேண்டும்''  (யோவா 3:14,15). 


இயேசுகிறிஸ்து சிலுவையில் அறையப்படும்போது, அவர் அறையப்பட்ட விதம், அவர் உயர்த்தப்படுவதுபோல இருக்கிறது. இயேசுகிறிஸ்துவின் இரண்டு கரங்களும் விரிவாய்த் திறக்கப்பட்டிருக்கிறது. எல்லா ஜனங்களையும் தம்மிடத்தில் வரவேற்கும் விதமாகவும்,  தம்மிடத்தில் வருகிற எல்லோரையும் அவர் ஏற்றுக்கொள்ளும் விதமாகவும், இயேசுகிறிஸ்துவின் கரங்கள் விரிவாய்த் திறக்கப்பட்டதாக இருக்கிறது.


உயர்த்தப்படுதல் என்பதன் கிரேக்க வார்த்தை ""ஹுப்úஸô'' என்பதாகும். இதற்கு உயர்த்துதல், வானத்தில் உயர்த்துதல் என்று பொருள்.   இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு, உயர்த்தப்படுகிறார். சிலுவையில் உயர்த்தப்படுவதை இந்த வாக்கியம் குறிப்பதோடு இயேசு கிறிஸ்து வானத்திற்கு உயர்த்தப்படுவதையும் குறிப்பிடுகிறது.


இயேசு கிறிஸ்து பூமியிலிருந்து உயர்த்தப்பட்டிருக்கும்போது அவர் எல்லோரையும் தம்மிடத்தில் இழுத்துக் கொள்ளுவார். பரிசுத்த ஆவியானவர் மூலமாகவும், இயேசு கிறிஸ்து செய்த அற்புதங்கள் மூலமாகவும் ஜனங்களைத் தம்மிடமாக இழுத்துக் கொள்வார். விசுவாசிகள் மூலமாக நடைபெறும் அற்புதங்கள் சுவிசேஷச் செய்தியை உறுதிபண்ணுகிறது. இயேசு கிறிஸ்துவின் மகிமையின் நாளிலும், அவருடைய ஆளுகையின்போதும் எல்லா மனுஷரும் அவரிடமாக இழுத்துக் கொள்ளப்படுவார்கள்.  


மனுஷகுமாரன் யார்


ஜனங்கள் அவரை நோக்கி: கிறிஸ்து என்றென்றைக்கும் இருக்கிறார் என்று வேதத்தில்   சொல்-யதை நாங்கள் கேட்டிருக்கிறோம், அப்படியிருக்க மனுஷகுமாரன் உயர்த்தப்படவேண்டியதென்று எப்படிச் சொல்லுகிறீர்; இந்த மனுஷகுமாரன் யார் என்றார்கள்  (யோவா 12:34). 


இயேசுகிறிஸ்துவின் உபதேசத்தைக் கேட்கிற ஜனங்களுக்கு மனுஷகுமாரனைப்பற்றி  அறிந்துகொள்ளும் ஆர்வம் உண்டாயிற்று. அவர்கள் வானத்திலிருந்து உண்டான சத்தத்தைக் கேட்டிருக்கிறார்கள். ஆனால் அந்த சத்தம் இயேசுகிறிஸ்துவைத் தேவனுடைய குமாரனாக விசுவாசிப்பதற்கு அவர்களுக்குப் போதுமானதாகயில்லை. இயேசுகிறிஸ்துவின் உபதேசத்திற்கு மறுப்பு தெரிவித்து அவரோடு வாக்குவாதம்பண்ணுகிறார்கள். இயேசுகிறிஸ்து தம்மை ""மனுஷகுமாரன்'' (யோவா 12:23) என்று அழைக்கிறார். மேசியாவுக்கு கொடுக்கப்படும் பெயர்களில் ""மனுஷகுமாரன்'' என்பதும் ஒன்றாகும். யூதர்களெல்லோரும் மேசியாவும் மனுஷகுமாரனும் ஒரே நபரைக்குறிக்கும் பெயர் என்பதை அறிந்திருக்கிறார்கள். இயேசுகிறிஸ்து  தம்மைப்பற்றிச் சொல்லும்போது ""மனுஷகுமாரன்  உயர்த்தப்படவேண்டும்'' என்றும் சொல்லுகிறார்.  இந்த வாக்கியம் அவருடைய மரணத்தைக் குறிக்கிறது என்பதை யூதர்கள் அறிந்திருக்கிறார்கள். 


