ஜாண் எலியெட் மிஷனரிகளின் வாழ்க்கை வரலாறு

 


மிஷனரிகளின் 

வாழ்க்கை வரலாறு


Biography of Missionaries


 ஜாண் எலியெட்

          1604 - 1690


ஜாண் எலியெட் என்ற தேவ ஊழியரைப்பற்றி அநேகருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. வெறுத்தொதுக்கப் பட்ட ஒரு மக்கள் கூட்டத்திற்கு அமரிக்கை யாக வாழ்ந்து ஆண்டவருக்காக அரிய காரியங்களை அவர்கள் மத்தியில் செய்தவர் இவர். அமெரிக்காவிலுள்ள மசாசுசெட்ஸ் பகுதியிலுள்ள செவ்விந்தியர் நடுவில் மிஷனெரியாகப் பணிசெய்தார்.


 16-ம் நூற்றாண்டில் அமெரிக்காவைக் கண்டு பிடித்து, இங்கிலாந்து தேசத்திலிருந்தும் மற்றும் ஐரோப்பா தேசங்களிலிருந்தும் மக்கள் அங்கு குடியேறின நாட்கள் அவை. அப்பகுதியில் குடியேறிய வெள்ளையர்கள் அங்கிருந்த பூர்வக்குடிகளான செவ்விந்தியர்களை காட்டுமிராண்டிகள் எனவும், நாகரீகம் அறியாதவர்கள் எனவும் கூறி வெறுத்தனர். அவர்களை தங்கள் குடியிருப்புகளிலிருந்து ஒதுக்கியும் வைத்து இருந்தனர். அவர்களுடன் பேசுவது, உறவு வைத்துக் கொள்வதை அருவருப்பாக எண்ணினர். 

ஏன், ஒரு சிலர் அவர்களை பேய்கள் என்று கூட எண்ணினர். வேறு சிலர் வேடிக்கையாக மனித மூளை கொண்ட ஊளையிடும் ஓநாய்கள் என கிண்டலடித்தனர்.


ஆனால் ஜாண் எலியெட்டுக்கோ அந்த செவ்விந்தியர்கள் கடவுளைக் கண்டறிய வேண்டிய 

தேவையிலிருக்கும் ஆத்துமாக்களாகத் தென்பட்டனர். தேவ அன்பினால் கவரப்பட்டவர்களுக்கு 

ஏனையோரின் புறத்தோற்றமோ நாகரீகமற்ற அவர்களது செயல்பாடோ அவர்களோடு ஒன்றரக் கலப்பதற்குத் தடையாகிவிட முடியாதே.


பாவியாகிய என்னை மீட்க பரலோகம்விட்டு தேவன் இந்த உலகிற்கு வந்தார். நானும் இம் மக்களுக்கு அந்த இயேசுவைத் தர எந்த தியாகத்திற்கும் அஞ்சக்கூடாது என்ற எண்ணம் கொண்டார். எனவே 

ஜாண் எலியெட் அந்த செவ்விந்தியர்களை நேசித்து அவர்களுடன் நெருங்கிப் பழகி நேசம் காட்டினார். அந்த நேசத்தின் மூலம் ஆத்ம நேசர் இயேசு கிறிஸ்துவை அந்த செவ்விந்தியர்களுக்கு அறிவிக்கத் தீவிரமாய் முயற்சித்தார். 


1604-ம் ஆண்டு இங்கிலாந்திலுள்ள விட்ஃபோர்டு என்ற இடத்தில் பிறந்த இவர் இங்கிலாந்திலுள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக ஜீசஸ் கல்லூரியில் பயின்றார். தனது பட்ட படிப்புக்கு பின் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். தன்னுடன் ஆசிரியராக அதே பள்ளியில் பணிபுரிந்த தாமஸ் ஹூக்கர் என்பவர் அவ் வேலையை உதறிவிட்டு அமெரிக்காவிற்கு ஊழியத்திற்காக சென்றார். 


தாமஸ் ஹூக்கரின் வாழ்வினால் கவரப்பட்டிருந்த

ஜாண் எலியெட்டும் அவரைப் பின்பற்றி 1631-ம் ஆண்டு அமெரிக்காவிற்கு மிஷனெரியாகச் சென்றார். ஒரு வருடத்திற்குப் பிறகு இவரது நண்பர் ஆனிமம் போர்டும் இவரோடு இணைந்து கொள்ளவே செவ்விந்தியர்கள் மத்தியில் தங்கள் பணியைத் துவக்கினர். 


