சங்கீத விளக்கம்
8-ம் சங்கீதம்
"கர்த்தரின் மகத்துவம்"
பிரிவு:-
வசனம்.1 - கர்த்தரின் மேன்மை,
வசனம் .2- குழந்தைகளின் வாயினால் பெலன்,
வசனம். 3-8 மனிதனுக்கு தேவன் அருளிய நிலை,
வசனம்.9- கர்த்தரின் மேன்மை.
வசன விளக்கம்:-
சங்கீதம் 8:1
எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே, உம்முடைய நாமம் பூமியெங்கும் எவ்வளவு மேன்மையுள்ளதாயிருக்கிறது! உம்முடைய மகத்துவத்தை வானங்களுக்கு மேலாக வைத்தீர்.
இந்த சங்கீதத்தின் கருப்பொருள் இந்த வசனத்தில் உள்ளது. இந்த சங்கீதத்தில் உள்ள கர்த்தரின் செயல்களை வரிசையாக பட்டியலிட்டு அவை ஒவ்வொன்றையும் தியானியுங்கள். மேசியா குறித்த சங்கீதங்களில் இது இரண்டாவது சங்கீதம் ஆகும்.
சங்கீதம் 8:2
பகைஞனையும் பழிகாரனையும் அடக்கிப்போட, தேவரீர் உம்முடைய சத்துருக்களினிமித்தம் குழந்தைகள் பாலகர் வாயினால் பெலன் உண்டுபண்ணினீர்.
இயேசு எருசலேமுக்குப் பயணியாக வந்தபோது "தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா கர்த்தரின் நாமத்தினால் வருகிறவர் ஸ்தோத்தரிக்கப்படதக்கவர் உன்னதத்தில் ஓசன்னா" என்று பாடினபோது நிறைவேறினதாக இயேசு கூறினார் (மத் 21:9,15-16). குழந்தைகள் எளிதாக கர்த்தரை நம்புவதைப்போல் நம்புவதற்கு எனக்குக் கிருபை தாரும் என்று வேண்டிக்கொள்வோமாக.
சங்கீதம் 8:3-4
உமது விரல்களின் கிரியையாகிய உம்முடைய வானங்களையும், நீர் ஸ்தாபித்த சந்திரனையும் நட்சத்திரங்களையும் நான் பார்க்கும்போது,
மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷகுமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம் என்கிறேன்.
கர்த்தரின் செயல்களையும் அவரின் மகாபெரிய படைப்புகளையும் மனிதனையும் ஒப்பிட்டு பாருங்கள். அவருடைய கெம்பீரத்தை உணருங்கள். சூரியனை பற்றி கூறாததால் இது இரவில் வானத்தைப் பார்த்து பிரமிச்சு பாடிய பாடல் என்று கருதலாம். மகா பெரிய விண்மீன்களை உண்டாக்கிய சிறப்பான ஆற்றலை சிறிய அணுவின் படைப்பிலும் காணலாம். ஒரு சிறிய புல்லின் இலையானது ஆகாரம் சேகரித்தல் சுவாசித்தல் போன்ற செயல்கள் செய்வதை சிந்தித்து பாருங்கள். இப்படி எந்த ஒரு பொருளையும் நன்கு ஆராய்ந்து பார்க்கிறவன் அது மிகுந்த ஞானமாக படைக்கப்பட்டுள்ளதை கண்டறிவான். எல்லாவற்றிலும் தேவனுடைய செயலை ஆவிக்குரிய மனம் கண்டு கொள்ளும். சூரியன் சந்திரன் விண்மீன்கள் யாவும் இவ்வளவு பிரமாண்டமாக இருந்தாலும் மண்ணினால் உருவாக்கப்பட்ட எனக்கு அவர் அருளிய உணர்வும் ஆராயும் உள்ளமும் அவற்றிற்கு இல்லை
(சங் 139:14).
சங்கீதம் 8:4-5
மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷகுமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம் என்கிறேன்.
நீர் அவனைத் தேவதூதரிலும் சற்றுச் சிறியவனாக்கினீர்; மகிமையினாலும் கனத்தினாலும் அவனை முடிசூட்டினீர்.
கர்த்தரின் மாபெரும் படைப்புகளை உற்று நோக்கும்போது மனிதனை குறித்து அவர் ஏன் இவ்வளவு அக்கறை கொள்கிறார் என்பது ஆச்சரியத்தை தருகிறது. கர்த்தரின் பார்வையில் மனிதன் மதிப்பு உடையவன். எந்த மனிதனையும் ஒன்றுக்கும் உதவாதவன் என்று கருதக்கூடாது. அவனை கர்த்தர் தன் சாயலிலும் உருவத்திலும் உருவாக்கியுள்ளார். அவனுக்காக தன் ஒரேபேரான குமாரனை பலியாக கொடுக்கும் அளவிற்கு மனிதன் மிகவும் மதிப்பு மிக்கவன்.
சங்கீதம் 8:5
நீர் அவனைத் தேவதூதரிலும் சற்றுச் சிறியவனாக்கினீர்; மகிமையினாலும் கனத்தினாலும் அவனை முடிசூட்டினீர்.
தேவனுக்கும் தேவதூதர்களுக்கும் அடுத்த நிலையில் மனிதன் உள்ளான். தேவதூதர்கள் பனிவிடை ஆவியா இருக்கிறார்கள் (எபி 1:14). ஆனால் மனிதன் இயேசுவை ஏற்றுக் கொள்ளும்போது தேவனுடைய பிள்ளை ஆகும் படியான அதிகாரத்தைப் பெறுகிறான் (யோவா 1:12). இறுதியாக தேவனுடைய பிள்ளையாக இருந்து தேவதூதர்களையும் நியாயம் தீர்க்கும் அளவிற்கு உயர்த்தப்பட இருக்கிறான்
(1 கொரி 6:3). கிறிஸ்துவோடு உட்கார்ந்து (எபே 2:7) அரசாலும் (வெளி 20:6) உன்னத நிலை மனிதனுக்கு உண்டு . அந்ந நிலை தூதர்களுக்கு இல்லை.
சங்கீதம் 8:6-8
உம்முடைய கரத்தின் கிரியைகளின்மேல் நீர் அவனுக்கு ஆளுகை தந்து.
ஆடுமாடுகளெல்லாவற்றையும், காட்டுமிருகங்களையும்,
ஆகாயத்துப் பறவைகளையும், சமுத்திரத்து மீன்களையும், கடல்களில் சஞ்சரிக்கிறவைகளையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர்.
எல்லாவற்றையும் ஆள்வது என்றால் நமது விருப்பப்படி நடத்துவது மட்டுமல்ல அவற்றின் பாதுகாப்பிற்கு பொறுப்பேற்பது ஆகும். எபி 2:6-9 இல் இந்த பகுதி மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
சங்கீதம் 8:6
உம்முடைய கரத்தின் கிரியைகளின்மேல் நீர் அவனுக்கு ஆளுகை தந்து.
மனிதனுக்கு கீழ் படுத்தப்பட்டவை அநேகம் உண்டு. ஆகிலும் சகலமும் அவனுக்கு கீழ்பட்டிருக்கும் காலம் இனி வர இருக்கிறது (ரோம 8:19-23; ஏபி 2:5-8).
0 Comments