இயேசுகிறிஸ்துவின் உபதேசத்தையும் பழைய ஏற்பாட்டு வேதவாக்கியங்களையும் யூதர்கள் ஒப்பிட்டுப் பார்க்கிறார்கள். மேசியாவாகிய ""கிறிஸ்து என்றென்றைக்கும் இருக்கிறார்'' என்றும், அவர் மரணத்தைக் காணமாட்டார், அவர் மரிக்காமல் நித்திய காலமாக ஜீவிக்கிறவர் என்றும் யூதர்கள் வேதவாக்கியங்களின் அடிப்படையில் மேசியாவைப்பற்றி அறிந்திருக்கிறார்கள்.  ஆனால் இயேசுகிறிஸ்துவோ மனுஷகுமாரன் மரிக்கவேண்டும் என்னும் பொருளில், ""உயர்த்தப்பட வேண்டும்'' என்று கூறுகிறார். இந்த உபதேசத்தை யூதர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 


இயேசுகிறிஸ்து மனுஷகுமாரனாக அதாவது தேவகுமாரனாக இருப்பாரென்றால், அவர் கிறிஸ்துவாக அதாவது மேசியாவாக இருக்கிறார். கிறிஸ்து என்றென்றைக்கும் இருக்கிறார் என்று வேதத்தில் சொல்லியிருக்கிறதை யூதர்கள் கேள்விப்பட்டிருக்கிறார்கள்.  மேசியாவின் பாடுகள் மரணம் ஆகியவற்றைப் பற்றியும் வேதத்தில்  சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த யூதர்கள்  அந்த வசனத்தைப்பற்றி ஒரு வார்த்தைகூட பேசவில்லை. ""அவர் தம்முடைய ஆத்துமாவை  மரணத்தில் ஊற்றி'' (ஏசா 53:12) என்னும் வேதவாக்கியத்தை அவர்கள் இதுவரையிலும்  வாசிக்கவேயில்லை என்று தெரிகிறது. பழைய ஏற்பாட்டு வேதவாக்கியத்தில் கிறிஸ்துவின் கைகளும் கால்களும் ஆணிகளால் அறையப்படும் என்று எழுதப்பட்டிருக்கும் வாக்கியத்தைக்கூட அவர்கள் வாசித்ததில்லை.  


இயேசுகிறிஸ்துவின் உபதேசத்தைக் கேட்டுக்கொண்டிருக்கிற ஜனங்களுக்கு வேதவாக்கியத்தைப்பற்றி சரியாகத் தெரியவில்லை. தங்களுக்குப் பிடித்தமான சத்தியத்தை உறுதிபண்ணுவதற்கு வேதவாக்கியத்தை ஆதாரமாகக் கூறுகிறார்கள்.  ஒரு சத்தியத்தைத் தங்களுக்கு விசுவாசிக்கப் பிடிக்கவில்லையென்றால், வேதவாக்கியத்தில்  அதைப்பற்றி எழுதப்பட்டிருக்கும் வசனத்தைப் பேசாமலேயே விட்டுவிடுகிறார்கள். ஆகையினால் ""மனுஷகுமாரன் உயர்த்தப்பட வேண்டியது'' என்னும் வேதவாக்கியம் அவர்களுக்கு விநோதமாகத் தெரிகிறது. 


இயேசுகிறிஸ்து மனுஷகுமாரனுடைய பாடுகளைப்பற்றியும் மரணத்தைப்பற்றியும் பேசும்போது யூதர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள்.அதேவேளையில் ""மனுஷகுமாரன் மகிமைப்படும்படியான வேளை வந்தது'' என்று பேசும்போது யூதர்கள் ஒன்றுமே சொல்லவில்லை. இயேசுகிறிஸ்துவின் உபதேசம்  கெட்டுப்போகிறவர்களுக்கு பைத்தியமாக இருக்கிறது. சிந்தையில் தெளிவில்லாமல், தீயசிந்தனையுடையவர்களுக்கு,  இயேசுகிறிஸ்துவின் வார்த்தைகள் இடறுவதற்கு ஏதுவான தடைக்கற்களாக இருக்கிறது. 


