தவறான உபதேசங்கள் எப்படி உருவாக்குகிறது

 தவறான உபதேசம்



தவறான உபதேசங்கள் எப்படி உருவாக்குகிறது


தவறான உபதேசங்கள் எவ்வாறு உருவாகுகின்றன.


1. வேத வசனங்களை தவறாக புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப உபதேசம் செய்தல்.


2. தங்கள் சுய கருத்துக்கு ஏற்ப வசனங்களைத் தேடி அதையே உபதேசமாக போதித்தல்.


3. வேத வசனங்களின் அடிப்படை போதனையை நோக்காமல் ஒரு குறிப்பிட்ட வசனத்தை மட்டும் எடுத்துக் கொண்டு அதையே உபதேசமாக போதித்தல்.


4. சொப்பனங்கள் தீர்க்கதரிசனங்கள் வெளிப்பாடுகளை தங்கள் உபதேசங்களுக்கு அடித்தளம் ஆக்குதல்.


5. தனிப்பட்டவரின் அனுபவங்களை வேத உபதேசம் போல போதித்தல்.


நல்லவர்களும்  தவறாய் போதிக்கும் ஆபத்துகள் உண்டு


தேவனால் வல்லமையாய் பயன்படுத்தப்படும் போதகர்களும் தவறாய் போதிக்கும் ஆபத்துகள் உண்டு. ஒருவர் மூலம் அற்புத அடையாளங்கள் நடைபெறும் போது அவரின் போதனைகள் எல்லாம்  சரி என்று மக்கள் நம்பி விடுவார்கள்.

தீர்க்கதரிசனம் வெளிப்பாடு போன்ற ஆவியின் வரங்கள் கிரியை செய்யும் ஊழியராக இருந்தால் அவர் செய்வது எல்லாம் சரி என்று நம்ப ஏராளமான பேர் இருக்கிறார்கள்.

ஒருவரை கர்த்தர் பயன்படுத்துவதினால் அவர் சரியான போதனை உள்ளவர் என்று கூற முடியாது. இது அனேகருக்கு ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கலாம், ஆனால் உண்மை. சபை சரித்திரத்தில் இருந்தும் இன்றைய அனுபவங்களிலிருந்தும் இதை தெளிவாக அறியலாம். ஒருவர் தேவனுக்கு தன்னை ஒப்புக்கொடுத்து தேவசமூகத்தில் காத்திருந்து ஜெபிக்கும்போது தேவன் அவரை கிருபையால் பயன்படுத்த ஆரம்பிக்கிறார். வசனம் தெளிவாய் தெரிந்ததினால் அல்ல.


1. வேத வசனங்களை தவறாக புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப உபதேசித்தல்.


உதாரணம் -1

பவுலின் மனைவி ஷீலா என்றும் பவுலும் சீலாவும் சிறைச்சாலையில் இருந்தபோது பிறந்தவன்தான் ஒநேசிமு என்றும் போதிப்பவர் பலர் உண்டு. ஏனெனில் பிலேமோன் 1:10இல் கட்டப்பட்டிருக்கயில் நான் பெற்ற மகனாகிய ஒனேசிமு என்று பவுல் குறிப்பிடுகிறார்.


பவுல் என் குமாரனாகிய தீமோத்தேயு என்று பல தடவை குறிப்பிடுகிறார். எனவே தீமோத்தேயு பவுலின் மகன் என்று போதிக்கிறவர்களும் உண்டு. ஷீலா ஆண் என்பதும் பவுலின் உடன் ஊழியன் என்பதும் ஒநேசிமு தீமோத்தேயு ஆகியோர் பவுலில் மூலம் கிறிஸ்துவுக்குள் வந்த ஆவிக்குரிய பிள்ளைகள் என்பது வசனம் தெரிந்தவருக்கு மட்டுமே தெரியும்.


