பாடுகளின் வாரம் செவ்வாய்க்கிழமை நிகழ்வு - 2

 பாடுகளின் வாரம்

செவ்வாய்க்கிழமை நிகழ்வு - 2


பிரதான கற்பனை


  • பரிசேயர்


அவர் சதுசேயரை வாயடைத்தார் என்று பரிசேயர் கேள்விப்பட்டு, அவரிடத்தில் கூடிவந்தார்கள்

 (மத் 22:34).


இயேசுகிறிஸ்து சதுசேயரை வாயடைக்கிறார். இந்தச் செய்தியை பரிசேயர் கேள்விப்படுகிறார்கள். யூதமார்க்கத்தில் சதுசேயரும் பரிசேயரும் இரண்டு பிரிவினர்கள்.  இவர்களுக்குள் மார்க்க ரீதியாக பல கருத்து வேறுபாடுகள் உள்ளன. இயேசுகிறிஸ்து சதுசேயரை வாயடைத்ததினால், அவர் தங்கள் பட்சமாக இருப்பார் என்று நினைத்து, பரிசேயர் இயேசுகிறிஸ்துவிடம் கூடிவருகிறார்கள்.


இந்த சம்பவத்தின் மூலமாக  வேதவாக்கியத்தில் இயேசுவிற்கு இருக்கும் ஞானம் வெளிப்படையாக தெரிகிறது. அவருக்கு நன்றி சொல்வதற்காகவோ, உயிர்த்தெழுதல் இல்லையென்று சாதித்த சதுசேயரை வாயடைத்ததற்காகவோ, பரிசேயர் இயேசுவிடம் வரவில்லை. இயேசுகிறிஸ்துவைவிட தங்களுக்கு வேதத்தில் அதிக ஞானமுள்ளது என்பதை காண்பிப்பதற்காகவே வருகிறார்கள். 


சதுசேயர் வாயடைத்து போனதினால் பரிசேயருக்கு சந்தோஷம் உண்டாகிறது. இதன் மூலமாக இயேசுகிறிஸ்துவின் நாமம் மகிமையடைகிறது. அவர் மகிமையடைவதை பரிசேயர் விரும்பவில்லை. அவர்மீது பொறாமைப்படுகிறார்கள். தங்களுக்கு பிடிக்காதவர் சத்தியத்தை உறுதிபண்ணியிருக்கிறாரே என்று பரிசேயர் இயேசுவின்மீது பொறாமைப்படுகிறார்கள். இதுவே பொறாமைக்குணம். 



நமக்கு நன்மையான காரியத்தை ஒருவர் செய்தாலும், அவர்மீது நமக்கு பொறாமை இருக்குமென்றால், அவர் செய்த நற்காரியத்தை நாம் அங்கீகரிக்கமாட்டோம். நமக்கு அவர் நன்மை செய்தாலும் அது நமக்கு தீமையாகவே தெரியும். அவர் சரியாக பேசினாலும், செய்தாலும் அது நமக்கு தவறாகவே தெரியும்.


  • நியாயசாஸ்திரி


 அவர்களில் நியாயசாஸ்திரி ஒருவன் அவரைச் சோதிக்கும்படி,(மத் 22:35). 


வேதபாரகரைப்போல நியாயசாஸ்திரிகளும் வேதபண்டிதர்கள். இவர்கள் மோசேயின் பிரமாணத்தை நன்றாக கற்று ஜனங்களுக்கு உபதேசம்பண்ணுவார்கள். பரிசேயரில் நியாயசாஸ்திரிகள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவன் இயேசுகிறிஸ்துவை சோதிக்கும்படி அவரிடத்தில் வருகிறான். 


இவன் இயேசுகிறிஸ்துவை ஒரு கண்ணியில் சிக்க வைக்கவேண்டும் என்னும் உள்நோக்கத்தோடு வரவில்லை. மாற்கு எழுதின சுவிசேஷத்தில் இந்த சம்பவத்தைப்பற்றி எழுதப்பட்டிருக்கிறது. இந்த நியாயசாஸ்திரி விவேகமாய் உத்தரவு சொல்லுகிறதை இயேசுகிறிஸ்து காண்கிறார். அவனை ""நீ தேவனுடைய ராஜ்யத்திற்கு தூரமானவனல்ல''  என்று கூறுகிறார் (மாற் 12:34). இவன் இயேசுகிறிஸ்துவிடம் கோபமாகவோ, வஞ்சகமாகவோ எதையும் பேசவில்லை. தன்னுடைய சந்தேகத்தை தீர்த்துக்கொள்வதற்காக இயேசுகிறிஸ்துவிடம் வருகிறான். இவனுடைய வேதஅறிவை இயேசுகிறிஸ்துவும் அங்கீகரிக்கிறார்.      வேதத்தை தெளிவாக புரிந்துகொள்வதற்கு இயேசுகிறிஸ்து இவனுக்கு உதவி புரிகிறார்.


