Anonymous Women's in the Bible
பெயர் சொல்லப்படாத பெண்கள்
(பகுதி-1)
கடன் பட்ட தீர்க்கதரிசியின் மனைவி (2 இராஜா 4:1-7)
இங்கே நாம் கவனிக்கும் தீர்க்கதரிசியின் மனைவி பெயர் வேதத்தில் சொல்லப்படவில்லை. இவள் தீர்க்கதரிசிகளுடைய புத்திரரில் ஒருவனுடைய மனைவி. ஆகாப் ராஜா இஸ்ரவேல் தேசத்தை ஆட்சி செய்த காலங்களில் அவன் மனைவி யேசபேல் பாகால் தீர்க்கதரிசிகளை ஆதரித்து கர்த்தருடைய தீர்க்கதரிசிகளுக்கு விரோதமாய் செயல்பட்டாள். அந்நாட்களில் இந்த ஸ்திரியின் கணவன் கர்த்தருக்குச் சாட்சியாகப் பாகாலை வணங்காததால் துன்புறுத்தப்பட்டு, தரித்திரமாக்கப்பட்டு மரித்திருக்கலாம். எனவே எலிசா தீர்க்கதரிசி இந்த ஸ்திரியின் கணவனை நன்கு அறிந்திருந்தார். இந்த ஸ்திரீக்குப் போதிய வருமானம் இல்லை. சொத்தும் இருந்ததாகத் தெரியவில்லை. இவளுடைய கணவன் கடன் வாங்கி அதைத் திரும்பச் செலுத் தாததால் கடன் கொடுத்தவன் இவளுடைய இரண்டு குமார ரையும் அடிமைகளாக்கிக்கொள்ள வந்தான். அந்நாட்களில் கடன் அதிகமானால் தன்னையும், தன் குடும்பத்தையும் விற்றுப் போடும் வழக்கம் இருந்தது. எனவே இந்தத் தீர்க்கதரிசியின் மனைவிக்கு தன் இரண்டு குமாரர்களையும் விற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
தன் கணவனை இழந்த துயரம், கடன் பாரம், இவற்றுடன் இரண்டு குமாரரும் பறிபோகும் பரிதாபமான நிலை. இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் அவள் தன் கணவன் மீது பழிசுமத்தவில்லை. இனி செய்ய வேண்டியதை ஆராய்ந்து உடனே செய்ய வேண்டிய கட்டாய நிலைமையில் இருந்தாள்.
(1) எலிசா தீர்க்கதரிசியிடம் வந்தாள் (2இராஜா 4:1-7). உமது அடியாராகிய என் புருஷன் இறந்து போனான். உமது அடியார் கர்த்தருக்குப் பயந்து நடந்தான் என்பதை அறிவீர் கடன்கொடுத்தவன் இப்பொழுது என் இரண்டு குமாரரையும் தனக்கு அடிமையாக்கிக்கொள்ள வந்தான் என்றாள். (2) எலிசா அவளை நோக்கி நான் உனக்கு என்ன செய்ய வேண்டும்? வீட்டில் உன்னிடத்தில் என்ன இருக்கிறது? சொல் என்றான்,
அதற்கு அவள் ஒரு குடம் எண்ணெய் அல்லாமல் உமது அடியாளுடைய வீட்டில் வேறொன்றும் இல்லை என்றாள். (3) அப்பொழுது அவன், நீ போய் உன்னுடைய அயல் வீட்டுக்காரர் எல்லாரிடத்திலும் அநேகம் வெறும் பாத்திரங்களைக் கேட்டு வாங்கு (4) உள்ளே போய் உன் பிள்ளைகளுடன் உள்ளே நின்று கதவைப் பூட்டி அந்தப் பாத்திரங்கள் எல்லாவற்றிலும் எண்ணெய் வார்த்து நிறைந்ததை ஒரு பக்கத்தில் வை என்றான். (5) அவள் அவனிடத்திலிருந்து போய் தன் பிள்ளை களுடன் கதவைப் பூட்டிக்கொண்டு இவர்கள் பாத்திரங்களை அவளிடத்தில் கொடுக்க அவள் அவற்றில் எண்ணெய் வார்த் தாள். (6) அந்தப் பாத்திரங்கள் நிறைந்தபின் அவள் தன் மகன் ஒருவனை நோக்கி இன்னும் ஒரு பாத்திரம் கொண்டுவா என்றாள். அதற்கு அவன் வேறே பாத்திரம் இல்லை என்றான். அப்பொழுது எண்ணெய் நின்று போயிற்று. (7) அவள் போய் தேவனுடைய மனுஷனுக்கு அதை அறிவித்தாள். அப்பொழுது அவன் நீ போய் அந்த எண்ணெயை விற்று உன் கடனைத் தீர்த்து மீந்ததைக்கொண்டு, நீயும் உன் பிள்ளைகளும் ஜீவனம் பண்ணுங்கள் என்றான்.