செவ்விந்தியரான ஜோப் நெசு என்பவர் உதவியுடன் செவ்விந்தியர்களின் மொழியைக் கற்றுத்தேர்ந்தார்.

 2 வருடத்திற்குள் செவ்விந்தியருக்கு அவர்களது தாய் மொழியிலேயே பிரசங்கிக்கும் அளவுக்கு மொழி ஞானம் பெற்றார். அவரது மொழிப் புலமை செவ்விந்தியர்களது தாய் மொழியில் வேதத்தை மொழிபெயர்த்துத் தரும் ஆர்வத்தையும் அவருக்கு ஊட்டியது. முதலில் 10 கற்பனைகள், கர்த்தருடைய ஜெபம் ஆகியவற்றை செவ்விந்தியரின் மொழியில் மொழி பெயர்த்தார்.


இதைக் கண்ட ஏனைய ஆங்கிலேயர்கள் இவரைப் பார்த்து சிரித்தனர். இந்த முட்டாள் இந்தியர்களுக்கு நாகரீக பாஷையான ஆங்கிலத்தை கற்றுக் கொடுப்பதை விட்டு விட்டு அவர்களது மட்டமான பாஷையை நீ படிப்பதும் அதில் வேதத்தை மொழி பெயர்ப்பது வேடிக்கையாக இருக்கிறது என்றனர்.


ஆனால் ஜாண் எலியெட் 

இளக்கரித்துப் போகவில்லை. என் ஆண்டவர் எனது தாய் மொழியில் பேசவேண்டும் நான் எதிர்பார்க்கும்போது இந்த இந்தியர்கள் மட்டும் அப்படி எதிர்பார்ப்பதில் என்ன தவறு என திருப்பிக் கேட்டார். மேலும் தேவன் தன்னை வேதத்தை அவர்கள் தாய்மொழியில் தரும் இந்தப் பணிக்கே அழைத்திருக்கிறார் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொண்டார்.


சார்லஸ் அருவி அருகில் வாழும் இந்தியர் மத்தியில் பணிபுரிய எண்ணி அப்பகுதியை தனது பணிக்களமாக ஏற்படுத்திக் கொண்டார். தங்களது தாய் மொழியில் கடவுளின் அன்பைச் சொல்லும் எலியெட்டின் பிரசங்கம் அநேக செவ்விந்தியரைக் கவர்ந்தது.


ஜாண் எலியெட் பணி மூலம் ஒரு கூட்டமக்கள் ஆண்டவரை ஏற்றுக் கொண்டனர். அந்த மக்களின் வாழ்வில் மாற்றத்தைக் கண்ட

ஏனைய மக்கள் அப்பகுதியைக் 'கிறிஸ்தவ நகரம்' என்று அழைக்கத் தொடங்கினர்.


அந்தப் பகுதியில் வாழ்ந்த மக்கள் சமூக விரோதச்செயல்கள் அனைத்தும் நிறுத்தி 

விட்டு தூய்மையுடனும், ஒற்றுமையுடனும்

வாழத் தொடங்கியதோடு ஜாண் எலியெட் டுக்கு எல்லா காரியத்திலும் கீழ்ப்படிந்து

வாழ்ந்தனர். 


ஆங்கிலேய அரசின் சட்டமும் ஆங்கிலேயரின் கெடுபிடியும் சாதிக்க முடியாத ஒன்றைக் கிறிஸ்துவின் சுவிசேஷம் மூலம் ஜாண் எலியெட் சாதித்துவிட்டார்

ஒரு காலத்தில் மனிதப் பிசாசுகள் என்றும், மனித மூளை கொண்ட ஓநாய்கள் என்றும் ஏனையோரால் அழைக்கப்பட்ட இம்மக்களுக்கு 'ஜெபிக்கும் இந்தியர்கள்' என்ற

பெயர் ஏற்பட்டது.


சார்லஸ் நதியோரம் மக்கள் மலர்ச்சி கண்டு விட்டதைத் தொடர்ந்து நாட்டின் பல பகுதியில் வாழும் இந்தியரை ஆதாயப் படுத்தும் நோக்கோடு அப்பகுதிக்கு நகர்ந்தார் எலியெட். 

முதலில் இவரை விநோதமாகப் பார்த்த அப்பகுதியினர் நாளாக நாளாக அவருடன் நட்பாக பழகத் தொடங்கினர். 


