பிரதான கட்டளை

 பிரதான கட்டளை


கலிலேயாவிலே



பதினொரு சீஷர்களும், கலிலேயாவிலே இயேசு தங்களுக்குக் குறித்திருந்த மலைக்குப் போனார்கள் 

 (மத் 28:16). 



லூக்காவும் யோவானும் இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்த பின்பு நடைபெற்ற சம்பவங்களை விரிவாக எழுதியிருக்கிறார்கள்.  மத்தேயுவோ இதை சுருக்கமாக கூறியிருக்கிறார்.  இயேசுகிறிஸ்துவின் பதினொரு சீஷர்களும் கலிலேயாவுக்குப் போகிறார்கள். இயேசுகிறிஸ்துவை ஒருமுறை தங்கள் கண்களால் தரிசிக்கவேண்டும் என்பதற்காகவே  இவர்கள் இந்த பிரயாணத்தை மேற்கொள்கிறார்கள். இயேசுவை தரிசிப்பதற்காக எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் பிரயாணம் பண்ணலாம். 


இயேசுகிறிஸ்து தமது சீஷர்களை கலிலேயாவிலுள்ள ஒரு மலைக்கு வந்து தம்மை சந்திக்குமாறு கூறியிருக்கிறார். இவர்கள் கலிலேயாவுக்குப் போகவேண்டும் என்னும் அவசியமில்லை. என்றாலும் இயேசுகிறிஸ்து மரித்து உயிர்த்தெழுந்த பின்பு, கிறிஸ்துவின் கட்டளைக்கு கீழ்ப்படியவேண்டும் என்பதை சீஷர்கள் கற்றுக்கொள்கிறார்கள். கர்த்தருடைய வார்த்தைக்கு விரோதமாக ஒன்றும் கூறாமல் அவர் தங்களுக்கு குறித்திருந்த மலைக்கு போகிறார்கள். இயேசுகிறிஸ்துவோடு ஐக்கியமாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறவர்கள் தங்களுக்கு எந்த ஸ்தலத்தை தேவன் குறித்திருக்கிறாரோ அந்த ஸ்தலத்திற்கு சந்தோஷமாக போவார்கள். 



உயிர்த்தெழுந்த இயேசுகிறிஸ்து தமது சீஷர்களை ரகசியமாக சந்திக்காமல் பொதுவான ஓரிடத்தில் வந்து சந்திக்கிறார். இது  கலிலேயாவிலுள்ள ஒரு மலையாகும். இதற்கு முன்பு இயேசுகிறிஸ்து மறுரூபமான மலையே  இந்த மலை என்று வேதபண்டிதர்களில் சிலர் வியாக்கியானம்பண்ணுகிறார்கள். தாம் உயிர்த்தெழுந்திருக்கும் சத்தியத்தை தம்முடைய 

சீஷர்கள் தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக இயேசுகிறிஸ்து அவர்களை இங்கு வரவழைக்கிறார். 



இயேசுவைக் கண்டு



அங்கே அவர்கள் அவரைக் கண்டு, பணிந்துகொண்டார்கள்; சிலரோ சந்தேகப் பட்டார்கள் (மத் 28:17). 



கலிலேயாவிலே இயேசுகிறிஸ்து தங்களுக்கு குறித்திருந்த மலைக்கு பதினொரு சீஷர்களும் போகிறார்கள். அங்கு அவர்கள்  இயேசுவைக்கண்டு பணிந்து கொள்கிறார்கள்.  இயேசுவைக் கண்டபோது சீஷர்கள் பயபக்தியோடு அவரை துதிக்கிறார்கள். இயேசுகிறிஸ்துவை விசுவாசத்தோடு தரிசிக்கும் அனைவரும் அவரை தொழுதுகொள்வார்கள். 


ஆனால் சிலரோ சந்தேகப்படுகிறார்கள்.  இயேசுகிறிஸ்துவை பணிந்துகொள்ளுகிறவர்களில் சிலர் சந்தேகப்படுகிறார்கள். ஒருவரிடத்தில் உண்மையான விசுவாசம் இருக்கும்போது அவருடைய மனது அங்கும் இங்கும் தடுமாறாது.  அவர் கர்த்தரிடத்தில் ஸ்திரமாக நிலைத்திருப்பார். ஆனால் விசுவாசத்தில் பலவீனமானவர்களோ சந்தேகப்படுவார்கள். எதிலும் உறுதியாக நிலைத்து நிற்கமாட்டார்கள்.  இவர்கள் என்ன செய்வார்கள் என்று யாராலும் நிதானிக்க முடியாது. இயேசுகிறிஸ்துவின் சீஷர்களில் சிலர் அவரை விசுவாசிப்பதற்கு முன்பாக சந்தேகப்படுகிறார்கள். தம்மைப்பற்றி சந்தேகப்படும் சீஷர்களுக்கு தாம் உயிர்த்தெழுந்ததை பிரத்தியட்சமாக வெளிப்படுத்தி அவர்களுடைய அவிசுவாசத்தை  இயேசுகிறிஸ்து நீக்கிப்போடுகிறார். மெய்யான அன்பு இருக்குமிடத்தில் மெய்யான விசுவாசம் இருக்கும்.



சகல அதிகாரமும் 



அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது 

(மத் 28:18).



இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களுக்கு  சமீபத்தில் வந்து அவர்களிடம் பேசுகிறார். இயேசு எப்போதுமே அவர்களுக்கு தூரமாக விலகி நிற்பதில்லை. தமது உயிர்த்தெழுதலைக் குறித்து சந்தேகமில்லாமல் நிரூபிப்பதற்காக இயேசு சீஷர்களுக்கு சமீபத்தில் வருகிறார். இயேசுவை தங்களுக்கு அருகாமையில் கண்டபோது சீஷர்களின் அவிசுவாசம் நீங்கிப்போயிற்று. அவர்களுடைய விசுவாசம்  பெலப்படுகிறது. இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களிடம் சிநேகிதரோடு பேசுவதுபோல அந்நியோநியமாக பேசுகிறார்.



இந்த உலகத்தில் தாம் ஸ்தாபிக்கப்போகும்  தமது ராஜ்யத்தைப்பற்றி இயேசு சீஷர்களுக்கு வெளிப்படுத்துகிறார். இந்த ராஜ்யத்தை ஸ்தாபிப்பதற்கு கிறிஸ்துவின் சீஷர்கள் ஸ்தானிகர்களாக உலகம் முழுவதும் புறப்பட்டுச் செல்லவேண்டும். தம்முடைய அதிகாரத்தையே இயேசுகிறிஸ்து தமது சீஷர்களுக்கு கொடுத்து  அவர்களை அனுப்புகிறார். 


இயேசுகிறிஸ்துவுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் அதிகாரம் பிதாவினால் கொடுக்கப்பட்டிருக்கும் அதிகாரமாகும். வானத்திலும் பூமியிலும் பிதாவாகிய தேவன் சகல அதிகாரத்தையும் குமாரனாகிய இயேசுகிறிஸ்துவுக்கு கொடுத்திருக்கிறார். தமக்கு கொடுக்கப்பட்டிருக்கும் இந்த அதிகாரத்தை இயேசுகிறிஸ்து தமது சீஷர்களுக்கு கொடுக்கிறார். தேவனுடைய காணியாட்சியில் இயேசு பிதாவுக்கும் மனுஷருக்கும் இடையில் மத்தியஸ்தராக கிரியை செய்கிறார். 



இயேசுகிறிஸ்துவிடம் சகல அதிகாரமுமுள்ளது. சர்வ அதிகாரமுள்ள பிதாவாகிய தேவன் இந்த அதிகாரத்தை இயேசுகிறிஸ்துவுக்கு கொடுத்திருக்கிறார். பிதாவாகிய தேவனும் குமாரனாகிய தேவனும்  தங்கள் வல்லமையில் சமமாக இருக்கிறார்கள்.  ஆகையினால் இயேசுகிறிஸ்துவிடத்தில் இப்போதுள்ள சகல அதிகாரம் அவரிடத்தில் ஆதியிலேயே இருந்தது. ஆயினும் இயேசுகிறிஸ்து இப்போது மத்தியஸ்தராக இருக்கிறார். இயேசுகிறிஸ்துவிடம் தேவத்துவமும்  மனுஷத்துவமும் சேர்ந்திருக்கிறது. ஆகையினால் இப்போது சகல அதிகாரமும் பிதாவினால் அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. மாம்சமான யாவர் மேலும் பிதாவாகிய தேவன் குமாரனாகிய கிறிஸ்துவுக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறார் (மத் 17:2). இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்தபோது  இந்த அதிகாரம் அவர்மீது பிரத்தியட்சமாக வந்திறங்கியிருக்கிறது. 



இயேசுகிறிஸ்துவுக்கு வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் கொடுக்கப்பட்டிருக்கிறது. வானமும் பூமியும் என்பது சர்வலோகத்தையும் குறிக்கும் வார்த்தையாகும். இயேசுகிறிஸ்து எல்லாவற்றிற்கும் கர்த்தராக இருக்கிறார். அவர் கர்த்தாதி கர்த்தா பரலோகத்தில் இயேசுவுக்கு எல்லா அதிகாரமுமுள்ளது. தேவதூதர்கள்மீது இயேசு சர்வ அதிகாரமுள்ளவர். பிதாவோடு பரிந்து பேசும் அதிகாரம் குமாரனிடமுள்ளது. 



இயேசுகிறிஸ்துவுக்கு பூமியிலும் சகல அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. எல்லா மனுஷர் மேலும் இயேசுவுக்கு அதிகாரமுள்ளது.  ஒப்புரவாகும் ஊழியத்தின் மூலமாக இயேசுகிறிஸ்து தமது அதிகாரத்தை வெளிப்படுத்துகிறார். எல்லா ஆத்துமாக்களும் இயேசுவுக்கே உரியது. அதுபோல எல்லா இருதயங்களும் இயேசுவுக்கே உரியது. எல்லா முழங்கால்களும் இயேசுவுக்கு முன்பாக முடங்கும். எல்லா நாவும் இயேசுகிறிஸ்துவை கர்த்தர் என்று அறிக்கையிடும். 



இயேசுகிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டபோது அவரை பின்பற்றியவர்களில் பலர் அவமானமடைந்தார்கள், பயப்பட்டார்கள்.  இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்ததினால் சிலுவையின் தண்டனை இப்போது நீக்கப்பட்டுவிட்டது.  சிலுவையில் அறையப்பட்ட இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்துவிட்டார். மகிமையடைந்திருக்கிறார். இனிமேல் சிலுவையின் அவமானம் அவர்மீது படாது. உயிர்த்தெழுந்த இயேசுகிறிஸ்துவை சீஷர்கள் தரிசிப்பதினால் அவர்களுடைய பயம் அகன்றுபோகும். இயேசுவை அவர்கள் மகிமைப்படுத்துவார்கள். 



