Thursday, 12 August 2021

யாகேல் || அறிந்து கொள்வோம் பகுதி -70

அறிந்து கொள்வோம்

பகுதி -70

யாகேல்

யாகேல் என்றால் "மலை ஆடு" என்று அர்த்தமாகும்.

நியா 4:17-22 வசனங்களில் இவளைக் குறித்துச் சொல்லப்பட்டுள்ளது. இவள் கேனியனாகிய ஏபேரின் மனைவி.

கானானிய ராஜாவாகிய யாபீன் இஸ்ரவேல் மக்களை அடக்கிக் கொண்டிருந்த வேளையில் தேவன் பாராக்கையும், அவனுக்கு உதவியாகத் தெபொராள் என்ற தீர்க்கதரிசினியையும் எழுப்பினார். அவர்கள் யாபீனின் இராணுவத்தை முறியடிக்கும்படி தேவன் கிருபைசெய்தார்.அப்போது யாபீனின் தளபதியாகிய சிசெரா தப்பியோடினான்.

கேனானியனாகிய ஏபேர் என்பவன் தன்கூட்டத்தாரைவிட்டுப் பிரிந்து, கேதேசின் அருகே இருக்கிற சானாயிம் என்னும் கர்வாலிமரங்கள் அருகே தன் கூடாரத்தைப் போட்டிருந்தான். 

இவன் ஒரு கேனியனியன். (மோசேயின் மாமன் ஒரு கேனியன்).

சிசெரா இந்தக் கூடாரத்தின் அருகே வந்தபோது,ஏபேரின் மனைவியாகிய யாகேல் அவனை வரவேற்று கூடாரத்துக்குள் அழைத்துச்சென்றாள். அவன் குடிப்பதற்குப் துருத்தியிலிருந்த பாலைக் கொடுத்தாள்.

களைப்பு மிகுதியால் சிசெரா ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்ந்துபோனான். யாகேல் ஒரு கூடார ஆணியை எடுத்து, தன் கையிலே சுத்தியைப் பிடித்துக் கொண்டு, மெள்ள அவனண்டையில் வந்து, அவன் நெற்றியிலே அந்த ஆணியை அடித்துப் போட்டாள். அது உருவிப்போய், தரையிலே புதைந்தது. அப்பொழுது ஆயாசமாய்த் தூங்கின அவன் செத்துப்போனான்" (நியா.4:21).

பிறகு அவள் வெளியே வந்து விரட்டிவந்த பாராக்கைக் கூடாரத்துக்கு அழைத்துச் சென்று கொல்லப்பட்ட சிசெராவைக் காட்டினாள்.

"கர்த்தர் சிசெராவை ஒரு ஸ்திரீயின் கையில் ஒப்புக்கொடுப்பார்" என்று தெபொராள் சொல்லியிருந்த தீர்க்கதரிசனம் (நியா. 4:9) இப்படி அன்று நிறைவேறியது.இதன்பிறகு இஸ்ரவேல் மக்களுக்கு 40 ஆண்டு காலம் சமாதானம் கிடைத்தது.

ஒடுக்கப்பட்டவர்களுக்கு உதவியாக யாகேல் கைகொடுத்தாள் என்று இவள் போற்றப்படுகிறாள்.

"ஸ்திரீகளுக்குள்ளே கேனியனான ஏபேரின் மனைவியாகிய யாகேல் ஆசீர்வதிக்கப்பட்டவள்” என்று தெபொராள் தனது துதி சங்கீதத்தில் சொல்லுகிறாள் (நியா.5:24).

யாகேல் இஸ்ரவேலரின் ஜாதியைச் சேர்ந்த பெண்ணாக இராதிருந்த போதிலும், தேவன் அவள் மூலமாக விடுதலையைக் கொண்டுவந்தார்.


சூழ்நிலை எப்படியிருந்தாலும் தேவன் அதைத் தமது மக்களுக்கு நன்மையாக முடியப்பண்ணுகிறார் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சான்றாக இருக்கிறது…




No comments:

Post a Comment

சிலுவை வாசகம் (Titulus Crucis) -INRI - // சிலுவை தியானம் //

சிலுவை வாசகம் (Titulus Crucis)  Iesus Nazarenus Rex Iudaeorum (INRI) சிலுவை வாசகம் (Titulus Crucis) - முரண்பாடா அல்லது சத்தியத்தின் முத்திரை...