அவர்கள் இயேசுகிறிஸ்துவிடம் ""இந்த மனுஷகுமாரன் யார்'' என்று கேட்கிறார்கள்.   மேலும்  ""மனுஷகுமாரன் உயர்த்தப்பட வேண்டியது,  அதாவது மனுஷகுமாரன் மரிக்கவேண்டும்''  என்று ஏன் சொல்லுகிறீர் என்றும் இயேசுகிறிஸ்துவிடம் கேட்கிறார்கள்.  கிறிஸ்து மரிக்கமாட்டார், என்றென்றைக்கும் இருக்கிறார் என்பதுதான் வேதத்தின் உபதேசம் என்றும், அவர் மரித்துப்போனாரென்றால் அவர் எவ்வாறு கிறிஸ்துவாக இருக்கமுடியும் என்றும், இவர்கள் இயேசுவிடம் விவாதம்பண்ணுகிறார்கள். பாடுகளை அனுபவிக்கிற  கிறிஸ்துவை அங்கீகரிப்பதைவிட, அப்படிப்பட்ட கிறிஸ்து தங்களுக்குத் தேவையேயில்லை என்னும் முடிவுக்கு இந்த யூதர்கள் வந்துவிடுகிறார்கள். 


ஒளியில் நடவுங்கள்


அதற்கு இயேசு: இன்னும் கொஞ்சக்காலம் ஒளி உங்களிடத்தில் இருக்கும்: இருளில் நீங்கள் அகப்படாதபடிக்கு ஒளி உங்களோடிருக்கையில் நடவுங்கள்: இருளில் நடக்கிறவன் தான் போகிற இடம் இன்னதென்று அறியான்  (யோவா 12:35).  


யூதர்கள் மேசியாவைப்பற்றி தங்களுக்கு இஷ்டமானபடி எதிர்பார்க்கிறார்கள். வேதவாக்கியத்தின் ஒரு பகுதியை மாத்திரம் பிடித்துக்கொண்டு, மற்றொரு பகுதியைப்பற்றிப் பேசாமல், கிறிஸ்து இப்படித்தான் இருப்பார் என்று விவாதம்பண்ணுகிறார்கள்.     அவர்களுக்கு இயேசுகிறிஸ்து தொடர்ந்து உபதேசம்பண்ணுகிறார். மனுஷன் மரித்துப்போகிறான். அதேவேளையில் அவன்  நித்தியகாலமாகவும் ஜீவிக்கிறான். அதுபோலவே மனுஷகுமாரனும் மரித்துப்போகிறார். அவர் என்றென்றைக்கும் இருக்கிறார். 


யூதர்கள் இந்த சத்தியத்தை விசுவாசிக்கவேண்டும். அவர்களுக்குக் கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, பகலில் நடக்கிறவர்கள்போல வெளிச்சத்தில் நடக்கவேண்டும். ""இன்னும் கொஞ்சகாலம் ஒளி அவர்களிடத்தில் இருக்கும், இருளில் நீங்கள் அகப்படாதபடிக்கு, ஒளி உங்களோடிருக்கையில் நடவுங்கள்'' என்று இயேசுகிறிஸ்து அவர்களிடம் கூறுகிறார்.


இயேசுகிறிஸ்து மனுஷருடைய ஆத்துமாக்களைக்குறித்தும், அவர்களுடைய நன்மையைக் குறித்தும் மிகுந்த கரிசனையோடிருக்கிறார். ஆனால் ஜனங்களுக்கோ இயேசுகிறிஸ்துவின் அன்பும் கரிசனையும் புரியவில்லை. அவருக்கு ஆதரவு கொடுப்பதற்குப் பதிலாக அவருக்கு விரோதமாக எதிர்த்து நிற்கிறார்கள். எதிர்பேசுகிறவர்கள் சத்தியத்தை அறியும்படி அவர்களுக்கு சாந்தமாய் உபதேசிக்கவேண்டும்       (2தீமோ 2:25). இயேசுகிறிஸ்து அவர்களுக்கு சாந்தமாய் உபதேசம்பண்ணுகிறார். 


