பாடுகளின் வாரம்
திங்கட்கிழமை நிகழ்வுகள் = 1-4
பாடுகளின் வாரத்தின் இரண்டாம் நாளான திங்கட்கிழமை, இயேசுவின் அதிகாரத்தையும் தேவாலயத்தின் தூய்மையையும் வெளிப்படுத்தும் இரண்டு மிக முக்கியமான நிகழ்வுகள் நடைபெற்றன. அவற்றின் தொகுப்பு.
1.அத்திமரத்தைச் சபித்தல் (The Cursing of the Fig Tree)
மாற்கு 11:12-14, மத்தேயு 21:18-19
திங்கட்கிழமை அதிகாலையில் இயேசுவும் சீஷர்களும் தங்கியிருந்த பெத்தானியாவை விட்டு மீண்டும் எருசலேமுக்குப் புறப்பட்டார்கள். வழியில் இயேசுவுக்குப் பசி உண்டாயிற்று. தூரத்தில் இலைகள் நிறைந்த ஒரு அத்திமரத்தைக் கண்டு, அதில் ஏதாகிலும் கனி கிடைக்குமா என்று பார்த்தார். ஆனால் அதில் இலைகளையல்லாமல் வேறொன்றும் இல்லை. அப்போது இயேசு அந்த மரத்தைப் பார்த்து: "இதுமுதல் என்றென்றைக்கும் ஒருவனும் உன்னிடத்தில் கனி புசியாதிருக்கக்கடவன்" என்றார்.
பாடம்:இலைகள் (வெளிவேஷ பக்தி) இருந்தும் கனி (உண்மையான மனம் திரும்புதல்) இல்லாத இஸ்ரவேல் ஜனங்களுக்கும், போலி விசுவாசிகளுக்கும் இது ஒரு எச்சரிக்கையாக அமைந்தது.
2.இரண்டாம் முறை தேவாலயத்தைச் சுத்திகரித்தல் (Cleansing of the Temple)
மாற்கு 11:15-19, மத்தேயு 21:12-13, லூக்கா 19:45-48
இயேசு எருசலேமுக்குள் நுழைந்து தேவாலயத்திற்குச் சென்றார். அங்கே வியாபாரம் செய்துகொண்டிருந்தவர்களையும், காசு மாற்றுகிறவர்களையும் கண்டார். அவர்கள் எல்லாரையும் வெளியே துரத்தி, காசுக்காரருடைய பலகைகளையும், புறா விற்கிறவர்களுடைய ஆசனங்களையும் கவிழ்த்துப் போட்டார்.
"என்னுடைய வீடு எல்லா ஜனங்களுக்கும் ஜெபவீடு என்னப்படும் என்று எழுதியிருக்கவில்லையா? நீங்களோ அதைத் கள்ளர் குகையாக்கினீர்கள்" என்று கூறி அவர்களைக் கடிந்துகொண்டார்.
தாக்கம்: இதைக் கேட்ட வேதபாரகரும் பிரதான ஆசாரியரும் அவரைக் கொலை செய்ய வகை தேடினார்கள்; ஆனால் ஜனங்கள் எல்லாரும் அவருடைய போதகத்தைக் குறித்து ஆச்சரியப்பட்டதினால் அவருக்குப் பயந்திருந்தார்கள்.
3.தேவாலயத்தில் அற்புதங்களும் போதனைகளும்
மத்தேயு 21:14-16
தேவாலயத்தில் குருடர்களும் சப்பாணிகளும் அவரிடத்தில் வந்தார்கள்; அவர்களை அவர் சொஸ்தமாக்கினார். தேவாலயத்திலிருந்த பிள்ளைகள் "தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா" என்று ஆர்ப்பரித்ததைக் கண்டு ஆசாரியர்கள் கோபமடைந்தனர். அதற்கு இயேசு: "குழந்தைகள் பாலகருடைய வாயினால் துதி உண்டாகும்படி செய்தீர் என்பதை நீங்கள் ஒருக்காலும் வாசிக்கவில்லையா?" என்று பதிலளித்தார்.
4.பெத்தானியாவுக்குத் திரும்புதல்
மாற்கு 11:19, மத்தேயு 21:17. பொழுது சாய்ந்தபோது, அவர் நகரத்தை விட்டுப் புறப்பட்டுப் பெத்தானியாவுக்குச் சென்று அங்கே தங்கினார்.
திங்கட்கிழமை காலவரிசை அட்டவணை
தோராயமாக…….
✒️அதிகாலை = பெத்தானியாவிலிருந்து எருசலேம் பயணம்; அத்திமரத்தைச் சபித்தல் | மாற்கு 11:12-14
✒️காலை/மதியம்= தேவாலயத்தைச் சுத்திகரித்தல்; வியாபாரிகளை வெளியேற்றுதல் | மத்தேயு 21:12-13
✒️பிற்பகல் =தேவாலயத்தில் சுகமளித்தல் மற்றும் பிள்ளைகளின் துதி | மத் 21:14-16
✒️மாலை/இரவு = எருசலேமை விட்டு மீண்டும் பெத்தானியா திரும்புதல் | மத் 21:17
.jpeg)
No comments:
Post a Comment