பிதா குமாரனுக்கு சகல அதிகாரத்தையும் கொடுத்திருக்கிறார். குமாரன் மனுக்குலத்து மீட்பின் திட்டத்தை நிறைவேற்றியிருக்கிறார். இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் மனுஷனாக வருவதற்கு முன்பாக அவர் பரலோகத்தில் பிதாவோடும், பரிசுத்த ஆவியானவரோடும் சம அந்தஸ்தில் இருந்தார். அவர் பூமியில் மனுஷனாக இருந்தபோதோ, மனுஷனுக்குரிய வரையறைகள் அவருக்கும் இருந்தது.  இப்பொழுது குமாரனுடைய மகிமை மறுபடியும் விளங்குகிறது.  



நீங்கள் புறப்பட்டுப்போய் 



ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, 

(மத் 28:19).



இயேசுகிறிஸ்து தமது சீஷர்களை புறப்பட்டுப்போகுமாறு கூறி அவர்களை அனுப்புகிறார். இந்த கட்டளை முதலாவதாக அப்போஸ்தலர்களுக்கே கொடுக்கப்படுகிறது. இவர்கள் சபைக்கு அஸ்திபாரம் போட்டவர்கள்.  இயேசுகிறிஸ்துவின் வார்த்தை கட்டளை மாத்திரமல்ல, ஒரு தகப்பன் தன் மகனிடம் ""மகனே வேலைக்குப் போ'' என்று அன்போடு பொறுப்பை ஒப்படைப்பதாகவும் இருக்கிறது. ""பயப்படவேண்டாம், உன்னை அனுப்புகிற தேவன் நானல்லவா'' என்று ஆறுதலாகவும் உற்சாகமாவும் கூறுவதாகவும் இருக்கிறது. இயேசுகிறிஸ்துவின் சீஷர்கள் புறப்பட்டுப் போகவேண்டும். இரட்சிப்பின் சுவிசேஷத்தை எல்லோருக்கும் அறிவிக்கவேண்டும். 


கழுகு தன் கூட்டிலுள்ள குஞ்சுகளை வெளியே அனுப்புவதற்காக தன் கூட்டை கலைப்பதுபோல (உபா 32:11)  இயேசுகிறிஸ்து  தமது சீஷர்களை அனுப்புகிறார். உலகம் முழுவதும் போகுமாறு அனுப்புகிறார். 



இயேசுகிறிஸ்துவின் பிரதான கட்டளை அவரை விசுவாசிக்கிற எல்லா விசுவாசிகளுக்குமே கொடுக்கப்பட்டிருக்கிறது.  ஒவ்வொரு விசுவாசியும் தங்களுக்கு அறிவிக்கப்பட்ட சுவிசேஷத்தை மற்றவர்களுக்கு அறிவிக்கவேண்டும். இந்த உலகத்தின் முடிவு பரியந்தம் சுவிசேஷம் அறிவிக்கப்படும். இயேசுகிறிஸ்து பரமேறிப்போனபோது நமக்கு அப்போஸ்தலரையும், தீர்க்கதரிசிகளையும், சுவிசேஷகரையும், மேய்ப்பரையும், போதகரையும் ஏற்படுத்தியிருக்கிறார் (எபே 4:11). 


இயேசுகிறிஸ்து தமது சீஷர்களை சகல ஜாதிகளிடமும் அனுப்புகிறார். இது கிறிஸ்துவின் சித்தம். ஆரம்பத்தில் யூதரோடு மாத்திரம்   தேவன் தம்முடைய உடன்படிக்கையை ஏற்படுத்தினார். ஆனால் அந்த வரையறை இப்போது அகற்றப்பட்டு விட்டது. ஆரம்பத்தில் அப்போஸ்தலர்களை இயேசுகிறிஸ்து அனுப்பியபோது அவர்கள் புறஜாதியாரிடத்தில் போவதற்கு தடைபண்ணப்பட்டிருந்தார்கள். ஆனால் இப்போதோ இயேசுகிறிஸ்து அவர்களை  சகல ஜாதிகளுக்கும் அனுப்புகிறார். 



இயேசுகிறிஸ்துவின் மூலமாக வரும் இரட்சிப்பு எல்லோருக்கும் உரியது. தங்களுடைய அவிசுவாசத்தினால் மாத்திரமே ஜனங்கள் தங்களுடைய இரட்சிப்பை இழந்துபோவார்கள்.  இயேசுகிறிஸ்துவை இரட்சகர் என்று விசுவாசிக்கும் எல்லோருக்குமே இரட்சிப்பின் சிலாக்கியம் கொடுக்கப்படும். சீஷர்கள் சகல ஜாதிகளிடமும் போய் இயேசுகிறிஸ்துவின் மூலமாக வரும் பொதுவான இரட்சிப்பை பிரசங்கம்பண்ண வேண்டும். 



கர்த்தருடைய சீஷர்கள் சகல ஜாதிகளையும் சீஷராக்க வேண்டும். அப்போது  கிறிஸ்தவ மார்க்கம் ஒவ்வொரு தேசத்திலும் தேசிய மார்க்கமாகும். இந்த உலகத்தின் ராஜ்யங்கள் கிறிஸ்துவின் ராஜ்யங்களாகும். உலகத்தின் ராஜாக்கள் சபைகளை பராமரிக்கும்  ராஜாக்களாக இருப்பார்கள். 