இயேசுகிறிஸ்துவும் அவருடைய சுவிசேஷமும் இப்போது யூதர்கள் மத்தியில் பிரத்தியட்சமாக இருக்கிறது. இதனால் அவர்களுக்கு மிகப்பெரிய ஆசீர்வாதம் உண்டு. இயேசுகிறிஸ்துவோ இன்னும் கொஞ்சகாலம் மாத்திரமே அவர்களோடு கூடயிருப்பார். இயேசுகிறிஸ்து ஒளியாக இருக்கிறார். இன்னும் கொஞ்சகாலம் ஒளி அவர்களிடத்தில் இருக்கும். இயேசுகிறிஸ்து சிலுவையில் மரிப்பது, சூரியன் மாலையில் மறைவதுபோல இருக்கும். மாலையில் சூரியன் மறைந்தாலும் மறுபடியும் அது காலையிலும் உதிக்கும். ஒவ்வொரு நாள் மாலையிலும் சூரியன் மறைந்துகொண்டேயிருக்கும். காலையிலும் ஒவ்வொருநாள் உதித்துக்கொண்டேயிருக்கும். இது  நித்தியமாக நடைபெறும் சம்பவம். நீதியின் சூரியனாகிய இயேசுகிறிஸ்துவும் நித்திய காலமாக ஜீவிக்கிறவர். கிறிஸ்து என்றென்றைக்கும் இருக்கிறார்.’


ஒளியாகிய இயேசுகிறிஸ்து இப்போது யூதர்களிடத்தில் இருக்கிறார். இயேசுகிறிஸ்துவின் சரீரப்பிரகாரமான பிரத்தியட்சமான பிரசன்னம் அவர்களோடு கூடயிருக்கிறது. இந்த சிலாக்கியம் அவர்களுக்கு சிறிதுகாலம் மாத்திரமே இருக்கும். வெகுவிரைவில் இயேசுகிறிஸ்து அவர்களைவிட்டுக் கடந்துபோய்விடுவார்.  ஒளி நம்மோடு கொஞ்சகாலம் மாத்திரமே இருக்கும் என்னும் சிந்தனை நம்முடைய மனதில் பதிந்திருப்பது மிகவும் நல்லது. ஒளி நம்மோடு இருக்கும்போதே நாம் நடக்கவேண்டிய இடத்திற்கு நடந்துபோய்விடவேண்டும். நமக்கு நியமிக்கப்பட்டிருக்கும் ஊழியத்தைச் செய்து முடித்துவிடவேண்டும்.  கொஞ்சகாலம் மாத்திரமே நமக்கு இருக்கிறது. வாய்ப்பு எப்போதும் வருவதில்லை. வாய்ப்பு இருக்கும்போதே நம்முடைய ஊழியத்தை நிறைவேற்றவேண்டும். 


 யூதர்களுக்கு மிகப்பெரிய சிலாக்கியம் இப்போது கிடைத்திருக்கிறது. அவர்கள் இயேசுகிறிஸ்துவை பிரத்தியட்சமாகப் பார்த்து, அவருடைய உபதேசங்களைத் தங்களுடைய காதுகளால் கேட்கவும், அவருடைய அற்புதங்களைத் தங்கள் கண்களால் பார்க்கவும் யூதர்களுக்கு விசேஷித்த சிலாக்கியம் கிடைத்திருக்கிறது. இதை இவர்கள் அனுபவிக்கிறார்கள். இந்த ஒளி அவர்களோடு இருக்கும்போது அவர்கள் நடக்கவேண்டும். ஒரு இடத்திற்கு பிரயாணம் பண்ணுகிறவர்கள் வெளிச்சம் இருக்கும்போது பிரயாணம் பண்ணுவார்கள். தங்களுக்கு அநுகூலமான சூழ்நிலைகள் இருக்கும்போது அதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, தங்களுடைய பிரயாணத்தில் முன்னேறிச் செல்வார்கள்.


விசுவாசிகளாகிய நாம் இந்த பூமியில் இருக்கும்போது நமக்கும் ஒரு            பிரயாணம் நியமிக்கப்பட்டிருக்கிறது. நாம் மோட்சப்பிரயாணத்தை மேற்கொண்டிருக்கிறோம். நம்மிடத்தில் ஒளி இருக்கும்போதே நாம் பரலோகத்தை நோக்கிப் பிரயாணம் செய்யவேண்டும். பகற்காலம் வேலைசெய்வதற்கு ஏற்றகாலமாகவும், இரவுகாலம் ஓய்வு எடுப்பதற்கு ஏற்றகாலமாகவும் இருக்கிறது. ஆகையினால் நமக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்புக்களை பிரயோஜனப்படுத்திக்கொள்ளவேண்டும். 