அந்தி கிறிஸ்து என்பதற்கு சிலர் கூறும் தவறான கருத்துக்கள்:


அந்தி என்றால் மாலை வேலை. கடைசி காலத்தில் எழும்பும் கிறிஸ்துதான் அந்தி கிறிஸ்து என்று போதிப்பவர்கள் உண்டு. ஆங்கிலத்தில் Anti-Christ என்று வருகிறது. இதை அப்படியே தமிழில் அந்திக்கிறிஸ்து என்று மொழியாக்கம் செய்துள்ளனர். "கிறிஸ்துவுக்கு எதிரானவன்" என்பதுதான் இதன் சரியான பொருள். இதுபோல ஏராளமான உதாரணங்களைக் கூறலாம் சரியாய் புரிந்து கொள்ளாவிடில் தவறான போதனைகள் தோன்றும்.


2. தங்கள் சுய கருத்தை வலியுறுத்த அதற்கு ஏற்ற வசனங்களை எடுத்து உபதேசித்தல்


உதாரணமாக குடும்ப வாழ்க்கை தாம்பத்ய உறவு தவறு என்று கருத்து உடையவர்கள் ஆதாம் ஏவாள் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியை புசித்தது என்பது உடலுறவு கொண்டதை தான் குறிக்கிறது என்று போதிக்கின்றனர்.

நீங்கள் பலுகிப் பெருகி பூமியை நிரப்புங்கள் என்று சொல்லி தேவன் அவர்களை ஆசிர்வதிதாக ஆதியாகமம் அதிகாரம் 1:28 கூறப்பட்டுள்ளதே. ஏனவே பாலுறவை தேவன் அங்கீகரித்தார் என்பது இவர்கள் கண்களுக்கு மறைக்கப்பட்டுள்ளது.

பறித்தாள் பூசித்தாள் புருஷனுக்கும் கொடுத்தாள் என்று கூறப்பட்டுள்ளதே. அதற்கும் உடலுறவுக்கும் என்ன சம்பந்தம்?.


இதுபோல சபையின் ஆராதனைகளில் கலந்துகொள்ள வேண்டாம் என்ற கருத்துடையவர்கள் 1 யோவான் 2:27இல் ஒருவரும் உங்களுக்கு போதிக்க வேண்டியதில்லை அந்த அபிஷேகம் சகலத்தையும் குறித்து உங்களுக்குப் போதிக்கிறது என்ற வசனத்தை மேற்கோள்காட்டி மக்களை திசை திருப்புகிறார்கள் வானத்தையும் பூமியையும் உண்டாக்கின இயேசு கிறிஸ்துவே  வாரந்தோறும் தவறாமல் ஜெப ஆலயத்திற்கு போனார் என்று வேதம் கூறுகிறது.


3. ஒரு வசனத்தை மட்டுமே எடுத்து ஒரு உபதேசத்தை உறுதிப்படுத்த முயற்சிப்பது


பார்வோன் யோசேப்பை நோக்கி எகிப்தில் உள்ளவர்களில் ஒருவனும் உன்  உத்தரவில்லாமல் தன் கையையாவது தன் காலையாவது அசைக்கக் கூடாது என்றான் ஆதி 41:44. இதை அப்படியே எடுத்துக் கொள்ள முடியுமா?


பெண்ணை தொடாமல் இருக்கிறது மனுஷனுக்கு நல்லது 1கொரி7:1 என்ற வார்த்தையை எடுத்துக் கொண்டு திருமணம் பண்ண கூடாது என போதிக்கிறவர்கள் உண்டே


அதிக ஆக்கினையை அடைவோம் என்று அறிந்து உங்களில் அனேகர் போதகராக ஆக வேண்டாம் என்று யாக்கோபு -3ம் அதிகாரம் சொல்லுகிறது. இந்த

வசனத்தை எடுத்துக் கொண்டு எவரும் போதகராக வேண்டாம் என்று தவறாக போதித்தல்.


இதுபோல நூற்றுக்கணக்கான வசனங்களை கூறலாம் இப்படி 

ஒரு வசனத்தை மட்டும் எடுத்துக்கொண்டு அதை உபதேசமாக போதிக்கக் கூடாது வேத வசனங்களின் அடிப்படை போதனைகளை கவனிக்க வேண்டும்.