இயேசுகிறிஸ்துவின் சீஷர்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கவேண்டும். உலகத்தின் எல்லா இடங்களிலும் சீஷர்கள் இயேசுகிறிஸ்துவின் உபதேசத்தை அறிவிக்கவேண்டும். கிறிஸ்தவ மார்க்கத்தை ஸ்தாபிக்கவேண்டும். இயேசுகிறிஸ்துவின் பிரதான கட்டளைக்கு கீழ்ப்படிந்து ஊழியம் செய்வது ஒரு மகிமையான ஊழியமாகும். ஒருவன் உலகத்தையே ஜெயிக்கும் வீரனாக இருந்தாலும், அவனைவிட கிறிஸ்துவுக்காக ஊழியம் செய்கிறவனே உத்தமன், மேன்மையானவன். தேசங்களை ஜெயிக்கிறவர்கள் அந்த தேசத்தின் ஜனங்களை துன்புறுத்துகிறார்கள். ஆனால் கிறிஸ்துவுக்காக  ஜனங்களை ஆதாயம்பண்ணுகிறவர்களோ அவர்களை மெய்யான சந்தோஷத்தினால் நிரப்புகிறார்கள்.


கிறிஸ்துவின் சீஷர்கள் புறப்பட்டுப்போய்  சகல ஜாதிகளையும் சீஷராக்கவேண்டும். அதன்பின்பு அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கவேண்டும். சீஷர்கள் எல்லா ஜாதியாரிடத்திலும் புறப்பட்டுப்போய் அவர்களுக்கு  சுவிசேஷத்தை அறிவிக்கவேண்டும். அவர்கள் மத்தியில் இயேசுவின் நாமத்தினால் அற்புதங்களை செய்யவேண்டும்.  இயேசுகிறிஸ்துவிடம்  வருமாறு  அவர்களை அழைக்கவேண்டும். இயேசுகிறிஸ்துவிடம் வரும் பெரியவர்களிடம் தங்கள் பிள்ளைகளையும் அழைத்து வருமாறு கூறவேண்டும். அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து அவர்களை சபையில் அங்கத்தினர்களாக்க வேண்டும். சபையில் விசுவாசிகளின் ஆவிக்குரிய வளர்ச்சிக்கு ஆவிக்குரிய போஜனம் கொடுக்கப்படும். 



விசுவாசிகளுக்கு பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே ஞானஸ்நானம் கொடுக்கவேண்டும். தேவனுடைய நாமத்தினால்  ஞானஸ்நானம் கொடுக்கும்போது, இந்த அதிகாரம் மனுஷருடைய அதிகாரமாகயிராமல், வானத்திலிருந்து வந்திருக்கும் தேவனுடைய அதிகாரமாக இருக்கும். கர்த்தருடைய ஊழியக்காரர்கள் தங்களுடைய சொந்த அதிகாரத்தினால் ஊழியம் செய்யக்கூடாது. தேவனுடைய நாமத்தினாலும், அவருடைய அதிகாரத்தினாலும் ஊழியம் செய்யவேண்டும். 



சீஷர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கும்போது பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தை பயன்படுத்தவேண்டும். ஒவ்வொரு காரியமும் ஜெபத்தினால் பரிசுத்தமாக்கப்படுவதுபோல ஞானஸ்நானமும்  ஜெபத்தினால் பரிசுத்தமாக்கப்படுகிறது. 



இயேசுகிறிஸ்துவை தன்னுடைய இரட்சகராக ஏற்றுக்கொண்டவருக்கு பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திற்குள்  ஞானஸ்நானம் கொடுக்கவேண்டும். இப்படிப்பட்ட ஞானஸ்நானத்தைப் பெற்றுக்கொள்ளுகிறவர்  வேதவாக்கியத்தில் பிதா குமாரன் பரிசுத்த ஆவியைப்பற்றி வெளிப்படுத்தப்பட்டிருக்கும் தெய்வீக வெளிப்பாடுகளை அங்கீகரிக்கிறார். ஞானஸ்நானத்தின் மூலமாக விசுவாசி பிதா குமாரன் பரிசுத்த ஆவியோடு உடன்படிக்கையில் இணைக்கப்படுகிறார். 



ஞானஸ்நானம் ஓர் சபையின் ஒழுங்கு. ஞானஸ்நானத்தின் மூலமாக விசுவாசி தான் பாவத்திற்கு மரித்து கிறிஸ்து இயேசுவுக்குள் பிழைத்திருப்பதை அறிக்கை செய்கிறார். ஞானஸ்நானத்தின் மூலமாக விசுவாசி இந்த உலகத்தையும் தன் மாம்சத்தையும் சிலுவையில் அறைகிறார். தன்னுடைய இருதயத்தில் கிறிஸ்துவுக்கு இடம் கொடுத்து அவருடைய ஆளுகைக்குட்படுகிறார்.  



ஞானஸ்நானத்தின் மூலமாக விசுவாசி தன்னை தேவனிடம் முழுமையாக ஒப்புக்கொடுக்கிறார். தன்னுடைய ஆவி ஆத்துமா சரீரத்தை தேவனுக்கு ஒப்புக்கொடுத்து, அவற்றை தேவனுடைய சித்தத்தின் பிரகாரம் ஆளுகை செய்வதற்கும் ஒப்புக்கொடுக்கிறார். ஞானஸ்நானம் பெறும் விசுவாசி தேவனுடைய ஆளுகையிலும், அவருடைய பராமரிப்பிலும் சந்தோஷமடைகிறார்.  ஞானஸ்நானத்தின் மூலமாக விசுவாசி கிறிஸ்துவுக்கு சொந்தமானவராகிறார்.