நம்முடைய பகற்காலம் முடியும் முன்பாகநமக்கு நியமிக்கப்பட்டிருக்கும் ஊழியத்தை நிறைவேற்றவேண்டும். பகற்காலம் முடிந்துபோனால் நம்மால் ஒன்றும் செய்யமுடியாது. பகற்காலத்தில் நிறைவேற்றப்படாத ஊழியங்கள் நிறைவேற்றப்படாதவையாகவே இருக்கும்.தேவன் நம்மிடத்தில் பொறுப்பாக ஒப்புக்கொடுத்திருக்கும் ஊழியத்தை நாம் நிறைவேற்றாதவர்களாகவே நியாயந்தீர்க்கப்படுவோம். ஆகையினால் இருளில் நாம் அகப்படாதபடிக்கு ஒளி நம்மோடிருக்கையில் நடக்கவேண்டும்.


இந்தப் பூமியிலுள்ள ஜனங்களில் சிலர் சுவிசேஷத்திற்குச் செவிகொடுக்காமல் பாவத்திற்குத் தங்களை ஒப்புக்கொடுக்கிறார்கள்.  பாவத்தில் ஜீவிக்கிறார்கள். இவர்கள் இருளில் நடக்கிறவர்கள். தாங்கள் போகிற இடம் இன்னதென்று இவர்களுக்குத் தெரியாது. தாங்கள் போகிறோமா என்பதும், அப்படியே போனாலும் தாங்கள் எங்கு போகிறோம் என்பதும் இவர்களுக்குத் தெரியாது. சுவிசேஷத்தின் சத்தியம் நம்முடைய  இருதயத்தில் இல்லையென்றால், நன்மைக்கும் தீமைக்கும் நம்மால் வித்தியாசம் காணமுடியாது. இருளில் நடக்கிறவர்கள் அழிவை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறார்கள். இவர்கள்  தங்களுக்கு முன்பாக இருக்கும் ஆபத்தை அறியாதவர்களாக இருக்கிறார்கள். 


மேசியா எப்போதும் இருப்பார்.   சூரியனுடைய ஒளியை நாம் பகலில் மட்டுமே காணமுடியும். இரவில் காணமுடியாது. ஆனாலும் சூரியன் பகலிலும், இரவிலும் உள்ளது. அதுபோலவே மேசியா எப்போதும் இருந்தாலும், அவரைக் காண்பதற்கும் ஒரு காலம் உண்டு.  ஆகையினால் இயேசு கிறிஸ்து ஜனங்களிடம் ""இருளில் நீங்கள் அகப்படாதபடிக்கு ஒளி உங்களோடிருக்கையில் நடவுங்கள்'' என்று கூறுகிறார். இருள் சீக்கிரமாக வந்து விடும். அப்போது ஜனங்கள் இயேசு கிறிஸ்துவைத் தேடுவார்கள். ஆனாலும் கண்டுகொள்ள மாட்டார்கள். இருளில் நடக்கிறவன் தான் போகிற இடம் இன்னதென்று அறியான்.


ஒளியின் பிள்ளைகள்


ஒளி உங்களோடிருக்கையில் நீங்கள் ஒளியின் பிள்ளைகளாகும்படிக்கு, ஒளியினிடத்தில் விசுவாசமாயிருங்கள் என்றார். இவைகளை இயேசு சொல்-, அவர்களை விட்டு மறைந்தார் (யோவா 12:36). 


