சிமிர்னா சபை அறிந்து கொள்வோம் பகுதி - 37

அறிந்து கொள்வோம்

பகுதி - 37


சிமிர்னா சபை


(வெளி: 2:8-11)


'சிமிர்னா' என்பதற்கு 'வெள்ளைப்போளம்' என்று பொருள். எபேசு பட்டணத்திற்கு வடக்கே 50 மைல் தொலைவில் இருந்தது. இந்தபட்டணம் அக்காலத்தில் திட்டமிட்டு கட்டப்பட்ட அழகிய பட்டணம். பட்டணத்தில் ஒரு முனை தொடங்கி மறுமுனை மட்டும் நேர் தெருக்கள் இருந்தன. பொன் தெரு என அழைக்கப்பட்ட பெரிய தெருவில் 'சிவிலி'  'ஜீயஸ்'  தேவதைகளின் கோவில்கள் இருந்தன.


சிமிர்னா என்பது கிரேக்கர்களுக்கு சொந்தமான ஒரு பூர்வீகமான பட்டணம் கி.மு 1000-த்தில் கிரேக்கர்களின் மிக முக்கியமான பட்டணமாக இது விளங்கியது. 


கி.மு 600 ல் ரோமர்களால் இது முற்றுகையிடப்பட்டு முற்றிலுமாக அழிக்கப்பட்டது. பின்னர் 200 ஆண்டுகள் கழித்து, இந்த நகரம் ரோமர்களால் திரும்பவும் எடுத்து கட்டப்பட்டது. அக்காலத்திய சிமிர்னா பட்டணம், துருக்கியின் ஏஜியன் கடல் ஒட்டிய மேற்குக் கரைப் பகுதியில் அமைந்திருந்தது.


வளைகுடா பகுதியாகக் காணப்பட்ட சிமிர்னாவில் ஹெர்மஸ் ஆற்றின் முகத்துவாரம் அமைந்திருந்தது. ஹெர்மஸ் மற்றும் மியாண்டர் சமவெளிகளின் வழியாக ஆசியா மைனருக்கு செல்லும் பிரதான பாதை சிமிர்னா ஊடே கடந்து செல்வதால், சிமிர்னா மிகப் பெரியதும், பொருளாதாரத்தில் அதிக வளமுள்ளது, பரபரப்பான பட்டணமுமாக திகழ்ந்தது.


கிரேக்கர்கள் காலத்தில் கட்டப்பட்ட நகரங்களில் முதலாவதாக கட்டப்பட்ட நகரம் இந்த சிமிர்னா தான் என்று கிரேக்க சரித்திரக் குறிப்புகள் சொல்லுகின்றன. இங்கே கிரேக்கர்களின் பிரபலமான தெய்வமான சிபிலிக்கு மிகப் பிரம்மாண்டமான கோவில்களும், பலிபீடங்கள் இருந்தன. ரோமர்களின் காலத்தில் இந்த நகரம் இன்னும் சிறப்படைந்திருந்தது.


வியாபாரத்திற்கு சிறந்த ஒரு பட்டணமாக இருந்தது. ஐசுவரியத்தில் உயர்ந்த ஒரு பட்டணமாக இருந்தது. 

இது ஆசியாவின் 'அணிகலன்' என்றும் 'மணிமுடி' என்றும் அழைக்கப்பட்டது. இப்பட்டணம் திடீரென்று எதிரிகளால் அழிக்கப்பட்டு சிறு கிராமமாய் மாறிற்று. ஆனால், மீண்டும் சில காலத்துக்கு பின் பெரும் பட்டணமாயிற்று. இப்பட்டணம் பல முறை  நில அதிர்வினால் சேதமடைந்தது என்கிறார்கள்.

 

இன்றும் இந்தபட்டணம் 'இஸ்மிர்' என்னும் பெயரில் துருக்கி நாட்டில் துறைமுகப்பட்டணமாக விளங்குகிறது. தற்போது இதன் ஜனத்தொகை 2,50,000. இப்பட்டணத்தில் சபை இல்லாத காலமே இல்லை.


சிமிர்னா சபை:


சிமிர்னா சபை பவுல் மூலம் ஆரம்பித்தாக சிலர் கருதுகின்றனர். 'போலிகார்ப்' என்ற சபைப்பிதா சிமிர்னா சபையின் கண்கானியாக இருந்தார். போலிகார்ப்  யூதர்களால் பிடிக்கப்பட்டு நியாய ஸ்தலத்துக்கு முன்பு நிறுத்தப்பட்டு கிறிஸ்துவை மறுதலிக்குமாறு அவரை மிகவும்

வற்புறுத்தினார்கள் ஆனால் போலிகார்ப், 

"86 வருடங்களாக கிறிஸ்துவை சேவித்து வருகிறேன்,அவர் ஒரு போதும் ஒரு தீங்கையும் எனக்குச் செய்ததில்லை. இப்படிப்பட்ட என் இராஜாவை என் இரட்சகரை எப்படி நான் மறுதலிக்க முடியும்?" 

என்று அறிக்கையிட்டு இரத்த

 சாட்சியாக மரித்தார்.