நாம் ஞானஸ்நானம் கொடுக்கும்போது  பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே ஞானஸ்நானம் கொடுக்கவேண்டும். இந்த முறையில் ஞானஸ்நானம் கொடுக்கும்போது தேவனை நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின்  பிதாவானவராக அங்கீகரிக்கிறோம். அதேவேளையில் தேவனை நமது பிதாவாகவும் அங்கீகரிக்கிறோம். அவர் நம்முடைய சிருஷ்டிகர், நம்மை பாதுகாப்பவர், நம்மை பராமரிப்பவர். அப்படிப்பட்ட பிதவாகிய தேவன் நம்மை ஆளுகை செய்வதற்கு ஒப்புக்கொடுக்கிறோம். பிதாவாகிய தேவன் தமது பிரமாணத்தினால் நம்மை ஆளுகை செய்வார். அப்போது நமக்கு நன்மை உண்டாகும்.



நாம் ஞானஸ்நானம் கொடுக்கும்போது  குமாரனுடைய நாமத்தையும் பயன்படுத்துகிறோம். இயேசுகிறிஸ்துவே தேவனுடைய ஒரே பேறான  குமாரனாக இருக்கிறார். ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளும்போது நமது ஆவிக்குரிய மனக்கண்கள் திறக்கப்படுகிறது.  பேதுரு இயேசுகிறிஸ்துவை ""நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து'' என்று அறிக்கை செய்தான் (மத் 16:16). ஞானஸ்நானம் பெறும்போது நம்முடைய ஆவிக்குரிய கண்கள் திறக்கப்பட்டு நாமும் இயேசுகிறிஸ்துவை ஜீவனுள்ள தேவனுடைய குமாரனென்று அறிக்கை செய்வோம். 



தோமா இயேசுவை ""என் ஆண்டவரே, என் தேவனே'' என்று அன்போடு கூறினான்

 (யோவா 20:28). நாமும் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளும்போது கிறிஸ்துவின்மீது நாம் வைத்திருக்கும் அன்பு பொங்கி வழியும். இயேசுகிறிஸ்து நமது தீர்க்கதரிசியாகவும், ஆசாரியராகவும், ராஜாவாகவும் இருப்பார்.  நமக்கு கற்றுக்கொடுக்கவும், நம்மை இரட்சிக்கவும், நம்மை ஆளுகை செய்யவும்   நாம் நம்மை இயேசுவினிடத்தில் ஒப்புக்கொடுக்கவேண்டும். 


நாம் ஞானஸ்நானம் கொடுக்கும்போது பரிசுத்த ஆவியின் நாமத்தையும் பயன்படுத்துகிறோம். பரிசுத்த ஆவியானவர் நம்மை பரிசுத்தப்படுத்துகிறவர், நமக்கு உபதேசிக்கிறவர், நம்மை வழிநடத்துகிறவர், நம்முடைய தேற்றரவாளர். ஒரு விசுவாசிக்கு பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே ஞானஸ்நானம் கொடுக்கும்போது அதற்கு இதைப்போன்ற ஆவிக்குரிய அர்த்தங்கள் உள்ளன. இதையெல்லாம் புரிந்துகொண்டு ஞானஸ்நானம் பெற்று ஆவிக்குரிய ஜீவியத்தில் நாம் வளர்ச்சி பெறவேண்டும். 



பிரதான கற்பனை



""நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்'' 



    1. புறப்பட்டுப்போங்கள் - எல்லா விசுவாசிகளுக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் கட்டளை. பிரசங்கியார்களுக்கு மட்டும் என்று இதை வரையறுக்கக்கூடாது. இரட்சிப்பின் அழைப்பு எல்லோருக்கும் பொதுவானது. அதுபோலவே கர்த்தருக்கு ஊழியம் செய்ய வேண்டும் என்னும் அழைப்பும், எல்லா விசுவாசிகளுக்கும் பொதுவானது. தேவன் நமக்கு சகல அதிகாரத்தையும் கொடுக்கிறார். அவர் நம்மோடு கூடவே இருப்பார்.


    2. சீஷராக்குங்கள்

இந்த வாக்கியம் மத் 13:52; மத் 27:57; மத் 28:19  அப் 14:21 ஆகிய வசனங்களில் மட்டுமே வருகிறது.   


    3. எல்லா சீஷர்களுக்கும் ஞானஸ்நானம் கொடுங்கள் 

(மத் 3:6,அப் 8:38)


    4. உபதேசம் பண்ணுங்கள் - விசுவாசிகளைச் சீஷர்களாக்கிய பின்பு அவர்களுக்கு உபதேசம் பண்ண வேண்டும். இயேசு கிறிஸ்துவின் கற்பனைகள் எல்லாவற்றையும் விசுவாசிகள் கைக்கொள்ளுமாறு அவர்களுக்கு உபதேசம் பண்ண வேண்டும்.


 பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே  என்னும் வாக்கியத்திற்கு  பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் அதிகாரத்தினால் என்று பொருள். இயேசுவின் அதிகாரத்தினால் மட்டுமல்ல, திரித்துவத்தில் இடம்பெற்றிருக்கிற பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவரின் அதிகாரத்தினால் நாம் ஞானஸ்நானங் கொடுக்க வேண்டும். இயேசு கிறிஸ்து தம்மையும், பிதாவையும் பரிசுத்த ஆவியானவரையும் அங்கீகரிக்குமாறு நமக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறார். 