  • போதகரே

போதகரே,நியாயப்பிரமாணத்திலே எந்தக் கற்பனை பிரதானமானது என்று கேட்டான் (மத் 22:36).


இவன் இயேசுகிறிஸ்துவை மிகவும் மரியாதையாக ""போதகரே'' என்று அழைக்கிறான். ""நியாயப்பிரமாணத்திலே எந்தக் கற்பனை பிரதானமானது'' என்று  இயேசுவிடம் ஒரு கேள்வி கேட்கிறான். நியாயப்பிரமாணங்களெல்லாம் தேவனிடமிருந்தே வந்திருக்கிறது. இவையெல்லாமே முக்கியமானது. ஆயினும் நியாயப்பிரமாணத்தில் கூறப்பட்டிருக்கும் பல கற்பனைகளில், ஒரு சில கற்பனைகள் மற்ற கற்பனைகளைவிட முக்கியமானது என்று இவன் நினைக்கிறான். தன் சந்தேகத்தை தெளிவுபடுத்துவதற்காக இவன் இயேசுவிடம் இந்தக் கேள்வியைக் கேட்கிறான்.


நியாயப்பிரமாணத்தை விவாதம்பண்ணுகிறவர்கள் பொதுவாக இப்படிபட்ட கேள்வியை கேட்பார்கள். இதே கேள்வியை நியாயசாஸ்திரியும்  இயேசுகிறிஸ்துவிடம் கேட்டு அவருடைய ஞானத்தை சோதிக்கிறான்.  இயேசுகிறிஸ்துவின் பிரதியுத்தரத்தை இந்தக் கேள்விக்கு பதிலாக ஏற்றுக்கொண்டு, அதையே விவாதத்திற்கு தீர்ப்பாகவும் அங்கீகரிக்க விரும்புகிறான். இயேசுகிறிஸ்து நியாயப்பிரமாணத்தில் ஒரு கற்பனையை மாத்திரம் முக்கியப்படுத்தினால், மற்ற கற்பனைக்கு அவர் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று பொருள். ஆகையினால் இயேசுகிறிஸ்து              மிகவும் ஞானமாக இந்தக் கேள்விக்கு பிரதியுத்தரம் கூறுகிறார். 


இந்தக் கேள்வியில் உள்நோக்கமோ, வஞ்சக வலையோ இல்லை.  இதே சம்பவம்  

லூக்கா 10:27,28 ஆகிய வசனங்களிலும் எழுதப்பட்டிருக்கிறது. நியாயப்பிரமாணத்தின் போதகர்கள் இந்த பிரதியுத்தரத்தை அங்கீகரிக்கிறார்கள். தேவனிடத்தில் அன்பு கூருவதும், பிறரிடத்தில் அன்பு கூருவதும்  மிகவும் முக்கியமானது. இந்த சத்தியத்தில் நியாயப்பிரமாணம் முழுமையும் அடங்கியிருக்கிறது.


வேதவாக்கியத்தில் 248 கற்பனைகள் இருப்பதாக நியாயசாஸ்திரிகள் கணக்கிட்டிருக்கிறார்கள். 

இவை நேர்மறையானவை. இவைதவிர, 365 எதிர்மறைக் கற்பனைகள் இருப்பதாகவும் அவர்கள் கூறுகிறார்கள். ஆக மொத்தம் 613 கற்பனைகள் வேதவாக்கியங்களில் உள்ளன என்பது இவர்களுடைய கணக்கு. 248 என்பது ஒரு மானிட சரீரத்திலுள்ள 248 அவயவங்களைக் குறிக்கும். 365 என்பது ஒரு வருஷத்தின் 365 நாட்களைக் குறிக்கும். 

பத்து கற்பனைகள் எபிரெய மொழியில் எழுதப்பட்ட போது அதில் 613 எழுத்துக்கள் இருந்தன.  613 என்பது பத்து கற்பனைகளிலுள்ள 613 எழுத்துக்களைக் குறிக்கும். 



இந்த 613 கற்பனைகளில் சில மிகவும் முக்கியமானவை, சில ஓரளவு முக்கியமானவை. என்று யூதர்கள் தரம் பிரித்திருந்தார்கள். யூதருடைய இந்தப் பாரம்பரிய நம்பிக்கையை இயேசு கிறிஸ்து அங்கீகரிக்கிறாரா? என்பதைச் சோதிப்பதற்காக நியாயசாஸ்திரி இயேசுவிடம் இந்தக் கேள்வியைக் கேட்டான்.


முதலாம் பிரதான கற்பனை


 இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக; இது முதலாம் பிரதான கற்பனை           (மத் 22:37,38).



