அறிந்து கொள்வோம்
பகுதி -109
அந்தியோகியா பட்டணம்
பரிசுத்த வேதாகமத்தில் அந்தியோகியா
பட்டணம் பற்றிய வசனங்கள்
(அப்போஸ்தலர் 6:5,அப்போஸ்தலர் 11:19,
அப்போஸ்தலர் 11:20, அப்போஸ்தலர் 11:22,
அப்போஸ்தலர் 11:25, அப்போஸ்தலர் 11:26,
அப்போஸ்தலர் 11:27, அப்போஸ்தலர் 13:1,
அப்போஸ்தலர் 13:14, அப்போஸ்தலர் 14:19,
அப்போஸ்தலர் 14:21, அப்போஸ்தலர் 14:26,
அப்போஸ்தலர் 15:22, அப்போஸ்தலர் 15:23,
அப்போஸ்தலர் 15:30, அப்போஸ்தலர் 15:35,
அப்போஸ்தலர் 18:22, கலாத்தியர் 2:11,
தற்போதைய அந்தியோகியா
அந்தியோகியா (Antioch) என்னும் பழங்கால நகர் இன்றைய துருக்கி நாட்டின் தென் கிழக்குப் பகுதியில், சிரியாவின் வடகிழக்கு எல்லையிலிருந்து 12 மைல் தொலையில் அமைந்த நகரம் ஆகும். இந்நகருக்கு மேற்குப்பக்கத்தில் ஒரோண்டெஸ் (Orontes) என்னும் பேராறு ஓடுவதால் அதற்கு "ஒரோண்டெஸ் கரையில் அமைந்த அந்தியோக்கியா" (Antioch on the Orontes) என்னும் பெயரும் உண்டு.பழைய நகரான அந்தியோக்கியா புது நகரான "அந்தாக்கியா" (Antakya) அருகே இன்றைய துருக்கி நாட்டில் அமைந்துள்ளது.
அந்தியோகியா உருவான வரலாறு
கி.மு. 4ஆம் நூற்றாண்டின் இறுதியில் மகா அலெக்சாண்டரின் தளபதிகளுள் ஒருவராகிய முதலாம் செலூக்கஸ் நிக்கட்டோர் என்பவர் அந்தியோகியாவை நிறுவினார். இந்நகரத்தில்தான் கிறித்தவ சமயம் முதலில் யூதர் நடுவிலும் பின்னர் யூதரல்லாத பிற இனத்தவரிடையேயும் கி.பி. முதல் நூற்றாண்டில் முனைப்பாகப் பரவத்தொடங்கியது. அந்தியோகியா பண்டைய சிரிய நாட்டை ஒருங்கிணைத்த நான்கு பெருநகரங்களுள் ஒன்றாகும் (பிற நகரங்கள்: செலூக்கியா, அப்பமேயா, இலவோதிக்கேயா). இந்நகர மக்கள் "அந்தியோக்கியர்" என்று அழைக்கப்பட்டனர். அதன் உச்ச வளர்ச்சியின்போது அங்கே ஐந்து இலட்சம் மக்கள் வாழ்ந்ததாக வரலாறு கூறுகிறது. அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டதாலும், மம்லுக் இராணுவம் 1268இல் பேரளவிலான மக்களைக் கொன்றுகுவித்ததாலும் அந்தியோகியா நடுக்காலத்தில் சீரழியத் தொடங்கியது. மங்கோலியர் படையெடுப்பால் வர்த்தக வழிகள் அந்தியோகியாவின் ஊடே செல்ல தடை எழுந்ததும் சீரழிவிற்கு ஒரு காரணமாகும்.அந்தியோகியாவில் கோம்மொதுஸ் என்னும் மன்னன் ஒலிம்பிக் விளையாட்டுகளை நடத்தினார். கி.பி. 256இல்பாரசீகப் படைகள் அந்தியோகியாவைத் தாக்கி மக்கள் பலரைக் கொன்றன.
கிறிஸ்தவ வரலாற்றில் அந்தியோகியா
கிறிஸ்தவ சமயம் யூத நாட்டுக்கு வெளியே பரவத் தொடங்கிய காலத்தில் அந்தியோகியா மைய இடமாக அமைந்தது. அந்நகரில் யூத மக்கள் பலர் வாழ்ந்து வந்தனர். யூத மக்களிடையே கிறித்தவ சமயத்தைப் பரப்பும் வண்ணம் பல மறைபரப்பாளர்கள் அந்தியோகியா சென்றனர். இயேசுவின் சீடரான புனித பேதுரு அங்கு சென்று இயேசுவைப் போதித்தவர்களில் மிகவும் முக்கியமானவர். அதன் அடிப்படையில் இன்று அந்தியோகிய சபை தனக்கு மற்ற சபைகளை விட தங்களுக்கு முதன்மையிடம் உண்டு என்னும் கோரிக்கையை எழுப்புகிறது.
அந்தியோகியாவில் கிறித்தவ சமயத்தைப் பரப்பிய இரு பெரும் மறைபரப்பாளர்கள் பர்னபா, பவுல் (பிறப்பு: கி.பி. சுமார் 5; இறப்பு: கி.பி. சுமார் 67) ஆவர். பவுல் இந்நகரத்தில் கி.பி. 47இலிருந்து 55 வரை மறைபரப்பினார். பவுல் கிறித்தவத்தை போதித்த போது மக்கள் கூடி வந்து நற்கருணைக் கொண்டாட்டம் நிகழ்த்திய குகைப் பகுதி இன்றும் அந்தியோகியாவில் உள்ளது.
புதிய ஏற்பாட்டில் உள்ள அப்போஸ்தலர் நடபடிகைகள் என்னும் நூல் அந்தியோகியாவில் கிறித்தவம் பரவிய வரலாற்றை தெளிவாய் விவரிக்கிறது. அந்தியோக்கியா பற்றிய 16 குறிப்புகள் அந்நூலில்உள்ளன.(காண்க:அப்போஸ்தலர் 6:5; 11:19,20,22,26,27; 13:1,13; 14:19,21,26; 15:22,23,30,35; 18:12).மேலும் கலாத்தியருக்கு பவுல் எழுதிய நிருபத்திலும் தீமோத்தேயு வுக்கு எழுதிய இரண்டாம் நிருபத்திலும் அந்தியோகியா பற்றிய குறிப்புகள் உண்டு. சிறப்பாக, அந்தியோகியாவில்தான் முதன்முறையாக, இயேசுவைப் பின்பற்றிய மக்கள் "கிறிஸ்தவர்கள்" என்னும் பெயரால் அழைக்கப்படத் தொடங்கினர்.
அது பற்றிய குறிப்பு இதோ……..
Thanks: Dr.Ganasekar
0 Comments