அப் 2:38;அப் 8:16; அப் 10:48;

 அப் 19:5 ஆகிய வசனங்களைப்  புரிந்து கொள்வதற்கு இது உதவி புரியும். ஞானஸ்நானம் கொடுப்பதற்கு இயேசு கிறிஸ்து நமக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறார் என்றாலும் பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவரின் நாமத்தினாலே ஞானஸ்நானம் கொடுக்குமாறு நமக்கு கட்டளையிட்டிருக்கிறார்.



""பிதா குமாரன் பரிசுத்த ஆவி'' என்னும் இந்த வாக்கியம் ஏதோ ஒரு பிதாவையோ ஏதோ ஒரு குமாரனையோ ஏதோ ஒரு பரிசுத்த ஆவியானவரையோ குறிக்காது. இது தெளிவாக இயேசு கிறிஸ்துவின் பிதாவானவரையும், அந்தப் பிதாவானவரின் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவையும் திரித்துவத்தில் மூன்றாம் நபராக இடம் பெற்றிருக்கும் பரிசுத்த ஆவியானவரையுமே குறிக்கும்.



உபதேசம்பண்ணுங்கள் 



நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென் (மத் 28:20).   



இயேசுகிறிஸ்து தமது சீஷர்களுக்கு பல காரியங்களை கட்டளையிட்டிருக்கிறார். இயேசுகிறிஸ்து கட்டளையிட்டிருக்கும் காரியங்களையெல்லாம் கைக்கொள்ளும்படி ஞானஸ்நானம் பெறுகிறவர்களுக்கு  உபதேசம்பண்ண வேண்டும்.  ஞானஸ்நானம் பெற்றுக்கொண்ட ஒவ்வொருவரும் இயேசுகிறிஸ்துவின் கட்டளைகளை கைக்கொள்ளவேண்டும். மற்றவர்களுக்கு நாம் ஞானஸ்நானம் கொடுக்கும்போது, இயேசுகிறிஸ்து கொடுத்துள்ள கட்டளைகளை  அவர்களுக்கும் எடுத்துக்கூறி, அவற்றை அவர்கள் கைக்கொள்ளுமாறு அவர்களுக்கு உபதேசம்பண்ணவேண்டும்.



இயேசுகிறிஸ்து கட்டளையிட்டிருக்கும் பிரமாணங்களை நாம் கைக்கொள்ளவேண்டும்.  கர்த்தருடைய கற்பனைகளுக்கு நாம் கீழ்ப்படிந்தால்தான் அவற்றை நமது ஜீவியத்தில்  கைக்கொள்ளமுடியும். இயேசுகிறிஸ்து கட்டளையிட்ட யாவையும் நாம் கைக்கொள்ளவேண்டும். நமக்கு பிடித்ததை கடைப்பிடித்து, நமக்கு பிடிக்காததை கடைப்பிடிக்காமல் அலட்சியம்பண்ணிவிடக் கூடாது. இயேசுகிறிஸ்துவின் வார்த்தைகள் அனைத்திற்கும் நாம் முக்கியத்துவம் தரவேண்டும். இயேசுகிறிஸ்துவின் கட்டளையை  அப்படியே கைக்கொள்ளவேண்டும். அவருடைய கட்டளையோடு எதையாவது கூட்டவோ அல்லது குறைக்கவோ கூடாது. 



இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரர்கள் புதிய விசுவாசிகளுக்கு ஆசிரியர்களைப்போல பணிபுரியவேண்டும். கிறிஸ்துவின் கட்டளைகள்  ஒவ்வொன்றையும் புதிய விசுவாசிகளுக்கு எடுத்துக்கூறி, அவற்றை கடைப்பிடிக்குமாறு அவர்களை வழிநடத்தவேண்டும். கிறிஸ்துவின் கட்டளைகளை நாமும் கடைப்பிடிக்கவேண்டும்.   கிறிஸ்துவைப்பற்றிய அறிவில் ஒவ்வொரு விசுவாசியும் வளர்ச்சி பெறுவதற்கு அவர்களை வழிநடத்தவேண்டும். இயேசுகிறிஸ்துவுக்காக நாம் இந்த ஊழியத்தை செய்யும்போது நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து உலகத்தின் முடிவு பரியந்தம், சகல நாட்களிலும்   நம்முடனேகூட இருக்கிறார். 



இயேசுகிறிஸ்து ""நான் உங்களுடனேகூட  இருப்பேன்'' என்று கூறாமல், ""நான் உங்களுடனேகூட 

இருக்கிறேன்'' என்று வாக்குப்பண்ணியிருக்கிறார். இயேசுகிறிஸ்து இப்போது தமது சீஷர்களைவிட்டு பரமேறிப்போகப்போகிறார். இயேசுகிறிஸ்துவின்  பிரத்தியட்சமான சரீர பிரகாரமான பிரசன்னம் அவர்களைவிட்டு கடந்துபோகப்போகிறது. இதனால் சீஷர்களுக்கு வருத்தம் உண்டாகும்.  இயேசுகிறிஸ்து சரீரப்பிரகாரமாக அவர்களோடே  இல்லையென்றாலும், அவர்களோடு ஆவிக்குரிய பிரகாரமாக இருப்பதாக வாக்குப்பண்ணுகிறார். 


""நான் உங்களுடனேகூட இருக்கிறேன்''  என்னும் வாக்கியத்திற்கு ""என்னுடைய ஆவி உங்களோடு கூடயிருக்கிறது'' என்று பொருள்.  ""தேற்றரவாளன் உங்களிடத்தில் தங்கியிருக்கிறார்''  (யோவா 16:7) என்று பொருள்படுமாறு இயேசுகிறிஸ்து இங்கே  கூறுகிறார். 



இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களோடுகூட இருக்கிறார். அவர் அவர்களுக்கு விரோதமாக இருக்கவில்லை. இயேசுகிறிஸ்து அவர்களைவிட்டு பிரிந்துபோய் விடவில்லை. எப்போதும் அவர்களோடுகூடவே இருக்கிறார். இயேசுகிறிஸ்துவின் ஆவி நம்மோடுகூடவே இருக்கிறது. தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும் ஆபத்துக்காலத்தில் அநுகூலமான  துணையுமானவர் (சங் 46:1). 



இந்த உலகத்தில் தம்முடைய ராஜ்யத்தை ஸ்தாபிப்பதற்காக இயேசுகிறிஸ்து தமது சீஷர்களை அனுப்புகிறார். அவர்கள் போகும்போது தனியாக போவதில்லை. இயேசுகிறிஸ்துவின் பிரசன்னம் அவர்களோடு கூட இருக்கிறது என்னும் வாக்குத்தத்தத்தோடு  புறப்பட்டுப்போகிறார்கள். இயேசுகிறிஸ்துவின் கட்டளைக்கு கீழ்ப்படிந்து சீஷர்கள் புறப்பட்டுப்போகும்போது அவர்களுக்கு சில கஷ்டங்களும் நஷ்டங்களும் வரலாம். 



கர்த்தருடைய ஊழியக்காரர்களுக்கு கஷ்டங்கள் வரும்போது அவற்றை தாங்கிக்கொள்வதற்கு இயேசுகிறிஸ்துவின் பிரசன்னம் நம்மோடுகூட இருக்கிறது.  நம்முடைய எல்லா ஊழியங்களிலும், நம்முடைய எல்லா பாடுகளிலும் நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து நம்மோடுகூடவே இருக்கிறார். நம்முடைய வழக்குகளை பிதாவாகிய தேவனிடத்தில் நமக்காக பரிந்து பேசுகிறார்.



நாம் சகலஜாதிகளையும் சீஷராக்கும் ஊழியத்தை செய்கிறோம். இந்த ஊழியம் ஆற்றலுள்ளதாகவும், ஜெயமுள்ளதாகவும் இருப்பதற்காக இயேசுகிறிஸ்து நம்மோடுகூடவே இருக்கிறார். இயேசுகிறிஸ்து சிலுவையில் தொங்கி தமது இரத்தத்தை சிந்தினார் என்று, கிறிஸ்துவைப்பற்றி பரிதாபமாக பேசி ஜனங்களை  கிறிஸ்துவின் பக்கமாக அழைத்துவரக்கூடாது.  அவர் நமக்காக தமது ஜீவனை சிலுவையில் ஒப்புக்கொடுத்தவர். தமது வல்லமையினால் இயேசுகிறிஸ்து மரணத்திலிருந்து உயிரோடு எழுந்திருக்கிறார். நாம் மரணத்தைவென்ற ஜெயகிறிஸ்துவை ஜனங்களுக்கு அறிவிக்கவேண்டும். 



இயேசுகிறிஸ்துவின் பிரசன்னம் உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நம்மோடுகூட இருக்கும். ஓய்வுநாட்களிலும், வார நாட்களிலும், விடுமுறை நாட்களிலும், கோடைகாலத்திலும், மழைகாலத்திலும் கிறிஸ்துவின் பிரசன்னம் நம்மோடுகூட இருக்கும். இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்த பின்பு, பரமேறிப்போவதற்கு  முன்பாக அவர் தம்முடைய சீஷர்களுக்கு அவ்வப்போது தரிசனம் கொடுத்தார். அவர் பரமேறிப்போனபின்போ, அவருடைய ஆவிக்குரிய பிரசன்னம் தேவப் பிள்ளைகளோடு சகல நாட்களிலும்கூட இருக்கும். 



இஸ்ரவேலின் தேவன் சில சமயங்களில்  தம்மை மறைத்துக்கொண்டிருக்கிற தேவனாக இருக்கிறார் 

(ஏசா 45:15). அவர் தம்மை மறைத்துக்கொண்டாலும் ஒருபோதும் அவர் இல்லாமல் ஒழிந்துபோய்விடுவதில்லை. சில சமயங்களில் அவர் காரிருளில் நமக்கு அருகாமையில் இருந்தாலும், ஒருபோதும் அவர்  நம்மைவிட்டு தூர விலகிப்போய்விடுவதில்லை.  



உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் இயேசுகிறிஸ்து நம்மோடுகூட இருக்கிறார். கிறிஸ்துவின் பிரசன்னம் அவருடைய ஊழியக்காரர்களோடு எப்போதும் கூட இருப்பது நமக்கு கிடைத்திருக்கும் சிலாக்கியம். இயேசுகிறிஸ்துவின் சீஷர்கள் அவருடைய கட்டளைக்கு கீழ்ப்படிந்து உலகம் முழுவதும் புறப்பட்டுப் போகிறார்கள். தங்கள் வாயின் வார்த்தைகளினாலும், தாங்கள் எழுதிய நிருபத்தின் எழுத்துக்களினாலும் அவர்கள் கர்த்தருடைய ஊழியத்தை செய்தார்கள். புதிய ஏற்பாட்டிலுள்ள நிருபங்களை தேவனுடைய தெய்வீக வல்லமை ஆளுகை செய்கிறது. நிருபங்கள் அழிந்துபோகாமல் இந்நாள் வரையிலும் பாதுகாக்கப்பட்டிருப்பது கர்த்தருடைய கிருபையே. தேவனுடைய வல்லமையும், அவருடைய வாக்குத்தத்தமான ""உலகத்தின் முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் உங்களுடனே கூடயிருக்கிறேன்'' என்னும் வார்த்தையுமே பரிசுத்த வேதாகமத்தை இந்நாள் வரையிலும் பாதுகாத்து வந்திருக்கிறது. 