இந்த விதவைக்கு தேவனுடைய மனுஷன் எலிசா கூறிய வார்த்தையின் மேல் விசுவாசமும், முழுமையான கீழ்ப்படிதலும் இருந்ததால் அவர் சொன்னபடியெல்லாம் செய்தாள். அவள் கடன் பிரச்சனையில் இருந்து விடுதலை பெற்றாள். அது மாத்திரமல்ல வருமானம் இல்லாத தன் குடும்பத்திற்கு ஜீவனம்
பண்ணுவதற்கு உதவியும் கிடைத்தது. தன் பிள்ளைகள் வேலை செய்து சம்பாதிக்கும் காலம் வரும் வரை போதுமா னதாக இருந்தது. எப்படி இந்த ஒரு குடம் எண்ணெய் எல்லாப் பாத்திரங்களையும் நிரப்பும் என அவள் சந்தேகப்படவில்லை. எபி 1:11 சொல்லுகிறபடி அவளுடைய விசுவாசம் நம்பப் படுகிறவைகளின் உறுதியும் காணப்படாதவைகளின் நிச்சயமுமாய் இருந்தது. அவளும் அவள் பிள்ளைகளும் ஒரு குடம் எண்ணெய் அநேக பாத்திரங்களை நிரப்பிய பெரிய அற்புதத்தைக் கண்டார்கள். விசுவாசத்தால் எவ்வளவு பாத்திரம் வாங்கினார்களோ அவ்வளவு எண்ணெய் கிடைத்தது. கர்த்த ருடைய கரம் குறுகிப் போகவில்லை. நாமும்கூட விசுவாசம், கீழ்ப்படிதல் ஆகியவற்றைக் கைக்கொள்ளும்போது நாம் விசுவாசித்துக் கீழ்ப்படியும் அளவுக்கு அற்புதம் நடைபெறும்.
எலிசா தீர்க்கதரிசி
இவளிடம் உன்னிடம் என்ன இருக்கிறது என்று கேட்கும்போது அவள் மறைக்காமல் உள்ளதை உள்ளபடி ஒரு குடம் எண்ணெய் மாத்திரம் இருக்கிறது என்று சொன்னாள். அதற்கு எலிசா அவளிடம் சொன்னபடியே அயல் வீட்டுக்காரரிடம் வெறும் பாத்திரங்களை இரவலாகக் கேட்டு வாங்குவதற்கு விருப்பப்படாமல் எப்படிக் கேட்பது என யோசித்திருக்கலாம். ஆனாலும் தேவனுடைய மனுஷன் சொன்னபடி முற்றிலுமாய்க் கீழ்ப்படிந்ததால் போய், கேட்டு வாங்கினாள். வாங்கின பாத்திரங்களை நிரப்பினாள். பெரிய அற்புதத்தைக் கண்டாள். ஆசீர்வாதம் பெற்றாள். கீழ்ப் படிதல் அவள் குறைவை நிறைவாக்கியது. மேலும் எலிசாவிடம் தன் கணவன் கர்த்தருக்குப் பயந்து நடந்தான் என்று நற் சாட்சியும் சொன்னாள்.
அவள் பிள்ளைகள் கண்ணால் கண்ட இந்த அற்புதம் அவர்கள் வாழ்நாள் முழுவதும் மனதிலேயே இருந்திருக்கும். தேவனுக்குப் பயந்து நடக்க உற்சாகத்தைக் கொடுத்திருக்கும்.
அதற்கு மேல் அவர்களுக்குத் தங்கள் எல்லா தேவைகளுக்கும் தேவனை சார்ந்திருக்கும் விசுவாசத்தைக் கொடுத்திருக்கும், தேவனுடைய அற்புதமான பெரிய செயல்களைக் கண்டு அவர்கள் தேவனைத் துதித்திருப்பார்கள். நாமும்கூட நம் குடும்பத்தின் தேவைகளுக்காகப் பிள்ளைகளோடு சேர்ந்து
ஜெபிக்க வேண்டும். நாம் பெற்றுக்கொண்ட நன்மைகளையும், அற்புதங்களையும் பிள்ளைகளோடு பகிர்ந்து கொள்ளவேண்டும். அப்போதுதான் நம் பிள்ளைகளும் தேவனைச் சார்ந்து அவர் மேல் விசுவாசம் வைத்து வாழக்கற்றுக்கொள்வார்கள்.
கடைசியாக இவள் தன் பிள்ளைகளைப் பாதுகாக்கும் பொறுப்புணர்ச்சியோடு செயல்பட்டாள். பிள்ளைகள் மீது அன்பு செலுத்துகிறவளாய், அக்கரை உள்ளவளாய் இருந்தாள். பிள்ளைகளைக் கடனுக்காகக் கொடுக்கவில்லை. நாமும்கூட கர்த்தர் நமக்குக் கொடுத்த பிள்ளைகள் மீது அன்பு செலுத்தி பொறுப்புணர்ச்சியோடு பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
அவள் தன் பிரச்சனையை எலிசா தீர்க்கதரிசியிடம் சொன்னதுபோல நாமும் நமக்கு இருக்கும் பிரச்சனைகளை எலிசாவைக் காட்டிலும் மகா பெரிய தீர்க்கதரிசியாம் இயேசுவிடம் சொல்லுவோம். சங் 68:5 சொல்லுகிறபடி அவர் விதவைகளுக்கு நியாயம் விசாரிப்பார். அவரை விசுவாசித்து கீழ்ப்படிவோம். ஒரு குடம் எண்ணெய் ஆசீர்வதிக்கப்பட்டதி னால் அவள் பிரச்சனை நீங்கி குறைவு நிறைவானது. நம்மிடம் இருப்பதை நாம் அற்பமாய் எண்ணக்கூடாது. கர்த்தர் நமக்கு சுகம், பெலன், பிள்ளைகள், வேலை இப்படி அநேகம் கொடுத்திருக்கிறார். கர்த்தருடைய கிருபை நம்மோடு இருக்கும் போது அவருடைய கிருபை வெறுமையானவற்றை நிரப்பப் போதுமானது. இவை பெரிய ஆசீர்வாதத்தைக் கொண்டுவரும் என நாம் விசுவாசிக்கவேண்டும். கர்த்தர் தாமே உங்களைத் தமது நிறைவான பலன்களால் ஆசீர்வதிப்பாராக👍👍👍
No comments:
Post a Comment