அவர் மரித்த அதே நேரத்தில் 1500 பேரும், மற்றொரு சமயம் 800 பேரும் கிறிஸ்துவுக்காக இரத்த சாட்சியாய் மரித்தனர்.


  • கிறிஸ்துவின் வெளிப்பாடு: (வெளி: 2:8)


முந்தினவரும் பிந்தினவரும் பிழைத்தவருமாய் தன்னை  வெளிப்படுத்துகிறார். மகா உபத்திரவத்தினூடே சென்ற சபைக்கு மரித்தோரிலிருந்து எழுந்தவாரய் தன்னை வெளிப்படடுத்தி அவர்களை ஆறுதல்படுத்துகிறார். உபத்திரவம் மரணத்தைக் கொண்டு வந்தாலும் பயப்பட வேண்டாம். நான் ஜீவிப்பதுபோல் நீங்களும் பிழைத்திருப்பீர்கள் என்ற அர்த்தத்தில் பேசினார்.


  • சபையின் நற்குணம்:


இச்சபை  பல நற்குணங்கள் கொண்ட  சபையாக இருந்தது. எல்லா சபைகளுக்கும் ஆண்டவர் கூறும் வார்த்தை இதுவே. தேவனுடைய கண்காணிப்பை இது காட்டுகிறது. இந்த சபை கிறிஸ்துவுக்காய் உபத்திரவப்பட்ட சபை,பாடுபட்ட சபை.


  • ஆலோசனை:


"நீ ஐசுவரியம் உள்ளவனாக இருந்தும் உனக்கிருக்கிற தரித்திரத்தையும்..."வெளி  - 2:9 .


இந்த சபையில் தரித்திரரும் இருக்கிறார்கள், என்பதாற்கு இரண்டு விளக்கம் உண்டு.


அ) இந்த ஊர் செல்வ நிலையில் இருந்தும், இச்சபையில் உள்ள விசுவாசிகள் தரித்திர நிலையில் இருந்தார்கள் என்பது ஒரு விளக்கம்.


ஆ) ஆவிக்குரிய காரியங்களில் இவ்விசுவாசிகள் ஐசுவரியவான்களாய் இருந்தார்கள். ஆனால், பொருளாதார நிலையில் மிகவும் தரித்திரராய் இருந்தார்கள் என்பது மற்றொரு விளக்கம்.


  • கர்த்தருடைய கூட்டத்தார்: (2:9)


யூதரில் சிலர் கிறிஸ்துவை மறுதலித்து சுவிசேஷத்திற்கு எதிர்த்து நின்றார்கள். தேவனுடைய ஜனமாய் இருந்தும் கிறிஸ்துவை மறுதலித்தபடியால் சாத்தானின் கூட்டத்தார் என அழைக்கப்படுகின்றனர்.


  • 10 நாள் உபத்திரவம்: (2 :10)


ரோம சக்கரவர்த்திகள் 10 பேர் சபையை துன்பப்படுத்தினதை இது குறிக்கிறது என சிலர் கருதுகின்றனர்.


1. கி.பி. 64 ல் - நீரோ ராயன்

2. கி.பி. 81 ல் - டொமிசியன்

3. கி.பி. 98 ல் - ட்ராஜன்

4. கி.பி. 180 ல் - மார்க்கஸ்

5. கி.பி. 193 ல் - செப்டிமியஸ்சிவிரஸ்

6. கி.பி. 235 ல் - மாக்சிமஸ்

7. கி.பி. 249 ல் - டீளியஸ்

8. கி.பி. 254 ல் - வெல்லேரியன்

9. கி.பி. 270 ல் - ஆரிலியன்

10. கி.பி. 284 ல் - டயோகிளிஸியன்


உபத்திரவங்களை முன் அறிவித்த தேவன் மரணபரியந்தம் உண்மையாய் இருங்கள் என்று தைரியம் கூறுகிறார்.


  • ஜெயங்கொள்ளுகிறவனுக்கு  வாக்குத்தத்தம்:


ஜெயங்கொள்கிறவன் இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை. மரணபரியந்தம் உண்மையாய் இரு. அப்பொழுது ஜீவ கிரீடம் உனக்கு தருவேன்.


மரணத்திற்கு எதிரானது ஜீவன். வெற்றிக்கு அடையாளமானது கிரீடம். மரணத்தின்மீது கொண்ட வெற்றியை காட்டுவதே இந்த ஜீவ கிரீடம். 

முதல் மரணம் என்பது சரீரத்தில் இருந்து ஆத்மா பிரிந்து செல்லுதல்.

இரண்டாம் மரணம் என்பது ஆத்துமா தேவனை விட்டு நித்தியமாய் பிரிக்கப்படுதல். 

மரணமும் பாதாளமும் அக்கினி கடலிலே தள்ளப்பட்டன. ஜீவபுஸ்தகத்தில் பேர் எழுதப்படாதவனும், அக்கினி கடலிலே தள்ளப்பட்டான். இதுவே இரண்டாம் மரணம். (வெளி: 20:14,15).




Post a Comment

0 Comments