4.சொப்பனங்கள் தீர்க்கதரிசனங்கள் வெளிபாடுகளை தங்கள் உபதேசங்களுக்கு அடித்தளம் ஆக்குதல்


சிலர் வாழ்க்கையில் சில காரியங்களை செய்யும் படி கர்த்தர் கூறலாம். அது அவர்களுக்குள் தேவனுக்கும் இடையே உள்ள காரியம். அதையே உபதேசம் ஆக்கக் கூடாது.


ஒரு சகோதரன் தன் தலைமுடியை அதிக நேரம் எடுத்து அலங்காரம் செய்வாராம் ஒருநாள் கர்த்தர் அவரை மொட்டையடக்க சொன்னாராம் அவர் மொட்டை அடித்துவிட்டார். அவர் நற்செய்தி பணி செய்து வந்தார். இது அவருக்கு உள்ள தனிப்பட்ட பிரச்சினை. கர்த்தர் என்னை மொட்டையடிக்க சொல்லிவிட்டார் ஆக எல்லோருமே மொட்டையடிக்க வேண்டும் என்று அதையே உபதேசம் ஆக்கக் கூடாது.


தங்கள் நகைகளை கழற்றினால் கர்த்தர் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தினால்  நிரப்புவதாக கர்த்தர் சொன்னதாகவும் அதன்படி நகைகளை கழற்றினபோது கர்த்தர் தங்களை அபிஷேகத்தால் நிரப்பினார் என சொல்லி கேட்டு இருப்பிர்கள். இது  அவர்களின் தனிப்பட்ட காரியம். நகை அணிந்திருந்த எத்தனையோ பெண்களுக்கு கர்த்தர் ஆவியின் அபிஷேகத்தை தந்திருக்கிறாரே! எனவே தனிப்பட்ட சிலருக்கு கொடுக்கப்பட்ட சொப்பனங்கள் வெளிப்பாடுகளை எல்லோருக்கும் பொதுவான உபதேசம் ஆக்கக் கூடாது.


5. தனிப்பட்டவர்களின் அனுபவங்களை வேத உபதேசம் போல போதிப்பது


வழி செலவுக்கு பணத்தை எடுத்து செல்ல வேண்டாம் என்று இயேசு சீடர்களிடம் கூறினார். அவர்கள் இசுரவேல் மக்களிடம் போனதால் அவர்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என்று சொன்னார் இதையே பொது உபதேசமாக எடுத்துக்கொண்டு பேருந்துக்கு புகைவண்டிக்கு விமானத்துக்கு போகும்போது பணம் எடுத்துச் செல்லாமல் போவோம் என்றால் சிறைக்குத்தான் செல்ல வேண்டும்.


பேதுரு தண்ணீரில் விசுவாசத்துடன் நடந்தான் நாமும் நடப்போம் என்று ஒரு குறிப்பிட்ட தேசத்தில் ஆற்று வெள்ளத்தைக் கடக்க முயற்சி செய்த பல பெண்கள் ஆற்றில் அடித்துச் சென்றது நாம் அறிந்ததே எனவே ஒருவரின் தனிப்பட்ட அனுபவத்தை உபதேசம் ஆக்க முடியாது.


எனவே இப்படிப்பட்ட புதுமையான மற்றும் தவறான உபதேசங்களுக்கு நாம் கவனமாய் இருப்பபோம்…..



 



 



Post a Comment

2 Comments

  1. மிகவும் உண்மையான பதிவு. அன்றும் இன்றும் தேவனுடைய மெய்யான திருச்சபைக்கு மிக பெரிய அச்சுருத்தலாக இருந்து வருவது கள்ள உபதேசம். இதனை விசுவாசிகளும் போதகர்களும் புரிந்து கொள்ள வேத தியானமும் பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலும் மிகவும் அவசியம். கஷ்டப்பட்டு வேததத்தை கற்றுக் கொள்ளாதவர்கள் வேதத்தை தவறாக போதித்து கொண்டிருக்கின்றனர். இது மிகவும் என்னை பாரப்படுத்தக்கூடிய விசயம்.

    ReplyDelete