இயேசுகிறிஸ்து நியாயசாஸ்திரிக்கு பிரதியுத்தரம் கூறும்போது ""இது முதலாம் பிரதான கற்பனை'' என்று கூறுகிறார். இதனால் அவர் மற்ற கற்பனைகளை புறக்கணித்து விட்டார் என்றோ, அல்லது அவற்றிற்கு முக்கியத்துவம் தரவில்லையென்றோ பொருள்படாது. இந்தக் கற்பனையில் மற்ற கற்பனைகளும் அடங்கியிருப்பதினால், இதை முதலாம் பிரதான கற்பனை என்று அறிவிக்கிறார். 


தேவனாகிய கர்த்தரிடத்தில் நம் முழு இருதயத்தோடும், நம் முழு ஆத்துமாவோடும், நம் முழு மனதோடும் அன்பு கூரவேண்டும். நம்மிடத்தில் நாம் அன்புகூருவதுபோல பிறரிடத்திலும் அன்பு கூரவேண்டும். இவ்விரண்டு கற்பனைகளும் நியாயப்பிரமாணத்தில் கூறப்பட்டிருக்கும் எல்லா கற்பனைகளுக்கும் அஸ்திபாரமாகும். மற்ற கற்பனைகளெல்லாம் இவ்விரண்டு கற்பனைகளோடு தொடர்புடையவை. 


நியாயப்பிரமாணங்களெல்லாம் ""அன்பு'' என்னும் ஒரே வார்த்தையிலேயே நிறைவேறுகிறது. அப்போஸ்தலர் பவுல் அன்பைப்பற்றி கூறும்போது ""அன்பு நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாயிருக்கிறது'' (ரோம 13:10) என்று கூறுகிறார். எல்லா கீழ்ப்படிதல்களும் அன்பிலும் பாசத்திலும், நேசத்திலும் ஆரம்பமாகிறது. அன்பு இல்லையென்றால் ஒன்றுமில்லை. அன்பே பாசத்தையும் நேசத்தையும் கொடுக்கிறது. நாம் தேவனிடத்தில் வரும்போது அன்பு நன்மை ஆளுகை செய்யவேண்டும். அன்பு என்னும் கோட்டையை பாதுகாத்துக்கொள்ளவேண்டும்.



மனுஷனுக்கு அன்பு தேவை. ஆகையினால் தேவன் அன்பின் பிரமாணத்தை  அவன் இருதயத்தில் எழுதியிருக்கிறார். அன்பு ஒரே வார்த்தைதான். ஆயினும் இது இனிமையான வார்த்தை. அன்பு நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாக இருக்கிறது. இந்த கற்பனையின் நுகம் இலகுவானது. அன்பு நமது ஆத்துமாவை திருப்திபண்ணும். அன்பே ஆரம்ப வழி. இதுவே முதல் பாதை. முக்கியமான பாதை. அன்பின் பாதையே சரியான பாதை. இந்த வழியில் நாம் நடந்துபோனால் மற்ற அனைத்தையும் நாம் கண்டுகொள்ளலாம் போகவேண்டிய இடத்திற்கு சுலபமாகப் போய்ச் சேர்ந்து விடலாம்.  


தேவனிடத்தில் அன்பு கூருவது முதலாம் பிரதான கற்பனையாகும். தேவன் நித்தியமானவர். அன்பானவர். ஆகையினால் நாம் முதலாவதாக அவர்மீதுதான் அன்பு கூரவேண்டும். நம்முடைய முழு இருதயமும், முழு ஆத்துமாவும், முழு மனதும் அவரிடத்தில் அன்பு கூரவேண்டும். தேவனிடத்தில் அன்பு கூர்ந்தபின்புதான், நாம் மற்ற காரியங்கள்மீது அன்பு கூரவேண்டும். தேவனிடத்தில் நாம் காண்பிக்கும் அன்பு பிரதானமானதாக இருக்கவேண்டும். 


தேவன் நம்மிடத்தில் எதிர்பார்க்கும் முதலாவது காரியமும், பிரதான காரியமும் அன்பு ஒன்றுதான். ஆகையினால் தேவனிடத்தில் அன்புகூருவது முதலாம் பிரதான கற்பனையாக இருக்கிறது.



தேவனிடத்தில் அன்பு கூரும்போது அவரை நம்முடைய தேவனாகவும், கர்த்தராகவும் நம் உள்ளத்தில் அங்கீகரிக்கவேண்டும். ஏனெனில் அவர் நம்முடையவர். அவரிடத்தில் நாம் பயபக்தியோடும், கீழ்ப்படிதலோடும் அன்பு கூரவேண்டும். அவர்மீது அன்பு கூர்ந்து அவரை நாம் முழுமையாக சார்ந்துகொள்ளவேண்டும். 


