ஏனோக்கு

 

ஆய்வு

ஏனோக்கு



ஏனோக்கின் பரம்பரை:


ஆதாமின் ஏழாம் தலைமுறையில் ஏனோக்கு பிறந்தான். ஆதாமின் மகன் சேத். சேத்தின் மகன் ஏனோஸ். ஏனோஸின் மகன் கேனான். கேனானின் மகன் மகலாலெயேல். மகலாலெயேலின் மகன் யாரேத். யாரேத்தின் மகன் ஏனோக். 


ஏனோக்கின் குடும்பம்:


ஏனோக்கு தேவனோடு சஞ்சரித்துக் கொண்டிருந்த போது குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான் என்று ஆதி 5 : 22ல் இருப்பதால் அவருக்குக் குடும்பம் இருப்பதை அறிந்தோம். ஏனோக்குக் குடும்பம் இருந்தாலும் கர்த்தரோடு நடந்தார். பிள்ளைகள் இருந்தாலும் தேவனோடு வாழ்ந்தார் என்பதால், எல்லாவற்றிலும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார் என்பது தெளிவு. குடும்பத்தோடு வாழ்பவர்கள் தேவனுக்குப் பிரியமாக வாழலாம், வரங்களைப் பெறலாம், ஊழியம் செய்யலாம், எடுத்துக் கொள்ளப்படலாம் என்பதற்கு ஏனோக்கு சிறந்த எடுத்துக்காட்டு. இல்லறம் இறை வாழ்க்கைக்கு இடையூறல்ல என்று காட்டியவர். ஏனோக்கின் 65வது வயதில் மெத்தூசலா பிறந்தான். இந்தப் பெயரின் பொருள் “மரித்தபின் அது தாமதமின்றி வரும்” என்பது. எது தாமதமின்றி வரும் என்றால் “பெருவெள்ளம் தாமதமின்றி வரும்” என்பதுதான்.

 மெத்தூசலா 929 வருடங்கள் வாழ்ந்தார். அவர் இறந்த பின் தான் பெருவெள்ளம் வந்தது. தன் மகனுக்கு ஏற்ற பெயரை அவர் வைத்ததிலிருந்து அவருடைய தரிசனத்தை அறியலாம்.

 (ஆதி 5:21, 22)


ஏனோக்கின் குணாதிசயங்கள் :


பெருவெள்ளத்திற்கு முந்தைய மனிதர்களில் தேவனோடு நெருங்கி வாழ்ந்தவர்களில் மிகவும் முக்கியமானவர். இவர் தன்னுடைய 65 வயதில் இருந்தே தேவனோடு சஞ்சரிக்க ஆரம்பித்தார். 300 வருடங்கள் தேவனோடு சஞ்சரித்தார். 

(ஆதி 5 :24) பிரதிஷ்டை பண்ணப்பட்டவர். உலகத்திலிருந்து பிரிந்து வேறுபாடாக ஜீவித்தவர். தேவனுடைய கருத்துக்களை முற்றிலும் ஏற்றுக் கொண்டவராக, தேவனோடு ஒருமனம் கொண்டவராக வாழ்ந்தார். தேவனுக்குப் பிரியமானவன் என்று நற்சாட்சி பெற்றார். ( எபி 11 : 5 ) 


தேவ ஆவியின் வெளிப்பாடுகளைப் பெற்று தீர்க்கதரிசனம் உரைத்தவர். 

(யூதா 14, 15) கர்த்தரை உண்மையுடன் விசுவாசித்தவர். அதனால் தேவனுடைய வார்த்தைகளையும், வாக்குத்தத்தங்களையும் பரிபூரணமாக நம்பினார். உலகம் சீர்கெட்டு கலப்பு மணங்களால் கட்டற்று கிடந்த காலங்களில் பரிசுத்தமான வாழ்க்கை வாழ எல்லா வகையிலும் முயற்சித்தவர். தேவ நீதியை எங்கும் பிரசித்தம் பண்ணினவர். கர்த்தருடைய வழிகளைப் பின்பற்றியவர்.


ஏனோக்கு உரைத்த தீர்க்கதரிசனம்:


தேவனோடு சஞ்சரித்தார் என்று தமிழ் வேதாகாமத்தில் உள்ளது. ஆங்கில வேதாகமத்தில் தேவனோடு நடந்தார் என்றுள்ளது. உலகத்தில் ஆசாபாசங்களை விட்டு தேவனுடைய கரங்களை விசுவாசத்தோடு பிடிக்கிறவர்கள் தான் தேவனோடு நடக்க முடியும். அவ்வாறு தேவனோடு நடக்கிறவர்கள் தேவனுடைய சினேகிதர்களாவார்கள். இப்படிப்பட்டவர்கள் தேவனுடைய வாயாக இருந்து பின்னால் நடக்கப்போவதை முன்னால் தீர்க்கதரிசனமாக உரைப்பர். கர்த்தரின் இரண்டாம் வருகையைப் பற்றி முதல் முதல் தீர்க்கதரிசனமாக உரைத்தவர். 

( யூதா 14,15 ) எல்லோருக்கும் நியாய தீர்ப்பளிக்க இயேசு வருவார் என்றார். அவபக்தியான கிரியைகளுக்கு நியாயத்தீர்ப்பு அளிப்பார் என்றார். பாவிகள் பேசின கடினமான வார்த்தைகளுக்கு நியாயத்தீர்ப்பு அளிக்கிறதற்கும் கண்டிக்கிறதற்கும் இயேசு வருவார் என்றார். ஆயிரமாயிரமான பரிசுத்தவான்களோடு கூட வருவார் என்றும் கூறினார். தன்னுடைய தலைமுறையினரின் தேவபக்தியற்ற தன்மைக்கு விரோதமாக எதிர்த்து நின்றார்.


ஏனோக்கின் மரணம்: 


விசுவாசத்தினால் ஏனோக்கு மரணத்தைக் காணாதபடி எடுத்துக்கொள்ளப்பட்டார். 

(எபி 11 : 5) 365 வருடங்கள் உயிரோடிருந்தார். அதில் தேவனோடு சஞ்சரித்தது 300 வருடங்கள். கர்த்தரோடு சஞ்சரிக்கையில் காணப்படாமல் போனார். ஆதாம் மரித்து பின் 57 ஆம் ஆண்டில் சுமார் 3017 ஆம் ஆண்டில் அவரது 365 ஆவது வயதில் காணப்படாமல் போனான்.


முடிவுரை: 


கிறிஸ்துவின் வருகையில் எடுத்துக் கொள்ளப்படும் பரிசுத்தவான்களுக்கு முன்னடையாளாமானவர். கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் எடுத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் ஏனோக்கைப் போன்று தேவனோடு சஞ்சரிக்க வேண்டும். நியாயத்தீர்ப்பின் எச்சரிப்பைப் பற்றி கூறியிருப்பதால், நமது வாழ்க்கையில் அது பயத்தைக் கொண்டு வரும். மரணம் என்னவென்று அனுபவிக்காதவர். ஏனோக்கைப் போல எடுத்துக்கொள்ளப்பட்ட இன்னொருவர் எலியா. ஏனோக்கைப் போல் வாழ்ந்தால் இயேசுவின் வருகையில் எடுத்துக் கொள்ளப்படுவோம் என்பது மறுக்கப்படாத உண்மை…..

Post a Comment

0 Comments