இயேசுகிறிஸ்துவின் உபதேசத்திலிருந்து நமக்கு மிகவும் முக்கியமான சத்தியம் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஒளி நம்மோடிருக்கிறது. நாம் அந்த ஒளியினிடத்தில் விசுவாசமாகயிருக்கும்போது ஒளியின் பிள்ளைகளாக ஆவோம். இயேசுகிறிஸ்து தம்மைப்பற்றிய சத்தியத்தை யூதர்களுக்கு வெளிப்படுத்திக் கூறுகிறார். சத்தியத்தைக் கேட்கிற அவர்கள் அதைத் தங்கள் இருதயத்தில்  ஏற்றுக்கொள்ளாமல் போய்விடக்கூடாது. அவர்களுக்கு வாய்ப்புக் கொடுக்கப்படும்போது, அந்த வாய்ப்பைத் தங்களுடைய ஆத்துமாவுக்கு  ஆதாயம் உண்டாகத்தக்கதாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும். தற்காலத்தில் இயேசுகிறிஸ்துவின் சத்தியம் சுவிசேஷத்தின் மூலமாக எல்லா ஜனங்களுக்கும் அறிவிக்கப்படுகிறது. நாம் அந்த சுவிசேஷத்தை ஏற்றுக்கொண்டால் நமக்கு ஆவிக்குரிய ஆசீர்வாதம் உண்டாகும். சுவிசேஷத்தை விசுவாசித்து நாம் சத்தியத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும். இயேசுகிறிஸ்துவின் வார்த்தை நம்முடைய கணக்களுக்கு வெளிச்சமாகயிருக்கிறது. நம்முடைய கால்களுக்குத் தீபமாகயிருக்கிறது. இயேசுகிறிஸ்துவைப் பின்பற்றி நம்முடைய ஆவிக்குரிய பிரயாணத்தில் முன்னேறிச் செல்லவேண்டும்.


நம்மிடத்தில் ஒளியிருக்கும்போதுதான் நம்மால் பிரயாணம்பண்ண முடியும். இந்த ஒளியினிடத்தில் விசுவாசமாகயிருந்து தேவனைப்பற்றிக்கொள்ளவேண்டும். அப்போது நாம் ஒளியின் பிள்ளைகளாகயிருப்போம். தேவன் நம்முடைய பிதாவாகயிருப்பார். தேவன் ஒளியாகயிருப்பதினால், தேவனுடைய பிள்ளைகள் ""ஒளியின் பிள்ளைகள்'' என்று இங்கு அழைக்கப்படுகிறார்கள். 


இயேசுகிறிஸ்து இந்த வார்த்தைகளைச்  சொல்லி, அவர்களைவிட்டு மறைந்துபோகிறார். இவர்களுக்கு என்னென்ன சத்தியங்களையெல்லாம் உபதேசம்பண்ண வேண்டுமோ அவையெல்லாவற்றையும் இயேசுகிறிஸ்து உபதேசம்பண்ணியிருக்கிறார். இதற்குமேல் அவர்களுக்குஉபதேசம்பண்ண வேண்டிய தேவையில்லையென்று இயேசு தீர்மானித்திருக்கிறார். இயேசுகிறிஸ்துவின் சத்திய வசனங்களை அவர்கள் தியானித்துப் பார்த்து தங்களுடைய இருதயத்தில் உணர்த்தப்பட்டு, இயேசுவை கிறிஸ்துவாகவும், தேவனுடைய குமாரனாகவும் அங்கீகரிக்கவேண்டும். இயேசுகிறிஸ்து இவர்களோடு இதற்குமேல் விவாதம்பண்ண விரும்பவில்லை. அவர் வாக்குவாதம் பண்ணுகிறவரல்ல. இயேசுகிறிஸ்து அவர்களைவிட்டு மறைந்துபோகும்போது, தேவனுடைய கிருபையும் அவர்களைவிட்டு மறைந்துபோகிறது. 


இயேசுகிறிஸ்து தம்முடைய ஜீவனையும் குறித்து கவனமாயிருக்கிறார். ஏற்றவேளை வருவதற்கு முன்பாக அவர் மரித்துப்போக ஆயத்தமாயில்லை. யூதஜனங்கள் இயேசுகிறிஸ்துவின் உபதேசத்தைக்கேட்டு அவர்மீது கோபமாகயிருக்கிறார்கள். அவரைக் கொலைசெய்து போடவேண்டுமென்று வகைதேடுகிறார்கள். ஆகையினால் இயேசுகிறிஸ்து அவர்களுடைய துன்மார்க்கமான சிந்தனைகளுக்கு இடங்கொடுக்காமல் அந்த இடத்தைவிட்டு மறைந்துபோய்விடுகிறார். 





Post a Comment

1 Comments