நாம் நம்முடைய தேவன்மீது அன்பு கூருவது பூரணமாக இருக்கவேண்டும். நம்முடைய முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், முழு மனதோடும் நாம் நம்முடைய தேவனாகிய கர்த்தரிடத்தில் அன்பு கூரவேண்டும். இந்த வாக்கியத்திற்கு வேத பண்டிதர்கள் இரண்டுவிதமாக வியாக்கியானம் கூறுகிறார்கள். இருதயம், ஆத்துமா, மனது ஆகிய மூன்றுமே ஒரே காரியத்தை குறிக்கிறது என்றும், நாம் தேவனிடத்தில் நமது முழு வல்லமையோடு அன்பு கூரவேண்டும் என்றும்  இந்த வாக்கியத்திற்கு சிலர் வியாக்கியானம் கூறுகிறார்கள். 



வேறு சில வேதபண்டிதர்கள் இருதயம், ஆத்துமா, மனம் ஆகிய மூன்றையும் மூன்று வெவ்வேறு காரியங்களாக பிரிக்கிறார்கள். இவை நம்முடைய சித்தம், பாசம், ஞானம் ஆகிய மூன்றையும் குறிப்பதாக இவர்கள் வியாக்கியானம் கூறுகிறார்கள். 


தேவனிடத்தில் நாம் அன்பு கூருவது உண்மையானதாக இருக்கவேண்டும். வார்த்தை அளவில் மாத்திரமோ, நாவினால் மாத்திரமோ  தேவனிடத்தில் அன்பு கூரக்கூடாது. நம்முடைய அன்பு பெலனுள்ளதாக இருக்கவேண்டும். நம்மால் எந்த அளவிற்கு தேவனிடத்தில் அன்பு கூரமுடியுமோ அந்த அளவிற்கு அவரிடத்தில் பூரணமாக அன்பு கூரவேண்டும். நாம்  தேவனிடத்தில் மாத்திரமே  அன்பு கூரவேண்டும். இந்த அன்பு பூரணமானதாகவும்  மேன்மையானதாகவும் இருக்கவேண்டும். தேவனிடத்தில் அன்பு கூரும்போது நமது இருதயம் ஒருமனப்பட்டிருக்கவேண்டும். 


நாம் தேவனிடத்தில் எவ்வளவுதான் அன்பு கூர்ந்தாலும் நம்முடைய அன்பு போதுமானதாகயிராது. பூரணமானதாகயிராது. நமது அன்பு குறைவானதாகவே இருக்கும். ஆகையினால் நாம் தேவனிடத்தில் அன்பு கூரும்போது நம்முடைய ஆத்துமாவின் எல்லா பெலனையும் ஒன்று சேர்த்து அவரிடத்தில்    அன்பு கூரவேண்டும். இதுவே முதலாம் பிரதான கற்பனை. இந்தக் கற்பனைக்கு கீழ்ப்படியும்போது மற்ற கற்பனைக்கு நாம் எளிதாக கீழ்ப்படியலாம். தேவனிடத்தில் நாம் அன்பு கூரும்போது அவருடைய மற்ற பிரமாணங்களுக்கும் நாம் கீழ்ப்படிவோம். அவருடைய கற்பனைகள் அனைத்தையும் கைக்கொள்வோம். 

 


தேவன்மீது நாம் காண்பிக்கும் அன்பு மூன்று இடங்களிலிருந்து வரவேண்டும். 

அவையாவன:

    1. இருதயம் - உள்ளான எல்லா பிரியங்கள்

    2. ஆத்துமா - எல்லா மனச்சாட்சிகள்

    3. மனது - எல்லா சிந்தனைகள்.


ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை


"இதற்கு ஒப்பாயிருக்கிற

இரண்டாம் கற்பனை என்னவென்றால், "உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக" (மத் 22:39).



நம்மிடத்தில் நாம் அன்பு கூருவதுபோல பிறரிடத்திலும் அன்பு கூரவேண்டும். இது இரண்டாம் கற்பனை. இந்தக் கற்பனை முதலாம் பிரதான கற்பனைக்கு ஒப்பானது. முதலாம் கற்பனையைப்போன்றது. நாம் தேவனிடத்தில் முழுமையாக அன்பு கூரவேண்டும். அதேவேளையில் மனுஷரிடத்திலும் அன்பு கூரவேண்டும். நம்மிடத்தில் அன்பு கூருவதுபோலவே பிறரிடத்திலும் அன்பு கூரவேண்டும். 