கிறிஸ்துவின் மாதிரியாக வாழ்ந்ததின் மூலம் அம்மக்களின் நெஞ்சில் இடம் பிடித்தார். அப்பகுதியில் வாழ்ந்த 800 பேரும் ஜாண் எலியெட்டைத் தங்கள் தந்தையாக எண்ணி மதிக்கத் தொடங்கினர். 

வேதத்தின் சட்டங்களை அவர்கள் வாழ்க்கையில் கைக்கொள்ளச் செய்து யாவரும் வியக்கும் ஒரு வாழ்க்கையை அவர்களை வாழச் செய்தார். 

மற்ற ஆங்கிலேயர்களால், 

புற ஜாதிகள் வேண்டப்படாதவர்கள்

ஒதுக்கித் தள்ளப்பட்ட செவ்விந்தியர்களை சுவிசேஷத் தால் செதுக்கி சீர்படுத்தி ஒளி வீசும் வைரங்களாக மாற்றி காண்பித்தார் ஜாண் எலியெட். 


ஆவிக்குரிய வாழ்வில்

அவர்கள் உயர 

வழி மட்டுமல்லாமல் வாழ்க்கை

தொழில்களையும் அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தார். விவசாயம் செய்யவும் மர வேலைப்பாடுகள் நேர்த்தியாகச் செய்யவும் வீட்டைச் சுற்றி கல் தூண்களால் வேலி அமைக்கவும் கற்றுக்கொடுத்தார். நாகரீக வாசனையையும், வாழ்க்கைத் தொழிலையும் அவர்களுக்குக் கொடுத்தார். நாகரீக மற்றவர்கள் என்று கருதப்பட்ட நாட்டிக் மக்கள் தாங்களாகவே விவசாயம், 

மர வேலைப்பாடு போன்றவற்றில் ஈடுபட்டார்கள். 


இவரது முக்கிய 

ஜெபங்களில் ஒன்று 

இவர்கள் மத்தியில் பள்ளிகளை ஏராளம் எழுப்பும் ஆண்டவரே” என்பதாகும். அதன் விளைவு செவ்விந்தியர்களுக்கு என ஒரு கல்லூரியும், பள்ளியும் ராக்ஸ்பரி என்ற இடத்தில் தோன்றியது. இந்தியர்களையே பயிற்றுவித்து ஆசிரியராக ஊழியக்காரராக ஏற்படுத்தினார்.

அதோடு தனது பத்து வருட கடின உழைப்பாலும், தனது உதவியாளர் ஜாப்-ன் உதவியாலும் முழு வேதத்தையும் 1659-ம் ஆண்டு மொழிபெயர்த்து முடித்தார். அமெரிக்காவிலுள்ள லண்டன் வேதாகமச் சங்கத்தில் முதல் முதலில் ஜாண் எலியெட் மொழிபெயர்ப்பு 

செய்த செவ்விந்தியருக்

வேதாகமமே அச்சடிக்கப்பட்டது. இந்திய இலக்கண நூல், இந்தியருக்கு முதல் பாட புத்தகம் ஆகிய புத்தகங்களையும் அவர் வெளியிட்டார்.


ஜாண் எலியெட்டின் 50 ஆண்டுகால ஊழியத்தால் 1100 பேர் கிறிஸ்துவின் அன்பினால் கவரப்பட்டிருந்தனர். 

14 கிராமங்கள் மலர்ச்சி கண்டிருந்தது. இரண்டு இடங்களில் ஆலயங்கள் எழுந்திருந்தது. செவ்விந்தியர் மொழியில் வேதாகமம் பிறந்தது. நாகரீகம் தெரியாதவர்கள், மனித 

வர்க்கத்திற்கே லாயக்கற்றவர்கள் என்று சொல்லப்பட்ட செவ்விந்தியருக்கு 

சுவிசேஷ ஒளியை எடுத்துச்சென்று ஏனையோருக்கு நிகராக அவர்களை உயர்த்திவிட்டார் ஜாண் எலியெட். 


'ஜெபிக்கும் மக்கள்' என்றும் 'தேவன் ஆட்சி செய்யும் பூமி' என்றும் பிறர் வியக்கும் வண்ணம் மாற்றத்தை நிகழ்த்தி காண்பித்தார்.


இந்தியாவிலும் இவ்விதம் நாகரீகம் தெரியாதவர்கள் என மனிதர்களால் வெறுக்கப்படும் மக்கள் கூட்டம் ஏராளம் இருக்கிறது. அவர்களது வாழ்வும் ஜாண் எலியெட் போன்றவர்களுக்காக காத்திருக்கிறது.








Post a Comment

0 Comments