இயேசுகிறிஸ்து தமது சீஷர்களை ஊழியத்திற்கு அனுப்பி அவர்களோடுகூடவே இருந்தார். அதுபோல தற்காலம் வரையிலும் கர்த்தருடைய ஊழியத்தை செய்கிற எல்லோரோடும் இயேசுகிறிஸ்துவின் பிரசன்னம்  கூடவேயிருக்கிறது.  யாரெல்லாம் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்தஆவியின் நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து 

ஊழியம் செய்கிறார்களோ அவர்களுடனேகூட இயேசுகிறிஸ்து உலகத்தின் முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் இருக்கிறார். இயேசுகிறிஸ்து  நம்மைவிட்டு விலகுவதுமில்லை. நம்மை கைவிடுவதுமில்லை. அவர் நம்மை அனுப்பினாலும் அவர் நம்மோடுகூடவே இருக்கிறார். ""இதோ நான் சீக்கிரமாய் வருகிறேன்'' (வெளி 22:20) என்று இயேசுகிறிஸ்து கூறிய வாக்குத்தத்தம் நம் எல்லோருக்குமே சந்தோஷத்தையும் சமாதானத்தையும் தருகிறது. 



இயேசுகிறிஸ்து தமது கோபத்தினால் நம்மைவிட்டு கடந்து பரமேறிப்போகவில்லை. அவர் தமது பூரண அன்பினாலே பரமேறிப்போயிருக்கிறார். நாம் அவரோடு ஐக்கியமாக இருக்கவேண்டும் என்பதும், அவருடைய வருகைக்கு ஆயத்தமாக இருக்கவேண்டு மென்பதும் நம்மைக்குறித்து இயேசுகிறிஸ்துவின் சித்தமாகும். 



இயேசுகிறிஸ்து தமது சீஷர்களிடம் இவையெல்லாவற்றையும் கூறி முடித்தபின்பு ""ஆமென்'' என்று கூறுகிறார். ஆமென் என்னும் வார்த்தை புஸ்தகத்தின் முடிவில் எழுதப்படும் பாரம்பரிய வார்த்தையல்ல. ஆமென் என்னும் வார்த்தையை நாம்

 சாதாரணமாக நினைத்து  புறக்கணித்துவிடக்கூடாது. தம்முடைய வார்த்தையை இயேசுகிறிஸ்து உறுதிபண்ணும் விதமாக ""ஆமென்'' என்று கூறுகிறார். ""நான் உங்களுடனே கூடயிருக்கிறேன். ஆமென்'' என்று கூறும்போது ""நான் இவ்வாறு வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறேன், இதை நிச்சயமாகவே நிறைவேற்றுவேன்'' என்று பொருள்படுமாறு இயேசு கூறுகிறார். 



இயேசுகிறிஸ்து ஆமென் என்று கூறியிருப்பதினால், வாக்குத்தத்தங்களெல்லாம் அவருக்குள் ஆம் என்றும் ஆமென் என்றும் இருக்கிறது. ஆமென் என்னும் வார்த்தையை நமது ஜெபத்தில் கூறி நமது எதிர்பார்ப்புக்களையும், ஆவல்களையும் தேவனிடத்தில் தெரியப்படுத்துகிறோம். ஆமென் என்னும் வார்த்தைக்கு ""அப்படியே ஆகக்கடவது'' என்று பொருள். இயேசுகிறிஸ்து நம்மிடம் ""நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும்  சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து, நான் உங்களுக்கு கட்டளையிட்ட  யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள்''  என்று கூறும்போது நாமும் ""ஆமென்'' என்றும் ""எங்கள் ஜீவியங்களில் அப்படியே செய்கிறோம்'' என்றும் உறுதி கூறவேண்டும்.  



நாம் ஜனங்களுக்கு உபதேசம் பண்ணவேண்டிய சத்தியம் மிகவும் தெளிவாக இருக்கிறது. இயேசு கிறிஸ்து நமக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களுக்கு உபதேசம் பண்ண வேண்டும். அவற்றை அவர்கள் கைக்கொள்ளுமாறு உபதேசம் பண்ண வேண்டும். இயேசு கிறிஸ்துவின் கட்டளையைக் கூட்டவோ அல்லது குறைக்கவோ நமக்கு அதிகாரம் இல்லை. 



""உலகம்''  என்பது காலத்தைக் குறிக்கும்  வார்த்தையாகும்.  இது மனுஷனுடைய முடிவையோ வேறு எதனுடைய முடிவையோ குறிக்காது. இயேசு கிறிஸ்து மறுபடியும் வரும் வரையிலும் நாம் அவருடைய கட்டளைகளை ஜனங்கள் கைக்கொள்ளும்படி உபதேசம் பண்ணிக்கொண்டே இருக்க வேண்டும். இயேசு கிறிஸ்துவும் நம்மோடேகூட உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் இருப்பார்.


Post a Comment

0 Comments