நம்மிடத்தில் அன்புகூருவது சுயஇச்சையைப் போன்றது. இது பாவம். இதை சிலுவையில் அறையவேண்டும். ஆகையினால் நம்மிடத்தில் அன்பு கூருவது என்பது பரிசுத்தமான அன்பாக இருக்கவேண்டும். நாம் நமக்கு நிறைவேற்ற வேண்டிய கடமைகளை பொறுப்போடு செய்யவேண்டும். நம்முடைய இருதயத்திற்கும், ஆத்துமாவிற்கும், மனதிற்கும் உரிய முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். இவற்றை பரிசுத்தப்படுத்தி பாதுகாக்கவேண்டும். நம்மிடத்தில் அன்பு கூருவது என்பது நம்மை பரிசுத்தப்படுத்தி பாதுகாப்பதையே குறிக்கும். இப்படிப்பட்ட அன்பை நாம் பிறருக்கும் காண்பிக்கவேண்டும். 


நாம் மற்றவர்களையும் மதிக்க வேண்டும்.  மற்றவர்களும் நம்மைப்போலவே முக்கியமானவர்கள் என்று கருதவேண்டும். யாருக்கும் தீங்கு செய்யக்கூடாது. யாரையும் காயப்படுத்தக்கூடாது. நமக்கு வாய்ப்பு இருக்கும்போதெல்லாம் மற்றவர்களுக்கு நன்மை செய்யவேண்டும்.  நம்மைப்போலவே நாம்  பிறரை நேசிக்கும்போது, நம்முடைய அன்பு தூய்மையானதாக இருக்கும். உண்மையாக அன்பாக இருக்கும். நாம் நமக்கு நாமே தீங்கு செய்யமாட்டோம். நமக்கு நாமே நன்மை செய்ய மறுக்கமாட்டோம். அதுபோலவே நாம் பிறருக்கும் தீங்கு செய்யக்கூடாது. வாய்ப்பு இருக்கும்போது பிறருக்கு நன்மை செய்ய மறுக்கக்கூடாது.


இரண்டு கற்பனைகளிலும்


இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார்

 (மத் 22:40).



நியாயசாஸ்திரியின் கேள்விக்கு இயேசுகிறிஸ்து முடிவுரையாக ""இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும்  தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது'' என்று கூறுகிறார். அன்பின் பிரமாணத்தில் அனைத்தும் அடங்கியிருக்கிறது. நியாயப்பிரமாணத்தில் அன்பை அகற்றிவிட்டால்  அதில் வேறொன்றும் மீதியாகயிராது. அன்பு இல்லையென்றால் ஒன்றுமில்லை. அன்பின் பாதையே நேர்த்தியான பாதை. நமக்குள் அன்பின் ஆவி பூரணமாக இருக்கவேண்டும்.  அன்பு இருந்தால் நமது கடமைகளை நாம் சரியாக செய்வோம். அன்பு இல்லையென்றால்  நமது கிரியைகள் குறைவுள்ளதாகவே இருக்கும்.  அன்பில் நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனமும் மாத்திரமல்ல, சுவிசேஷமும் அடங்கியிருக்கிறது. 


இவ்விரண்டு பிரமாணங்களில் எல்லாமே அடங்கியிருக்கிறது. அன்பு ஒருக்காலம் ஒழிந்துபோவதில்லை. இவ்விரண்டு பிரமாணங்களும் நம்முடைய இருதயங்களில் பதிந்திருக்கவேண்டும். நமது உள்ளத்தில் இருக்கும் அன்பை வார்த்தைகளினால் மாத்திரமல்ல, கிரியைகளினாலும் வெளிப்படுத்தவேண்டும். அன்பை வெளிப்படுத்துவதில் வைராக்கியமாக இருக்கவேண்டும். நமது சிந்தைகள், கிரியைகள் அனைத்திலும் அன்பு வெளிப்படவேண்டும். அன்பு நம்மை ஆளுகை செய்யவேண்டும்.


இயேசுகிறிஸ்துவும் தாவீதும்


தாவீதின் குமாரன்


பரிசேயர் கூடியிருக்கையில், இயேசு அவர்களை நோக்கி: கிறிஸ்துவைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், அவர் யாருடைய குமாரன்? என்றுகேட்டார். அவர் தாவீதின் குமாரன் என்றார்கள்

(மத் 22:41,42). 


பரிசேயர் இயேசுகிறிஸ்துவிடம் பல கேள்விகளை கேட்டிருக்கிறார்கள். இப்போதோ இயேசுகிறிஸ்து பரிசேயரிடம் ஒரு கேள்வி கேட்கிறார். அதுவும் பரிசேயர் எல்லாரும் கூடியிருக்கும்போது இந்தக் கேள்வியை அவர்களிடம் கேட்கிறார். பரிசேயர் கூடும்போது பொதுவாக அவர்கள் இயேசுவுக்கு விரோதமாக சதி ஆலோசனைபண்ணுவார்கள். இயேசுவை ஒரே ஆளாக நின்று எதிர்ப்பதற்குப் பதிலாக, இவ்வாறு கூட்டமாக சேர்ந்து அவரை எதிர்க்கலாம் என்று பரிசேயர் கூடியிருக்கிறார்கள். இதுவே பரிசேயரின் பெலன். 


பரிசேயர் முழு பெலத்தோடு கூடியிருக்கும்போது இயேசுகிறிஸ்து அவர்களை சந்திக்கிறார். தம்மை சோதிப்பதற்கு இயேசுகிறிஸ்து பரிசேயருக்கு இதுவரையிலும் பல வாய்ப்புக்களை கொடுத்திருக்கிறார். அந்த வாய்ப்புக்களையெல்லாம் அவர்கள் பயன்படுத்தி இயேசுவை சோதித்துப்பார்த்திருக்கிறார்கள். ஆனால் இதுவரையிலும் அவர்களால் இயேசுவை மேற்கொள்ள முடியவில்லை. இனிமேலும் மேற்கொள்ள முடியாது. இயேசுவை யாராலும், எப்போதும் மேற்கொள்ளவே முடியாது. அவர் ஜெயகிறிஸ்து.



பரிசேயரால் எளிதாக பிரதியுத்தரம் சொல்லக்கூடிய ஒரு கேள்வியை இயேசு அவர்களிடம் கேட்கிறார். இயேசுகிறிஸ்து கேட்கும் கேள்வி அவர்களுடைய விசுவாசத்தோடு தொடர்புடையது. ""கிறிஸ்துவைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், அவர் யாருடைய குமாரன்'' என்பது இயேசுவின் கேள்வி. இதற்கு அவர்கள் மிகவும் எளிதாக ""அவர் தாவீதின் குமாரன்'' என்று பதில் கூறுகிறார்கள். பரிசேயர் மேசியாவைப்பற்றி இவ்வாறுதான் நினைக்கிறார்கள். மேசியாவை தாவீதின் குமாரன் என்று பரிசேயர் அழைக்கிறார்கள்.  


இயேசுகிறிஸ்து அவர்களிடம் ""கிறிஸ்துவைக்குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்'' என்று கேட்கிறார். இதுவரையிலும் பரிசேயர் இயேசுகிறிஸ்துவிடம் ஒவ்வொரு கேள்வியாக கேட்டிருக்கிறார்கள்.   நியாயப்பிரமாணத்தைப்பற்றி அவர்கள் பல கேள்விகளை கேட்டிருக்கிறார்கள்.  இப்போது இயேசுகிறிஸ்துவும் பரிசேயரிடம் ஒரு கேள்வி கேட்கிறார். இது வாக்குத்தத்தத்தைப்பற்றிய கேள்வியாகும். 


பரிசேயரைப்போலவே ஏராளமான விசுவாசிகள் நியாயப்பிரமாணத்தில் தேறினவர்களாக இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் கிறிஸ்துவை மறந்துவிடுகிறார்கள். தேவனுடைய கிருபையில்லாமலேயே, தங்களுடைய சொந்தக் கிரியைகளினால் இரட்சிக்கப்படலாம் என்று சுயமுயற்சி செய்கிறார்கள். தங்கள் கடமைகளை சரியாக செய்தால் போதும், தேவனுடைய கிருபை தங்களுக்குத் தேவையில்லையென்று நினைக்கிறார்கள். 



இயேசுகிறிஸ்து பரிசேயரிடம் கேட்ட அதே கேள்வியை நாமும் நமக்குள் கேட்டுக்கொள்ள வேண்டும். ""கிறிஸ்துவைக்குறித்து நாம் என்ன நினைக்கிறோம்'' என்னும் கேள்வி நமது உள்ளத்திற்குள் எப்போதும் கேட்கப்படவேண்டும்.  ஒரு சிலர் இயேசுகிறிஸ்துவைப்பற்றி நினைப்பதேயில்லை. வேறு சிலர் இயேசுவைப்பற்றி ஏளனமாக நினைக்கிறார்கள். இயேசுகிறிஸ்து அற்புதமானவர் என்னும் சிந்தனை நமக்குள் இருக்கவேண்டும். அப்போது அவரைப்பற்றிய சிந்தனையே நமக்கு அற்புதமாக இருக்கும். 


இயேசுவே ஆண்டவர்


 அதற்கு அவர்: அப்படியானால், தாவீது பரிசுத்த ஆவியினாலே அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்கிறது எப்படி?  நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப்போடும் வரைக்கும் நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்று கர்த்தர் என் ஆண்டவரோடே சொன்னார் என்று சொல்-யிருக்கிறானே. தாவீது அவரை ஆண்டவர் என்று சொல்-யிருக்க, அவனுக்கு அவர் குமாரனாயிருப்பது எப்படி என்றார் (மத் 22:43-45).



இயேசுகிறிஸ்து பரிசேயரிடம் ""கிறிஸ்துவைக்குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்'' என்று சாதாரணமாக ஒரு கேள்வியைக் கேட்கிறார். அதற்கு அவர்கள் ""அவர் தாவீதின் குமாரன்'' என்று உடனே பதில் கூறிவிடுகிறார்கள். இதன் பின்பு இயேசு அவர்களுடைய பிரதியுத்தரத்தை ஆதாரமாக வைத்து, தம்முடைய கேள்வியை சற்று கடினமாக்குகிறார். இந்தக் கேள்விக்கு பரிசேயரால் எளிதாக பதில் கூறமுடியவில்லை. 


நாம் எல்லோருமே சத்தியத்தை உடனே அங்கீகரிக்கிறோம். நமக்கு சத்தியம் நன்றாக தெரியும் என்று பெருமையோடிருக்கிறோம். அந்த சத்தியத்தை உறுதிபண்ணவேண்டுமென்று யாராவது நம்மிடம் கூறினால், அதை எப்படி உறுதிபண்ணுவது என்பது நமக்கு தெரிவதில்லை. நமக்கு தெரிந்ததை நம்மால் உறுதிபண்ணமுடியவில்லை. நாம் அறியாமையில் இருக்கிறோம். 


இயேசுகிறிஸ்து பரிசேயரிடம் அவர்கள் விசுவாசிக்கும் சத்தியத்தை உறுதிபண்ணும் விதமாக ஒரு கேள்வியைக் கேட்கிறார். ""தாவீது அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்க, அவனுக்கு அவர் குமாரனாயிருப்பது எப்படி'' என்பது இயேசுகிறிஸ்துவின் கேள்வி. இயேசு அவர்களை கண்ணியில் சிக்கவைக்க வேண்டுமென்று திட்டமிடவில்லை. கண்ணியில் சிக்க வைக்க முயற்சி பண்ணுவது பரிசேயரின் வேலை. இயேசுகிறிஸ்துவோ அவர்களுக்குத் தெரியாத சத்தியத்தை உபதேசம் பண்ணுவதற்காகவே இந்தக் கேள்வியைக் கேட்கிறார். 


தாவீது கிறிஸ்துவை ஆண்டவர் என்று சொல்லியிருக்கிறார். அவர் தன்னுடைய ஆவியினாலேயே கிறிஸ்துவை ஆண்டவர்  என்று சொல்லியிருக்கிறார். 

சங் 110:1-ஆவது வசனத்தில் இயேசுகிறிஸ்து இங்கு மேற்கோளாக கூறுகிறார். இந்த சங்கீதத்தை வேதபாரகரும், பரிசேயரும் தெரிந்து வைத்திருக்கிறார்கள். கிறிஸ்துவைப்பற்றிய உபதேசம் தீர்க்கதரிசனமாக இந்த சங்கீதத்தில் எழுதப்பட்டிருக்கிறது. இயேசுகிறிஸ்து தீர்க்கதரிசியாகவும், ஆசாரியராகவும், ராஜாவாகவும் ஊழியம் செய்வார் என்று இந்த சங்கீதம் முன்னறிவிக்கிறது.


இயேசுகிறிஸ்து சங் 110:1-ஆவது வசனம் முழுவதையும் இங்கு மேற்கோளாக கூறுகிறார்.  இயேசுகிறிஸ்து பிதாவின் வலது பாரிசத்தில் உட்கார்ந்திருப்பது. அவர் உயர்த்தப்பட்டிருக்கிறார். உட்காருவது ஆளுகை செய்வதையும் அமைதியாக ஓய்வெடுப்பதையும் குறிக்கிறது. பிதாவின் வலது பாரிசத்தில் உட்கார்ந்திருப்பது அவருடைய தெய்வீக ஆளுகையையும், கனமகிமையையும் குறிப்பிடுகிறது. கிறிஸ்துவின் சத்துருக்கள் எல்லோரும் அவருக்கு பாதபடியாக்கிப் போடப்படுவார்கள். அவருடைய சத்துருக்கள் அவருக்கு சிநேகிதர் ஆக்கப்படுவார்கள். அல்லது  அவருடைய பாதபடியாக்கப்படுவார்கள். அதுவரையிலும் அவர் பிதாவின் வலது பாரிசத்தில் உட்கார்ந்திருக்கிறார். 


இந்த வசனத்தில் முக்கியமான பகுதி தாவீது மேசியாவை தன்னுடைய ஆண்டவராக அழைத்திருப்பதுதான். இதற்காகவே இயேசுகிறிஸ்து இந்த வசனத்தை இங்கு மேள்கோளாக கூறுகிறார். ""கர்த்தர் என் ஆண்டவரோடே சொன்னார்'' என்று தாவீது சொல்லியிருக்கிறார். 



மேசியாவின் கர்த்தத்துவத்தை நாம் அங்கீகரிக்கவேண்டும். மேசியாவை கர்த்தர் என்று அங்கீகரிக்காதவர்களால் இந்த வசனத்திற்கு சரியான வியாக்கியானம் கூறமுடியாது. தாவீது மேசியாவை        ஆண்டவர் என்று சொல்லியிருக்கிறார். அப்படியிருக்கும்போது மேசியா தாவீதுக்கு எவ்வாறு குமாரனாக இருக்கமுடியும். தாவீது மேசியாவை ஆண்டவர் என்று சொல்லியிருப்பது  தெய்வீக வெளிப்பாடு. கிறிஸ்து தாவீதுடைய ஆண்டவர் என்னும் சத்தியத்தை நாம் பற்றிக்கொள்ளவேண்டும்.  இயேசுகிறிஸ்து தாவீதின் குமாரன் என்னும் கருத்தை, அவர் தாவீதின் ஆண்டவர் என்னும் சத்தியத்தினால் வியாக்கியானம் பண்ணவேண்டும்.  


மாறுத்தரம் சொல்லவில்லை


அதற்கு மாறுத்தரமாக ஒருவனும் அவருக்கு ஒரு வார்த்தையும் சொல்லக் கூடாதிருந்தது. அன்றுமுதல் ஒருவனும் அவரிடத்தில் கேள்விகேட்கத் துணியவில்லை (மத் 22:46).



இயேசுகிறிஸ்துவின் கேள்விக்கு பரிசேயர்களால் ஒரு மாறுத்தரமும் சொல்ல முடியவில்லை. வேதவாக்கியத்தில் பரிசேயருக்கு தெளிவான ஞானமில்லையென்பதை இயேசு இங்கு உறுதிபண்ணுகிறார்.



பரிசேயருக்குத் தெரியாத சத்தியத்தை இயேசு இங்கு விளக்கியிருக்கிறார். அவர்கள் சத்தியத்தை அறியாதவர்களாக இருக்கிறார்கள்.  ஒரு வேளை மேசியாவை அவர்கள் ஆண்டவர் என்று அங்கீகரியாமலும் இருக்கலாம். கிறிஸ்து தமது தேவத்துவத்தில் தேவனாக இருக்கும்போது தாவீதின் ஆண்டவராக இருக்கிறார். கிறிஸ்து தமது மனுஷத்துவத்தில் மனுஷனாக இருக்கும்போது தாவீதின் குமாரனாக இருக்கிறார். இந்த சத்தியத்தை இயேசுகிறிஸ்து உடனே உறுதிபண்ணவில்லை. இந்த சத்தியம் இயேசுகிறிஸ்து உயிர்த்தெழும்போது உறுதிபண்ணப்படுகிறது. 



இயேசுகிறிஸ்துவின் பிரதியுத்தரத்தைக் கேட்டு பரிசேயர்களால் மாறுத்தரமாக எதுவும்  சொல்லமுடியவில்லை. அன்றுமுதல் ஒருவனும் இயேசுகிறிஸ்துவிடத்தில் கேள்வி கேட்க துணியவில்லை. இயேசுகிறிஸ்துவின் வார்த்தையினால் பலர் உணர்த்தப்பட்டிருக்கிறார்கள். என்றாலும் அவர்களில் பலர் இன்னும் மனந்திருந்தவில்லை. பரிசேயர்கள் இங்கு மனந்திருந்தியிருந்தால் அவர்கள் இயேசுவிடம் இன்னும் பல கேள்விகளையும் கேட்டிருப்பார்கள். ""இரட்சிக்கப்படுவதற்கு நாங்கள் என்ன செய்யவேண்டும்'' என்னும் முக்கியமான கேள்விகளையும் இயேசுகிறிஸ்துவிடம் பரிசேயர் கேட்டிருப்பார்கள். தாங்கள் நினைத்ததை பரிசேயரால் இயேசுகிறிஸ்துவிடம் சாதிக்க முடியவில்லை. இனிமேல் இயேசுவிடம் பேசி தங்களுக்கு பிரயோஜனமில்லையென்று தீர்மானம்பண்ணி, பரிசேயர் இயேசுவைவிட்டு போய்விடுகிறார்கள். அதன்பின்பு அவர்கள் இயேசுவிடம் ஒரு கேள்வியும் கேட்க துணியவில்லை.



இயேசு அவர்களுடைய வாயை அடைத்தார். அவர்கள் இயேசுவின் ஜீவனுக்கு எதிராக சதியாலோசனை பண்ணினார்கள். அவர்களுடைய இருதயம் திருக்கும், கபடமும் உள்ளது. அவர்களால் இயேசு கிறிஸ்துவிற்கு முன்பாக மாய்மாலமான இருதயத்தோடு தொடர்ந்து நிற்க முடியவில்லை. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு  இரண்டு நாட்களுக்கு முன்பு இந்தக் காரியம் நடைபெற்றது.





Post a Comment

0 Comments